மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் முதுமை. குழந்தை பருவத்தில் தொடங்கி, ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு மாற்றங்களை அடைகிறோம். நம் வயது முதிர்ச்சி அடைந்தவுடன் அடையும் பருவம்தான் முதுமை. நம் உற்றார், உறவினர்கள் ஒரு பக்கம் நம்மை நெருக்கினாலும் நோய்கள் நம்மை துரத்தும். அதிலும் பணி ஓய்வு வரை நாம் ஓயாமல் உழைத்து விட்டு பணி ஓய்வு பெற்ற பிறகு நாம் அந்த உழைப்பை மறந்து சிந்திக்கத் தொடங்கும்போதுதான் முதுமையில் நாம் நிறைய ஆரோக்கியக் கேடுகளை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்.
தனியாக இருக்கும் முதியவர்களுக்கே மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்தியாவில் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர். முதியவர்கள் பெரும்பாலும் பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல் மற்றும் ஞாபக மறதியால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர்.
வயதான காரணத்தால் பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம், இதயக் கோளாறு, எலும்பு பலம் குறைதல், நரம்புத் தளர்ச்சி, ஞாபக மறதி, மன அழுத்தம் போன்றவற்றால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, ஞாபக மறதி மற்றும் எலும்பு பலம் குறைதல் போன்ற பிரச்னைகளால் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர். அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒருசிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்து விடுகிறது. அவர்களுக்கு 4 அல்லது 5 நோய்கள் ஒன்றாக வருகின்றன. அவர்களை கவனிப்பது என்பது குழந்தையைக் கவனிப்பது போன்றது. அதே மாதிரிதான் சிகிச்சை அளிப்பதும். முதியவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
100 வயது முதியவருக்குக்கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதியோர்களுக்கு ஏற்படும் பக்கவாதம், நினைவாற்றல் குறைவு, மூளை அறிவுத்திறன் குறித்தும் அடிக்கடி கீழே விழும் முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் ஆய்வு செய்யப்படுகிறது.
முதுமை தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால், நாம் கொஞ்சம் கவனமாக இருந்தால் வரும் நோய்களைத் தவிர்க்கலாம். முதுமை வந்துவிட்டால் நம் மனதுக்குள் ஏதோ ஒரு விரக்தியும் சேர்ந்து வந்துவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் கூடியவரை முதுமையை ஆரோக்கியமாக நகர்த்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்.