Dalai Lama's formula for happiness
Dalai Lama's formula for happinesshttps://tamil.oneindia.com

தலாய் லாமா சொல்லும் மகிழ்ச்சிக்கான சூத்திரம்!

‘இன்றைய உலகில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ நினைக்கிறார்கள். உண்மையில் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது அவரவர் உரிமை. ஆயினும் நாம் பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். அவற்றில் பெரும்பாலானவை நாமே ஏற்படுத்திக் கொள்பவை. இன்னும் சற்று ஆழமாகப் பார்த்தால் அன்பும் கனிவுமே நம் இருப்புக்கு ஆதாரம்’ என்கிறார் தலாய் லாமா.

உண்மையிலேயே, நாம் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை மட்டுமே விரும்புகிறோம். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பதும், அதை நோக்கி செல்வதும் அவரவர் உரிமை. ஆனால், அனைவரும் எந்நேரமும் எக்காலமும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா என்பதுதான் இங்கு கேள்வி.

மகிழ்ச்சி என்பது எதில் இருக்கிறது? இதற்கு பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லலாம். ஒருவருக்கு காபி குடிப்பதில் மகிழ்ச்சி என்றால், இன்னொருவருக்கோ கஞ்சி குடிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கலாம். இது அவரவரின் பிறப்பு, சூழல், வளர்ப்பு இவற்றிற்கு ஏற்பவே ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி என்பது நிர்ணயிக்கப்படுகிறது பேச்சாளருக்கு பேசுவதில் மகிழ்ச்சி. எழுத்தாளருக்கு எழுதுவதில் மகிழ்ச்சி. விளையாடுபவர்களுக்கோ மைதானத்தில் மகிழ்ச்சி, குழந்தைகளுக்கு பள்ளியில் மகிழ்ச்சி… இப்படி பல்வேறு விதமான மகிழ்ச்சிகள் நம்மைச் சுற்றி உள்ளன. எப்போதுமே இதே மகிழ்ச்சி நீடித்திருக்கிறதா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும்.

ஒரு நேரம் மகிழ்ச்சியாக இருக்கும் மனம், அடுத்த நேரம் ஏதோ ஒரு பிரச்னைக்காக சுருண்டு விடுகிறது. இதுதான் உண்மை. சரி இந்தப் பிரச்னை எதிலிருந்து வருகிறது, யார் காரணம் என்று ஆராய்ந்தால் தலாய் லாமாவின் கருத்துப்படி ஒருவரின் மகிழ்ச்சியோ பிரச்னையோ அவரவரின் மனதில் இருந்தும், அவரின் செயல்களில் இருந்துமே துவங்குகிறது.

காலை நேர பரபரப்பான சூழலில் மனைவி ஏதோ ஒரு வார்த்தையை கடுமையாக பேசி விட, அங்கு கணவனின் மகிழ்ச்சி பறிபோகிறது. இதே சிந்தனையுடன் கணவன் அலுவலகம் செல்ல மனைவியும் அவள் வேலையை பார்க்க செல்கிறார். ஆனால், மனைவியின் மனதிலும்தான் காலையில் கடுமையாக பேசி விட்டோமோ என்று நினைத்து அந்த நாளின் மகிழ்ச்சியைத் தொலைக்கிறார். இங்கு மனைவியின் வார்த்தைகளில் இருந்தே அவர்களின் மகிழ்ச்சி பறிபோய் பிரச்னை துவங்குகிறது. சற்றே நிதானமாக யோசித்துப் பார்த்தால் சிறிய விஷயமோ அல்லது பெரிய விஷயமோ ஒவ்வொரு பிரச்னைக்கும் மூல காரணம் யாரோ ஒருவராகத்தான் இருப்பார்கள் அல்லது நாமாகத்தான் இருப்போம். மனைவி அந்த நேரத்தில் சற்றே யோசித்து நிதானத்துடன், அன்புடன் பேசி இருந்தால் அந்த நாள் கணவருக்கும் மனைவிக்கும் பிரச்னை இன்றி மகிழ்ச்சியுடன் கழிந்திருக்கும். இந்த இடத்தில் அன்பும் கனிவுமே அடிப்படையாகிறது.

நீங்கள் அன்புடன் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் சக்தி உண்டு. மகிழ்ச்சியை தரக்கூடிய சக்தி உண்டு. கனிவுடன் செய்யும் செயல்களுக்கு பிரச்னையை தகர்த்து மகிழ்ச்சியை மலர வைக்கும் சக்தி உண்டு.

இதையும் படியுங்கள்:
சக மனிதர்களை சரியாகப் புரிந்துகொள்ள சிறப்பான சில வழிகள்!
Dalai Lama's formula for happiness

காலையில் அந்தப் பேருந்து நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அலுவலகம் செல்லும் அந்தப் பெண்ணுக்கு இடம் கிடைப்பது என்பது பேருந்தில் சற்றே சிரமமாகவே இருக்கும். ஆனாலும், அவள் தினமும் சந்திக்கும் ஒரு மாற்றுத்திறனாளி பெண் மீது கருணையுடன் நின்றபடியே பேசி மகிழ்வாள். இப்போது என்ன நடக்கிறது தெரியுமா? அவளுக்கு முன் அந்த பேருந்து நிலையத்துக்கு வரும் மாற்றுத்திறனாளி பெண் இந்தப் பெண்ணுக்கும் சேர்த்து இருக்கையை பிடித்துத் தருகிறாள். இந்தக் கனிவு அந்தப் பெண்ணுக்கு உண்டான பிரச்னையை தீர்த்து வைக்கிறது. அந்த அன்பு அந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதைதான் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான சூத்திரமாக தலாய்லாமா குறிப்பிடுகிறார்.

நீங்கள் எதை தருகிறீர்களோ அதைத்தான் இந்த உலகம் உங்களுக்குத் திரும்ப தரும். அது அன்பாக இருந்தாலும், வெறுப்பாக இருந்தாலும். நாம் அன்பை விதைத்து விட்டு மகிழ்ச்சியை கனிகளாக ருசிப்போமே. கனிவைத் தந்து விட்டு கவலையை தவிர்ப்போமே.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com