

வாழ்க்கையின் அடித்தளம் அமைதியே! அமைதியைத் தேடியே மனிதன் ஆலாய்ப் பறக்கிறான். அந்த அமைதியை வழங்குவது தூக்கம். மனசாட்சி நம்மை உறுத்தாதவரை தூக்கத்திற்குப் பங்கம் வராது. படுத்தவுடன் தூங்கி விடுவோர் பாக்கியசாலிகள் என்பார்கள். உண்மைதான்! இரவுத்தூக்கமே நம் உடலை சார்ஜ் செய்யும் பாட்டரி! உரிய முறையில் உடல் சார்ஜ் ஆனால்தான் அடுத்த நாள் உழைப்பதற்கேற்ற உரமும், உற்சாகமும் உடலுக்குக் கிடைக்கும். அதனால்தான் கவிஞர் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்.
“தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதியுன் நெஞ்சில் நிலவட்டுமே!
அந்தத் தூக்கமும் அமைதியும் நானால்
உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்!”
என்பது ஆலயமணி நாயகியின் கனிவான பாடல். தூங்க வைத்து அமைதி தரும் தன்மை தனக்கிருப்பதாக நம்பிப் பாடுகிறார் காதலி. நம்பிக்கைதானே வாழ்க்கை!
இணையான வரிகள் ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ டிலும் உண்டு.
“Sleep dwell upon thine eyes
Peace in thy breast
Would I were sleep and peace
So sweet to rest.”
“பெரிய மனிதர்கள் ஒன்று போலவே சிந்திப்பார்கள்!” (Great Men are think alike) என்பதற்கு இதுவும் ஓர் உதாரணமோ? முன்னிரவு உறக்கமே உடலுக்கு உகந்தது! என்று மருத்துவ உலகம் சான்றளிக்கிறது. வயதுக்குத் தகுந்த உறக்கம் வாழ்வில் வளம் சேர்க்கும். ஆழ்ந்த உறக்கமே அனைவராலும் வேண்டப்படுவது. நமது முன்னோர்கள் 24 மணி நேரத்தை மூன்றாகப் பிரித்து உழைப்பு, ஓய்வு, உறக்கம் ஆகிய மூன்றுக்கும் சரிசமமாக எட்டெட்டு மணி நேரத்தை ஒதுக்கினார்கள்.
இரவு பத்து மணி ஆகிவிட்டால், இருக்கின்ற இடத்தில் இருந்தபடியே உறங்கி விடுபவர்களும் உண்டு. வயல் வெளியோ, பிளாட் பாரமோ, அங்கேயுங்கூட அவர்கள் நித்திரா தேவியுடன் இணைந்து நிம்மதி காண்பார்கள். இவர்களுக்கு எதிரான ஒரு குழுவும் உண்டு. ஏ.சி.யின் ரீங்காரத்தையும், சுவர்க்கடிகாரத்தின் டிக்டிக் கையும் கேட்டபடி, ’இரவே! உனக்கு எங்கள் மேல் இரக்கமேயில்லையா?’ என்று மனதுக்குள் வருந்தியபடி அல்லல்படுவார்கள் இவர்கள்.
உறக்கத்தை வரவழைக்க நமது மக்கள் பலவற்றையும் பின்பற்றுகிறார்கள். காலையில் எழுந்து ஓடுவதும், கடின உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் சிலரது வாடிக்கை;
ஜிம் தேடிப் போவார்கள் சிலர்; நகரத்தார் பலர் ‘சைக்கிளிங்’ மேற்கொள்வார்கள்; படுத்துக்கொண்டே, கண்களை மூடியபடி, பாடல்களைக் கேட்டு நித்திரை யாத்திரை மேற்கொள்ள முயற்சிப்பார் சிலர்; உறக்கத்தை வரவழைக்கும் ஆடியோ கேசட்டுகளை ஓட விட்டு சிலர் முயற்சிப்பார்கள்;
மருத்துவர்களிடம் மாத்திரை வாங்கி வந்து, அதனைச் சாப்பிட்டுத் தூங்கச் செல்வோர் உண்டு; பக்தி ஸ்லோகங்களை மனப்பாடம் செய்து அதனைச் சொல்லியபடியே தூங்க முயற்சிப்பது பக்திமான்களின் வழக்கம்; இப்படி இரவில் நித்திரா தேவியை வரவழைக்கப் பலரும் பலவாறு முயல, உழைப்பாளர்களின் கண்களிலோ தேவி உடனடி வாசம் மேற்கொண்டு விடுகிறாள்.
குடும்பத்திலுள்ள அனைவரும் நன்கு தூங்கி ஆரோக்கியம் பெற வேண்டுமென்றால், படுக்கை அறை வீட்டில் எங்கு அமைய வேண்டுமென்று வாஸ்துவும் விளக்குகிறது.
சயன அறைக்கு எந்தெந்த வண்ண பெயிண்டுகள் அடிக்க வேண்டுமென்றும் மனநலவியலாளர்கள் கூறுகிறார்கள்.
நவீன விஞ்ஞானம் இன்னும் ஒரு படி மேலே போய், படுக்கை விரிப்புகள் எந்த வண்ணத்தில் இருந்தால் எளிதில் துயில் கொள்ளலாம் என்றும் விளக்க ஆரம்பித்து விட்டது. பொதுவான விதியோடு நிறுத்திக் கொள்ளாமல், எந்த மாதத்தில் பிறந்தவர்கள், எந்த வண்ண படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்துவது பயன் அளிக்கும் என்றும் விளக்கம் தருகிறது. இவை எல்லாமே மன தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை. மனதில் நம்பிக்கை வந்தால், உடல் அதற்கேற்பவே இயங்கும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
என்னங்க! கொட்டாவிவிட ஆரம்பிச்சிட்டீங்க! தூக்கம் வருதா? இதோ சொல்லிடறேங்க! கேட்டுட்டுத் தூங்கப் போங்க!
பிறந்த மாதங்கள் படுக்கை விரிப்பின்
வண்ணம்
தை - மாசி சிலேட்டு சாம்பல்
(15 முதல் 15 வரை)
மாசி-பங்குனி இளஞ் சிவப்பு
பங்குனி-சித்திரை மென்மையான கடல்நுரை பச்சை
சித்திரை-வைகாசி கிரீமி வெள்ளை
வைகாசி - ஆனி ஆலிவ் பச்சை
ஆனி - ஆடி வெண்ணை மஞ்சள்
ஆடி - ஆவணி குழந்தை நீலம்
ஆவணி-புரட்டாசி பவளப் பாறை
புரட்டாசி-ஐப்பசி டெட்டி பிரவுன்
ஐப்பசி-கார்த்திகை வெளிர் இளஞ் சிவப்பு
கார்த்திகை-மார்கழி மனநிலையைத் தூண்டும் சிவப்பு
மார்கழி - தை கடற்படை நீலம்
உடனே மாற்ற அவசியமில்லைங்க! இன்றைக்கு நல்லாத் தூங்குங்க! அப்புறம்… நேரம் கிடைக்கும்போது மாற்றிப் பாருங்க!
நம்பிக்கை வைத்து எதனைச் செய்தாலும் நல்லதே நடக்கும். உறக்கமே உடல் ஆரோக்கியத்தின் உயிர் நாடி!