

Flying Ants control Tips: நமது வீட்டின் சுவரிலோ அல்லது தோட்டத்திலோ சாரை சாரையாக சாதாரண எறும்புகள் ஊர்ந்து செல்வதைப் பார்த்தால் நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டோம். ஆனால் திடீரென சிறகுகள் முளைத்த ஆயிரக்கணக்கான எறும்புகள் கூட்டமாக பறந்து வருவதை பார்த்தால் பலருக்கும் கொஞ்சம் நடுக்கம் வந்துவிடும்.
கோடைக்காலம் மற்றும் மழைக்காலங்களில் இந்த பறக்கும் எறும்புகளின் படையெடுப்பு சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வுதான். இதை பார்த்து நீங்கள் வீணாக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்காகவே இப்படி கூட்டமாக பறந்து வருகின்றன. இந்த தொல்லையில் இருந்து வீட்டை எப்படி சுலபமாக பாதுகாப்பது என்பதை இப்போது பார்ப்போம்.
ஈசலா அல்லது எறும்பா?
முதலில் உங்கள் வீட்டிற்கு வந்திருப்பது ஈசல் எனப்படும் கரையான்களா அல்லது சாதாரண பறக்கும் எறும்புகளா என்பதை கவனமாக கண்டுபிடிக்க வேண்டும். கரையான்களுக்கு நேரான உணர்கொம்புகளும் தடிமனான உடலும் இருக்கும். ஆனால் பறக்கும் எறும்புகளுக்கு சற்று வளைந்த உணர்கொம்புகளும் மெலிதான இடுப்புப் பகுதியும் இருக்கும். மேலும் அவற்றிற்கு இரண்டு ஜோடி சிறகுகள் இருக்கும். இது சாதாரண எறும்புதான் என்பதை முழுமையாக உறுதி செய்த பிறகு அவற்றை விரட்டும் வேலைகளை நாம் தைரியமாக தொடங்கலாம்.
விரட்டும் எளிய இயற்கை வழிகள்!
இந்த எறும்புகளின் இருப்பிடத்தை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் நேரடியாக ஒரு வேக்யூம் கிளீனர் மூலம் அவற்றை அப்படியே உறிஞ்சி எடுத்து அப்புறப்படுத்தலாம். கெமிக்கல் மருந்துகளை தவிர்க்க நினைப்பவர்களுக்கு இயற்கை முறையிலும் ஒரு சூப்பர் ஐடியா உள்ளது. புதினா, லாவெண்டர், டீ ட்ரீ அல்லது யூகலிப்டஸ் போன்ற வாசனையான எசன்ஷியல் ஆயில்களை இதற்காக பயன்படுத்தலாம். ஒரு பாட்டிலில் சிறிது பாத்திரம் கழுவும் லிக்விட் மற்றும் தண்ணீர் சேர்த்து, அதனுடன் இந்த வாசனையான எண்ணெயில் சில சொட்டுகளை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். எறும்புகள் அதிகம் வரும் இடங்களில் இந்த கலவையை ஸ்ப்ரே செய்தால் அந்த வாடைக்கு அவை தலைதெறிக்க ஓடிவிடும்.
மீண்டும் வராமல் தடுக்க!
இந்த பறக்கும் எறும்புகளுக்கு ஈரப்பதம் என்றால் மிகவும் பிடிக்கும். தேங்கி நிற்கும் தண்ணீர் மற்றும் ஈரமான மரக்கட்டைகள் இருக்கும் இடங்களை தேடித்தேடி இவை தங்களின் கூட்டை கட்டும். எனவே உங்கள் தோட்டத்தில் அல்லது வீட்டு வராண்டாவில் மழையில் நனைந்த பழைய மரக்கட்டைகள் இருந்தால் அவற்றை உடனே அப்புறப்படுத்துங்கள். அதேபோல இனிப்பு பண்டங்கள் மற்றும் எந்த ஒரு உணவுப் பொருட்களையும் திறந்த நிலையில் வைக்க வேண்டாம். குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவது மிகவும் முக்கியம். இந்த எளிய வழிமுறைகளை செய்தும் எறும்புகளின் தொல்லை கட்டுக்கடங்காமல் போனால் ஒரு நல்ல பெஸ்ட் கண்ட்ரோல் நிபுணரை அழைப்பது பாதுகாப்பான முடிவாக இருக்கும்.
சிறு பூச்சிகளின் இந்த படையெடுப்பு நமக்கு தற்காலிகமான ஒரு தொந்தரவாக இருந்தாலும் சில சுலபமான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அவற்றை ஈஸியாக சமாளித்து விடலாம். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் மற்றும் குப்பைகள் சேராமல் சுத்தமாக பராமரிப்பது எப்போதுமே நமக்கு ஒரு நல்ல பாதுகாப்பைத் தரும். இனிமேல் உங்கள் வீட்டில் பறக்கும் எறும்புகளைப் பார்த்தால் பதற்றப்படாமல் இந்த சிம்பிள் ட்ரிக்ஸ்களை உடனே முயற்சி செய்து பாருங்கள்.