

நவீன காலத்தில் பலரது வீடுகளில் பிரிட்ஜ் உபயோகப்படுத்தப்படுகிறது. உணவு கெட்டுபோய் விடாமல் இருக்கவும், காய்கறிகள் வீணாகிவிடாமல் இருப்பதற்காக பிரிட்ஜில் வைக்கப்படுகிறது. பிரிட்ஜின் பெட்டிகளில் அழுக்கு இருந்தால் ஒரு துணியை வைத்து துடைத்து சுத்தம் செய்துவிடலாம்.
அதேபோல் வெளியில் இருந்தாலும் எளிதில் சுத்தம் செய்துவிடலாம். ஆனால் பிரிட்ஜை திறந்தவுடன் கதவின் ஒரத்தில் உள்ள ரப்பரில் நாள் கணக்கில் கரை படிந்து கருப்பு நிறத்தில் இருக்கும். இது சிலர் வீடுகளில் பூஞ்சைகளாக கூட மாறியிருக்கும். ஆனால் அதை சரியாக கவனிக்காமல் விட்டுவிடுவோம்.
ஆனால் இது நிச்சயம் பெரிய வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும் இந்தக் கறைகளின் காரணமாக, பல நேரங்களில் குளிர்சாதனப் பெட்டியில் தொழில்நுட்பச் சிக்கல்கள் தோன்றத் தொடங்குகின்றன.
எனவே, இதுபோன்ற பிரச்னைகள் இல்லாமல் இருப்பது முக்கியம். அதனால் இந்த அழுக்கை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே ஈஸியாக எப்படி சுத்தம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் - சமையல் சோடா மற்றும் எலுமிச்சை சாறு:
இரண்டு தேக்கரண்டி சமையல் சோடாவை எடுத்து, தேவையான அளவு எலுமிச்சை சாறுடன் கலக்கவும். பிறகு இந்தக் கலவையை பிரிட்ஜின் அந்த ரப்பர் பகுதியில் தடவி 5 நிமிடங்கள் பல் துலக்கும் பழைய பிரஷ் அல்லது ஏதுவான பிரஷ்ஷை வைத்து நன்றாக தேய்க்கவும். பிறகு சுத்தமான தண்ணீரை ஊற்றி கழுவினால் போதும். நொடி பொழுதில் பிரிட்ஜின் ரப்பரின் கருமை நீங்கி சுத்தமாகிவிடும்.
இதே போல் பல் துலக்கும் பேஸ்ட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். நம் பல் துலக்குவது போலவே, பிரஷில் பேஸ்டை அப்ளை செய்து நன்கு தேய்க்கவும். பிறகு அதை கழுவிவிட்டால் போதும் புதிது போல பிரகாசிக்கும்.
சுத்தம் செய்தல் என்றாலே வினிகர் ஒரு சிறந்த தேர்வாகும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதில், 5 முதல் 6 சொட்டு வினிகரை கலந்து அந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டில் நிரப்பி அழுக்கு படிந்த இடத்தில் ஸ்ப்ரே செய்து சுத்தம் செய்யலாம்.
அதேபோல பலரது வீடுகளிலும் கட்டாயம் இருக்கும் எலுமிச்சை சாருடன், ஒரு ஸ்பூன் சமையல் சோடாவை பயன்படுத்தி இந்த ரப்பரில் ஊற்றி சுத்தம் செய்தால் அழுக்கு காணாமல் போய்விடும்.