

வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது என்பது ஒரு பொழுதுபோக்கு என்பதை தாண்டி, அவை நம் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறிவிடுகின்றன. நாய், பூனை, பறவைகள் அல்லது மீன்கள் என எதுவாக இருந்தாலும், அவை தங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது அவற்றின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைற்கு மிகவும் அவசியமானது. ஒரு வீட்டில் செல்லப்பிராணிகளுக்கான வசதிகளை செய்யும்போது முதலில் கவனிக்க வேண்டியது அவற்றுக்கான தனிப்பட்ட இடம்.
மனிதர்களுக்கு எப்படி ஒரு தனி அறை அல்லது படுக்கை தேவையோ அதேபோல் விலங்குகளுக்கும் அமைதியான பாதுகாப்பான ஒரு மூலை தேவைப்படுகிறது. நாய்கள் மற்றும் பூனைகளுக்கு மென்மையான படுக்கைகள் அல்லது சிறிய மெத்தைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைத்து கொடுக்கலாம்.
அந்த இடம் அதிக சத்தம் இல்லாததாகவும், காற்றோட்டம் உள்ளதாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக கோடைக்காலங்களில் வெப்பம் தாக்காதவாறு குளிர்ச்சியான இடத்தையும், குளிர்காலங்களில் கதகதப்பான சூழலையும் உறுதி செய்யவேண்டும்.
அடுத்ததாக உணவு மற்றும் குடிநீர் வசதி மிக முக்கியமானது. செல்லப்பிராணிகள் எளிதாக அணுகக்கூடிய வகையில் சுத்தமான பீங்கான் அல்லது துருப்பிடிக்காத எஃகு (Stainless steel) பாத்திரங்களில் எப்போதும் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உணவளிக்கும் இடத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் கிருமிகள் பரவி விலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. பூனைகள் வளர்ப்பவர்கள் அவை தங்களின் இயற்கை உபாதைகளை கழிக்க ‘லிட்டர் பாக்ஸ்’ (Litter Box) வசதியை வீட்டின் ஒரு மறைவான பகுதியில் ஏற்படுத்தி தரவேண்டும். இதை தினமும் சுத்தம் செய்வது வீட்டின் சுகாதாரத்திற்கும், அந்த பிராணியின் வசதிக்கும் நல்லது.
வீட்டின் பாதுகாப்பு அம்சம் என்பது செல்லப்பிராணிகள் வளர்ப்பில் தவிர்க்க முடியாத ஒன்று. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பால்கனி மற்றும் ஜன்னல்களில் வலைகள்(Safety nets) பொருத்துவது அவசியம்.
பூனைகள் மற்றும் சிறிய வகை நாய்கள் தவறி விழுவதை தடுக்க இது உதவும். அதேபோல் வீட்டில் வளர்க்கப்படும் சில அலங்கார செடிகள் செல்லப்பிராணிகளுக்கு நச்சாக இருக்கலாம். எனவே விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத செடிகளை தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும். மின்சார ஒயர்கள் மற்றும் சிறிய பிளாஸ்டிக் பொருட்கள் விலங்குகளின் வாயில் படாதவாறு மறைத்து வைக்க வேண்டும். குறிப்பாக நாய்க்குட்டிகள் எதையும் கடிக்கும் சுபாவம் கொண்டவை என்பதால் மின்சார இணைப்புகளில் அதிக கவனம் தேவை.
செல்லப்பிராணிகளின் மன அழுத்தத்தை குறைக்க விளையாட்டு வசதிகள் அவசியம். நாய்களுக்கு ஓடி விளையாட இடவசதி இல்லையென்றால், அவற்றுடன் விளையாட பந்துகள் அல்லது கடிக்கக்கூடிய பொம்மைகளை வாங்கி தரலாம். பூனைகளுக்கு உயரமான இடங்களில் ஏறி குதிப்பது பிடிக்கும் என்பதால் ‘கேட் ட்ரீ’ (Cat Tree) அல்லது சுவர்களில் ஏறி செல்லும் வகையிலான பலகைகளை அமைக்கலாம்.
பறவைகள் வளர்ப்பவர்கள் அவற்றின் கூண்டு பறப்பதற்கு போதுமான அளவு பெரியதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மீன் வளர்ப்பவர்கள் தொட்டியில் முறையான காற்று சுத்திகரிப்பு (Aerator) மற்றும் வடிகட்டி (Filter) வசதிகளை செய்யவேண்டும்.
செல்லப்பிராணிகளை குளிப்பாட்டவும், அவற்றின் முடிகளை சீவவும் தேவையான உபகாரணங்களை ஒரே இடத்தில் வைக்கவும் ஒரு சிறிய இடத்தை ஒதுக்குவது நல்லது. தரையை சுத்தம் செய்யும் போது ரசாயனங்கள் கலந்த திரவங்களை தவிர்த்து விலங்குகளுக்கு பாதிப்பில்லாத இயற்கையான சுத்தப்படுத்திகளை பயன்படுத்துவது அவற்றின் தோலுக்கு பாதுகாப்பானது. மேலும் செல்லப்பிராணிகள் சுதந்திரமாக நடமாட ஏதுவாக வீட்டில் தேவையற்ற பொருட்களை குறைத்து அதிக இடவசதியை உருவாக்குவது அவற்றுக்கு உற்சாகத்தை தரும்.
இறுதியாக செல்லப்பிராணிகளுக்கான மருத்துவ முதலுதவி பெட்டி ஒன்றை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காயம் ஏற்பட்டால் மருந்திடவும், அவசர காலங்களில் பயன்படுத்தவும் தேவையான அடிப்படை மருந்துகளை இதில் வைத்திருக்கலாம். ஒரு வீட்டை செல்லப்பிராணிகளுக்கு ஏற்றவாறு மாற்றுவது என்பது வெறும் வசதிகளை செய்வது மட்டுமல்ல, அவற்றின் உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்துகொண்டு ஒரு பாதுகாப்பான புகலிடத்தை உருவாக்குவதாகும்.
அன்பும் பாதுகாப்பும் நிறைந்த சூழலில் வளரும் செல்லப்பிராணிகள் அதிக மகிழ்ச்சியுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழும். இந்த சிறிய மாற்றங்கள் உங்கள் வீட்டினை முழுமையான ‘செல்லப்பிராணிகள் இல்லமாக’ மாற்றும் என்பது நிச்சயம்.