

நமது வீடுகளில், அன்றாட அவசரத்தில் செய்யும் சிறு சிறு தவறுகள் அலட்சியங்கள், நமக்கே தெரியாமல் பெரிய விபத்துகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பை அளித்துவிடக்கூடும். கவனக்குறைவால் வீட்டில் நாம் செய்யும் தவறுகள் என்னென்ன அவற்றை எப்படி சரி செய்யலாம் என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
மின்சாரப் பயன்பாட்டில் அதீதக் கவனம்:
இன்றைய டிஜிட்டல் உலகில் அதிக நேரம் செல்போன் மற்றும் லேப்டாப் பயன்படுத்துகிறோம். பல நேரங்களில் சார்ஜரைப் பிளக் பாயிண்டிலேயே மாட்டி வைத்துவிட்டு, சுவிட்சை ஆஃப் செய்யாமல் விட்டுவிடுகிறோம். இது 'ஷார்ட் சர்க்யூட்' ஏற்பட முக்கியக் காரணமாகிறது. அதேபோல், சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும்போதே செல்போனைப் பயன்படுத்துவது பேட்டரி வெடிக்கவும் வழிவகுக்கும். ஈரக்கையோடு சுவிட்ச் போடுவதைத் தவிர்க்கவேண்டும்.
சமையலறையில் விழிப்புணர்வு:
சமையலறையில் சமையல் முடிந்ததும் சிரமம் பார்க்காமல் கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை அணைக்க மறக்கக்கூடாது. அடுப்பிற்கு அருகில் பிளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் கைப்பிடித் துணிகளை வைக்கக் கூடாது. அவற்றில் எளிதில் தீப்பற்றக்கூடிய அபாயம் உள்ளது. மேலும் செல்போன் பேசிக்கொண்டே சமையல் செய்வது கவனத்தைச் சிதறடித்து விபத்திற்கு வழிவகுக்கும்.
தரையில் ஈரப்பதம்:
வீட்டை தண்ணீர் மற்றும் லிக்விட் கொண்டு மாப் செய்து முடித்ததும் தரை முழுமையாகக் காய்ந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சோப்பு நீர் அல்லது வழுவழுப்பான திரவங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் தேவை. வயதானவர்கள் மற்றும் சிறு பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் கூடுதல் கவனம் தேவை. பாத்ரூமில் வழுக்காத 'மேட்'களைப் பயன்படுத்துவது நல்லது. ஒரு சிறிய வழுக்கல் கூட எலும்பு முறிவு போன்ற நிரந்தரப் பாதிப்புகளைத் தந்துவிடும்.
நச்சுப் பொருட்கள் மற்றும் மருந்துகள்:
வீட்டைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஆசிட், பினாயில் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைச் சமையலறையிலோ அல்லது தரையிலோ வைக்காதீர்கள். இவற்றை எப்போதும் குழந்தைகளுக்கு எட்டாத உயரமான இடங்களில் வைக்கவேண்டும். அதேபோல், காலாவதியான மருந்து மாத்திரைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள். தெரியாமல் குழந்தைகள் இவற்றை மிட்டாய் என நினைத்து உட்கொண்டால் அது உயிர் ஆபத்தாய் முடியும்.
கூர்மையான பொருட்கள் மற்றும் கருவிகள்:
கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்திய பிறகு, அவற்றிற்குரிய இடத்தில் பாதுகாப்பாக வைக்கவேண்டும். அதேபோல், இஸ்திரி பெட்டியைப் பயன்படுத்திய பிறகு, அது சூடு ஆறும் வரை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைப்பது அவசியம்.
பாதுகாப்பில் உறுதி:
முன்பின் தெரியாதவர்கள் கதவைத் தட்டினால், 'மேஜிக் ஐ' வழியாகப் பார்த்து விட்டு வந்திருப்பவர்கள் தெரிந்தவர்களா என பாதுகாப்பை உறுதி செய்த பிறகே கதவைத்திறக்க வேண்டும். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்ற பின் வீட்டில் விடுமுறையில் தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு அவசியம் இதை பழக்கப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் கதவு மற்றும் ஜன்னல்கள் சரியாகப் பூட்டப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பது அவசியம்.
விலையுயர்ந்த பொருட்கள்:
மோதிரம், செயின், தோடு போன்ற பொருட்களை குளிக்க செல்லும் முன் சில பெண்கள் அவற்றைக் கழற்றி எங்காவது ஞாபக மறதியாக வைத்து விட்டு வீடெல்லாம் தேடுவார்கள். இன்னும் சிலர் வீட்டுப் பணியாளர்கள் மீது சந்தேகம் கொள்வார்கள். சிறு குழந்தைகள் அவற்றை விழுங்கவோ, அல்லது தூக்கி எறியவோ வாய்ப்புள்ளது. காணாமல்போன பிறகு புலம்பிப் பயனில்லை. மேலும் ஸ்மார்ட் வாட்ச், செல்போன், லேப்டாப் போன்ற விலையுயர்ந்த பொருட்களை அதனதன் இடத்தில் பாதுகாப்பாக வைக்கவேண்டும்.