பெற்றோர்களே! உங்க பிள்ளைகளுக்கு இதையெல்லாம் கட்டாயம் சொல்லிக் கொடுங்க ப்ளீஸ்.
Parenting என்பது நமது குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைக்கும் ஒரு சிறந்த பொறுப்பாகும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பது மட்டுமின்றி, அவர்களுக்கான சில பண்புகள் மற்றும் பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். இது அவர்களை எதிர்காலத்தில் சிறந்த மனிதர்களாக மாற்றுவதற்கு பெரிதளவில் உதவும். இப்பதிவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எதுபோன்ற விஷயங்களைக் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
கருணை மற்றும் அன்பு: பெற்றோர்கள் முதலில் குழந்தைக்கு கற்றுத் தர வேண்டியது பிறரிடம் கருணை மற்றும் அன்புடன் இருக்க வேண்டும் என்பதைத்தான். அவர்கள் பிறருடன் அன்பாக நடந்து கொள்வதை ஊக்குவிக்கவும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் முக்கியத்துவத்தை கற்றுத் தர வேண்டும். இத்தகைய பண்பை புகுத்துவது, குழந்தைகளை நல்லவர்களாக இருக்க வைக்கும்.
உணர்வுகள்: குழந்தைகள் தங்களின் சொந்த உணர்வுகளையும், மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள பெற்றோர்கள் உதவ வேண்டும். குழந்தைகள் தைரியமாக பேசவும், கேட்கவும் ஊக்குவிக்கவும். உணர்ச்சி நுண்ணறிவை வளர்ப்பதன் மூலம் குழந்தைகள் தங்களின் உணர்வுகளை திறம்பட நிர்வகித்து, பிறருடன் நன்றாக பழக வழிவகுக்கும்.
தோல்வி மற்றும் விடாமுயற்சி: வாழ்க்கை என்பது முழுவதும் சவால்களால் நிரம்பியதாகும். எனவே குழந்தைகளுக்கு தோல்வி மற்றும் விடாமுயற்சியின் உண்மைத் தன்மையை புரிய வைக்க வேண்டும். தோல்விகளே, புதிதாக கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு என்பதைத் தெரியப்படுத்தவும். மேலும் கடின உழைப்பு, நேர்மறையான சிந்தனையின் மதிப்பை அவர்களுக்கு கற்பிக்கவும். இதுபோன்ற விஷயங்கள் அவர்கள் துன்பத்தில் துவண்டு போகாமல் இருக்க உதவும்.
பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல்: குழந்தைகளுக்கு, அவர்கள் செய்யும் செயல்கள் மற்றும் அதனால் வரும் முடிவுகளுக்கு பொறுப்பேற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை கற்பிக்கவும். இதன் மூலமாக அவர்களது வாழ்வில் அவர்களது பங்களிப்பை முழுமையாகப் புரிந்து கொள்வார்கள். தேவையில்லாமல் பிறர் மீது பழிபோட்டு, வாழ்க்கையை வீணடிக்க மாட்டார்கள். பொறுப்புணர்வை வளர்ப்பதன் மூலம் குழந்தைகள் தங்களுக்கான முடிவுகளை சரியாக எடுக்க கற்றுக் கொள்கிறார்கள்.
நிதி சார்ந்த கல்வியறிவு: சிறுவயதில் இருந்தே பணத்தை எப்படி கையாள்வது மற்றும் நிதி சார்ந்த விஷயங்களை குழந்தைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகப்படுத்துங்கள். சேமிப்பு, பட்ஜெட் மற்றும் புத்திசாலித்தனமான நிதி மேலாண்மை போன்றவற்றை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். இதன் மூலமாக குழந்தைகள் எதிர்காலத்தில் தங்களது நிதிகளை நிர்வகிப்பதற்கு உதவியாக இருக்கும்.
சுய பாதுகாப்பு: குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான தூக்கம் போன்ற ஆரோக்கியமான பழக்கங்களையும் கற்பிக்க வேண்டும். அதேநேரம் மன அழுத்தத்தை நிர்வகித்தல், நினைவாற்றல் பயிற்சி, நேர்மறையான சுய சிந்தனை போன்றவற்றை கற்பிப்பதால், உங்கள் குழந்தைகள் தைரியமாக இருப்பார்கள். இத்துடன் மோசமானவர்களிடமிருந்து எப்படி தங்களைத் தானே தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான அறிவுரையையும் வழங்குங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பதன் மூலம், எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த மனிதர்களாக இருக்க உதவும். எனவே ஒவ்வொரு பெற்றோரும், தங்களின் கடமையறிந்து குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுங்கள்.