‘ஃப்ராய்டியன் ஸ்லிப்’ என்பது ஒருவர் வேகமாகப் பேசும்போது நாக்கு சறுக்கி தவறுதலாகப் பேசுவதைக் குறிக்கிறது. பொதுவாக நமது மூளை, பேச வேண்டியதை சிந்திக்கும்போது அதை அப்படியே வெளியே சொல்லாமல் மனதிற்குள் எடிட் செய்து அதன் பிறகுதான் பேசுகிறோம். ஆனாலும், பேசும்போது ஒரு நிமிடத்திற்கு 150 வார்த்தைகள் பேசினால் அதில் 22 தவறுகள் வரலாம் என்றும், இது சகஜம் என்றும் சொல்கிறார்கள்.
சிக்மண்ட் ஃப்ராய்ட் என்ற உளவியல் மருத்துவர், ‘ஒரு நபர் பேசும்போது நாக்கு சறுக்கல்கள் நிகழ்வது ஒரு உளவியல் கோட்பாட்டைக் குறிக்கிறது. அவர் மன அழுத்தத்தில் இருப்பதைக் குறிக்கிறது. அவரது அடக்கப்பட்ட அல்லது ரகசிய ஆசைகளை வெளிப்படுத்துகிறார்’ என்கிறார். அவர் பெயராலேயே ‘பிராய்டியன் ஸ்லிப்’ என்று இது அழைக்கப்படுகிறது.
ஏன் நாக்கு சறுக்கல்கள் (Slip of the tongue) ஏற்படுகின்றன?: சரியான தூக்கம் இல்லாததால், கவனச் சிதறல் ஏற்படுவதால், பிறருடைய சிந்தனையால் ஈர்க்கப்படுவதால், ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதால் (மல்டி டாஸ்கிங்) நாக்கு சறுக்கல்கள் ஏற்படுகின்றன.
இதை எப்படி தவிர்ப்பது?
1. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்: மூளை அதிக வேலை செய்வதன் காரணமாகவே இந்த ஃப்ராய்டியன் ஸ்லிப் நிகழ்கிறது. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போது மூளை மிக அதிக அளவில் தூண்டப்படுகிறது. எதிர்மறை எண்ணங்களும் இந்த நேரத்தில் தலைதூக்கும். எனவே, ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே செய்ய வேண்டும்.
2. எண்ணங்களை கவனித்தல்: மனதில் எப்போதும் தேவையில்லாத எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். அதை நம்மால் தவிர்க்க முடியாது. தவிர்க்க நினைத்தால் அதிகமாக நம்மை அறியாமலேயே அவற்றை நினைப்போம். அதற்கு பதிலாக அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது சோகமாக, வருத்தம் தரும் சௌகரியம் இல்லாத உணர்வுகளாக இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொண்டு கவனிக்க வேண்டும்.
3. மாற்று வழி கண்டுபிடித்தல்: ஒரு விஷயத்தை செய்யப் பிடிக்கவில்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்க விரும்பவில்லை என்றால் அதிலிருந்து நமது கவனத்தை முழுவதுமாக திசை திருப்பி வேறொரு விஷயத்தில் ஈடுபடுத்த வேண்டும். பிடிக்காத விஷயங்களை விட்டுவிட்டு உங்களுக்கு மிகப் பிடித்த விஷயங்களில் மனதை திசை திருப்பலாம்.
4. அந்த எண்ணத்தை தள்ளிப்போடுதல்: தேவையில்லாத ஏதோ ஒரு எண்ணம் உங்களுக்கு வந்துகொண்டே இருந்தால் அந்த எண்ணத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அதற்குரிய ஒரு நேரத்தை நிர்ணயித்துக் கொண்டு அந்த நேரத்தில் மட்டும் அதை நினைக்குமாறு செய்யலாம். இதனால் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு இப்போது உள்ள வேலைகளில் உங்களுடைய கவனம் குவியும். யோகா செய்தல் மிகவும் ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். மனதை அமைதிப்படுத்தும்.