மாமியார் உங்கள் பேச்சைக் கேட்க மகத்தான சில யோசனைகள்!

மாமியார் உங்கள் பேச்சைக் கேட்க மகத்தான சில யோசனைகள்!

நேற்று, இன்று, நாளை... எப்போதுமே புகுந்த வீட்டிற்குச் செல்லும் ஒரு பெண், நல்ல பெயரைச் சம்பாதிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. தனது மாமனார், மாமியாரை ஒரு ஆண் கூட எளிதில் சமாளித்து நல்ல பெயரை வாங்கி விடுவான். ஆனால், இந்த சமூகத்தில் ஒரு பெண் தனது மாமனார், மாமியாரை சமாளித்து வாழ்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது!

மாமியார் 'கொடுமை' தாங்க முடியாமல் 60 சதவீதம் பெண்கள் கஷ்டப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் வீம்பு பிடிப்பதாலேயே பெரும்பாலும் பிரச்னைகள் வருகின்றன. வயதாகிவிட்ட காரணத்தினால் மாமியார்களுக்கு எதையும் சொல்லிப் புரிய வைக்க முடியாது. எனவே, மருமகள்கள் கொஞ்சம் மனது வைத்தால், கொஞ்சம் இறங்கி வந்தால், புகுந்த வீட்டில் அவர்கள் நல்ல பெயரைச் சம்பாதிக்கலாம். இதோ அதற்கான சில டிப்ஸ்:

* நீங்கள் ஒரு புது மருமகள் என்பதைப் போல, மாமியார் என்ற 'பதவி'யும் அவர்களுக்குப் புதிதுதான். எனவே, எதற்கும் பயப்படாமல், 'எல்லாம் நன்மைக்கே' என்ற மன நிலையுடன் இருங்கள். நல்லதையே பேசுங்கள், நல்லதையே செய்யுங்கள். மாமியார் மனது விரைவில் மாறும்!

* புகுந்த வீட்டுக்கு செல்லும் நீங்கள், உங்கள் மாமியாரை உங்கள் தாய்க்கு சமமாக நடத்துங்கள். உங்கள் அம்மாவுக்கு என்ன என்னவெல்லாம் செய்ய நினைக்கிறீர்களோ, அவற்றை உங்கள் மாமியாருக்கும் செய்யுங்கள். (நல்ல விஷயங்கள் மட்டும் தான்!)

* உங்கள் கணவருக்கும், அவருடைய தாய்க்கும் இடையில் திடீரென்று நீங்கள் வந்திருப்பதால், உங்கள் மாமியார் சிறிது தடுமாறத்தான் செய்வார். உங்களுடன் எந்த விஷயத்திலும் உங்கள் மாமியார் மல்லுக்கு நிற்கத்தான் செய்வார். எனவே, கொஞ்சம் உணர்வுப் பூர்வமாக இந்த விஷயத்தை அணுகினால், மாமியாரை வீழ்த்தலாம்.

* உங்கள் மாமியாரை எப்போதும் மரியாதையாக நடத்துங்கள். வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களையும் நஷ்டங்களையும் அவர் கடந்து வந்திருப்பார். அனைத்தையும் பற்றி அவருடன் உண்மையான அக்கறையுடன் கேளுங்கள். இதனால் உங்களிடம் அவருடைய அன்பு பெருக ஆரம்பிக்கும்.

* புகுந்த வீட்டுக்குள் நீங்கள் போகும்போது, அங்கு உள்ளவர்களைப் பற்றி நீங்களோ அல்லது உங்களைப் பற்றி அவர்களோ அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது. கொஞ்சம் நேரம் கொடுங்கள்; விட்டுப் பிடியுங்கள். அவர்கள் மனதை வெல்லலாம்!

* உங்கள் மாமியாரிடம் மட்டுமின்றி, உங்கள் கணவருடைய குடும்பத்தினர் அனைவரிடமும் ரொம்ப அக்கறையாக இருங்கள். அவர்களுடைய இன்பம், துன்பம், வேலை, படிப்பு என்று அனைத்திலும் அக்கறை காட்டினால் உங்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

* எந்த முக்கியமான விஷயமானாலும் சரி, அவற்றை உங்கள் மாமனார், மாமியாரிடம் உடனடியாகத் தெரிவித்து விடுங்கள். நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருக்கிறீர்களா? அடிக்கடி அவர்களுடன் பேசுங்கள். உங்கள் மற்றும் உங்களின் குழந்தைகளின் போட்டோக்களை அவர்களுக்கு அனுப்பி வையுங்கள். அவர்கள் மனம் இளகும்!

* உங்கள் மாமனார், மாமியாருடைய அறிவுரைகளை எப்போதும் நிராகரிக்க வேண்டாம். உங்களை விட அவர்களுக்கு வயதும் அனுபவமும் அதிகம்தான். அவர்களுடைய சில அறிவுரைகள் உங்களுக்கு சரியாகப் படவில்லையென்றால், வேறு நல்ல ஐடியாக்களை பொறுமையாக எடுத்துக் கூறுங்கள். நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

* உங்கள் குழந்தைகளை எப்போதும் உங்கள் மாமனார், மாமியாருடன் இருக்க விடுங்கள். தங்கள் பிள்ளைகள் மேல் இருக்கும் அன்பை விட, தங்களுடைய பேரன், பேத்திகளை கவனித்துக் கொள்வதில் அவர்களுக்கு அலாதிப் பிரியம் இருக்கத்தான் செய்யும். இதனால் உங்களிடமும் அவர்களுடைய அன்பு அதிகரிக்கும்.

* எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி, தடதடவென்று கோபம் கொண்டு பொரிந்துவிடாதீர்கள். கணவர், மாமனார், மாமியார் என்று அனைவரையும் ஒன்றாகக் கூப்பிட்டு, அவர்களுடன் கலந்து பேசி பிரச்னையை சுமூகமாகத் தீர்த்து வையுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com