உறவுகளை வளர்ப்பதே மகிழ்ச்சி!

Happy Family
Happy FamilyHappy Family
Published on

றவுகள், குடும்பம் என்கிற மாளிகையைத் தாங்கிப் பிடிக்கின்ற தூண்கள். ஒவ்வொருவரையும் இணைக்கின்ற சங்கிலிப் பிணைப்புகள். சங்கிலியில் ஒரு கண்ணி அறுந்தாலும் அணியவியலாது. அதுபோல, குடும்ப வாழ்க்கையில் ஒரு உறவு பிரிந்தாலும் அது மேன்மையாக இருக்காது.

உறவு முறைகள் என்போர் அன்பின் அடையாளங்கள். பாசத்தின் பிணைப்புகள். எல்லைகளைக் கடந்து எங்கோ இருக்கும் தனது மகனுக்கு உடல் நலமில்லாவிட்டால் தாய்க்கும், தந்தைக்கும் தடுமாற்றம் ஏற்படுகிறது. வீட்டில் ஒருவர் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். சுற்றிலும் சுற்றங்கள் சூழ்ந்திருக்க விழிகளைத் திறந்து பார்க்கும் அவருக்கு முகமெல்லாம் மலர்ச்சி, மகிழ்ச்சி. காரணம் குருதிசார் உறவுகள் சுற்றி இருக்கையில் இயல்பாகவே மனதில் ஏற்படும் பாதுகாப்பு உணர்வுதான் அது.

தாத்தா - பாட்டி, சித்தி - சித்தப்பா, அத்தை - மாமா, அண்ணன் - தம்பி, அக்காள் - தங்கை என்று இவர்களுக்கு மத்தியில் வளரும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் அதிகமாகக் கிடைக்கின்றது. அம்மா அடித்தால் பாட்டியிடம் ஓடுகின்றனர். அப்பா அடித்தால் தாத்தாவிடம் தஞ்சமடைகின்றனர். அரவணைக்கச் சுற்றிலும் உறவுகள் இருக்கும்பொழுது குழந்தையின் மனதில் தன்னம்பிக்கை உணர்வுகள் தானாகவே துளிர் விடுகின்றன. சுற்றிலும் உறவுகள் கூடி இருக்கும்போது மன வலிமையும் கூடுகிறது. இதுதான் கூட்டுக் குடும்பத்தின் மேன்மை. உறவுகளின் மேன்மை.

இன்றைய சூழலில், பரபரப்பாகும் பந்தய வாழ்க்கைச் சுழற்சியில் நாட்கள் நகர்கின்றன. வாரங்கள் விரைகின்றன. பழைய நண்பனின் முகம் பார்க்க முடியவில்லை. நேரமில்லை என்ற ஓர் ஒற்றை வார்த்தையில் சொல்லி விடுகிறோம்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே இருக்கு அவசரத்திற்கு உதவும் கை மருந்துகள்!
Happy Family

என்ன காரணம்...? வசதிகளும், வாய்ப்புகளும் பெருகப் பெருக தேடல்கள் எல்லையற்று நீண்டு கொண்டே போகின்றன. அதனால் சிந்தனைகளும் மாறுபடுகின்றன. வாழ்க்கைக்கான தேவைகள் என்ற நிலைமாறி, தேவைகளுக்கான வாழ்க்கை என்ற நிலை உருவாகி வருகிறது. பிறரைப் பற்றிய சிந்தனையற்ற ஓட்டம் மனிதனைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றது.

தன் நலத் தேடல்களும் இயந்திர வாழ்க்கையின் வேகமும், ‘மனிதம்’ காணாமல் போய்விடும் அபாயத்தை உணர்த்துகின்றன. ஆமாம், ஒரு மரம் தளிர்க்க நல்ல நிலமும் நீரும் தேவைப்படுவது போல மனித வாழ்வு சிறக்க உறவு முறைகளின் அன்பும் அரவணைப்பும் அவசியம்.

உறவுகள், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஒருவருக்காக ஒருவர் உருகித் தவித்து அன்பு செலுத்தும் வீட்டில்தான் ஆனந்தம் அமைதி கொள்கிறது. அன்பு கொண்ட உள்ளத்தை விட உலகில் உயர்ந்தது வேறென்ன...? அந்த அன்பால் உறவுகளை அணைப்போம். அந்த உறவுகள்தான் வாழ்க்கையை மேன்மையாக்கும். உறவுகளை வளர்ப்போம்; மேன்மையுடன் வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com