தினமும் குப்பையில் வீசும் இந்த 3 பொருள்... உங்க செடிகளுக்கு 'தங்கம்' மாதிரி தெரியுமா?

Food Waste
Food Waste
Published on

தினமும் இரவு உணவு முடிந்ததும் சமையலறையைச் சுத்தம் செய்யும்போது நாம் செய்யும் முதல் வேலை, காய்கறிக் கழிவுகள், பழத்தோல்கள், முட்டை ஓடுகள் என அனைத்தையும் வாரி ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் குப்பைத் தொட்டியில் வீசுவதுதான். "அப்பாடா, குப்பை போச்சு, வீடு சுத்தமாச்சு" என்று நாம் நிம்மதி பெருமூச்சு விடுகிறோம். ஆனால், அதே நேரத்தில் நம் வீட்டு பால்கனியிலோ அல்லது தோட்டத்திலோ இருக்கும் செடிகள் சத்து இல்லாமல் வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றன. நம் கண்ணுக்கு குப்பையாகத் தெரிவது, மண்ணுக்கு 'ஊட்டச்சத்து தங்கமாக' இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

1. பெரும்பாலும் வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவிட்டுத் தோலைக் குப்பையில்தான் போடுவோம். ஆனால், இனி அப்படிச் செய்யாதீர்கள். அந்தத் தோலில் பொட்டாசியம் சத்து நிறைந்து கிடக்கிறது. ஒரு ஜாடியில் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய வாழைப்பழத் தோல்களைப் போட்டு இரண்டு நாட்கள் ஊற வையுங்கள். தண்ணீர் லேசான தேநீர் நிறத்திற்கு மாறியதும், அந்த நீரை உங்கள் செடிகளுக்கு ஊற்றுங்கள். இது செடிகளுக்குப் பூக்களையும், காய்களையும் வாரி வழங்கும் ஒரு டானிக் போலச் செயல்படும்.

இதையும் படியுங்கள்:
ஒரு நாளைக்கு ஒரு முட்டை ok... அதற்கு மேல் சாப்பிட்டால் என்ன ஆகும்?
Food Waste

2. அடுத்தது முட்டை ஓடு. இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. முட்டை ஓடுகளைக் கழுவிக் காயவைத்து, மிக்ஸியில் பொடித்து அல்லது கைகளால் நசுக்கி செடிகளின் வேர்ப்பகுதியில் தூவி விடுங்கள். இது தக்காளி போன்ற செடிகள் உறுதியாக வளர உதவும். அதேபோல, ஃபில்டர் காபி போட்ட பிறகு மிஞ்சும் காபி சக்கையைத் தூக்கி எறிய வேண்டாம். அதை மண்ணுடன் கலக்கும்போது மண் தளர்வாகி, வேர்கள் சுவாசிக்க உதவும். நைட்ரஜன் சத்து செடிக்குக் கிடைக்கும்.

3. நாம் செய்யும் தவறு என்னவென்றால், மண்ணிலிருந்து சத்துக்களை எடுத்து வளரும் காய்கறிகளை நாம் சாப்பிடுகிறோம். ஆனால், அதன் மிச்சங்களை மீண்டும் மண்ணிற்குக் கொடுக்காமல், பிளாஸ்டிக் பையில் போட்டுக் குப்பைக் கிடங்கிற்கு அனுப்புகிறோம். இதனால் இயற்கையான சுழற்சி உடைபடுகிறது. சமையலறைக் கழிவுகளை மீண்டும் மண்ணில் சேர்க்கும்போது, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் அவற்றைச் சிதைத்து, மீண்டும் செடிகளுக்குத் தேவையான உணவாக மாற்றுகின்றன. இதுதான் இயற்கையின் நியதி.

இதையும் படியுங்கள்:
உடல் எடை குறைப்புக்கு காய்கறி ஜூஸ் உதவுமா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Food Waste

கவனிக்க வேண்டியவை: இதற்காக நீங்கள் பெரிய கம்போஸ்ட் தொட்டி வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிறிய வாளியில் காய்கறி, பழக்கழிவுகளைச் சேகரித்தாலே போதும். ஆனால், சமைத்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், இறைச்சி, பால் பொருட்கள் போன்றவற்றை இதில் சேர்க்கக் கூடாது. அது துர்நாற்றத்தை உண்டாக்கிவிடும். வெறும் பச்சைக்கழிவுகள் மட்டுமே செடிகளுக்கு அமுதம்.

ஆரம்பத்தில் இது ஒரு பெரிய வேலையாகத் தோன்றலாம். ஆனால், நீங்கள் தூக்கி எறிய நினைத்த ஒரு வாழைப்பழத் தோல், உங்கள் ரோஜாச் செடியில் ஒரு புதிய பூவாக மலர்வதைப் பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com