பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தைகளை வழிநடத்துவதற்கும், அவர்கள் சுதந்திரமாக ஆராய அனுமதிப்பதற்கும் இடையே உள்ள சமநிலையைப் புரிந்துகொள்கிறோம். அப்படி புரிந்துகொண்டு, அவர்களைப் பாதுகாக்க விரும்புவது இயற்கையானது என்றாலும், சுயாட்சியை(Autonomy) வளர்ப்பது அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்...
1. நம்பிக்கை மற்றும் சுயமரியாதையை உருவாக்குதல்
குழந்தைகள் சிறிய முடிவுகளை எடுக்கும்போது, அவர்கள் சாதனை உணர்வைப் பெறுகிறார்கள். இந்த நேர்மறை வலுவூட்டல் அவர்களின் நம்பிக்கையையும் சுயமரியாதையையும் அதிகரிக்கிறது.
2. விமர்சன சிந்தனை திறன்களை வளர்த்தல்
முடிவெடுப்பதில், விருப்பங்களை மதிப்பீடு செய்வது, விளைவுகளை கருத்தில்கொள்வது மற்றும் நன்மை தீமைகளை எடைபோடுவது ஆகியவை அடங்கும். இவற்றின் அடிப்படையில் முடிவுகளைத் தேர்வு செய்ய குழந்தைகளை அனுமதிப்பதன் மூலம், அவர்களின் விமர்சன சிந்தனை திறன்களை வளர்க்கிறோம். ஒரு பொம்மையைத் தேர்ந்தெடுப்பது முதல் கணித சிக்கலைத் தீர்ப்பது வரை எதுவாக இருந்தாலும், இப்படிப்பட்ட சிந்தனைத் திறன்கள்தான் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு உதவும்.
3. தவறுகளிலிருந்து கற்றல்
குழந்தைகள் அனுபவத்தின் மூலம் சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள். சில நேரங்களில், அவர்கள் மோசமான முடிவுகளை எடுப்பார்கள். ஆனால், இந்தத் தவறுகள் மதிப்புமிக்க பாடங்களை அவர்களுக்கு வழங்குகின்றன. அந்தத் தவறால் அவர்களுக்கு பெரிய பிரச்னை வராது என்றால், விளைவுகளை அவர்களே அனுபவிக்க விடுங்கள். இது காலப்போக்கில் அவர்கள் சுயமாக சிந்தித்து வளர உதவும். ஆகவே பெற்றோர்களாகிய நாம் அவர்களை முழுவதுமாக பாதுகாக்காமல் இதன் மூலம் வழிகாட்ட முடியும்.
வயதுக்கு ஏற்றவாறு முடிவெடுப்பது:
1. தொடக்கப் பள்ளி ஆண்டுகள்
குழந்தைகள் தொடக்கப் பள்ளியில் சேர்ந்த பிறகு, அவர்களின் முடிவெடுக்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்துங்கள். குடும்பப் பயணங்களைத் திட்டமிடுதல், புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது அல்லது படிப்பைத் தாண்டி சில செயல்பாடுகளைத் தீர்மானிப்பதில் அவர்களை ஈடுபடுத்துங்கள். இது அவர்களின் விருப்பங்களைப் பற்றிய விவாதங்களை ஊக்குவிக்கும். உங்களுக்கும் அவர்களைப் பற்றிய ஒரு நல்ல புரிதல் உண்டாகும்.
2. டீனேஜ்(Teenage)
இந்த வயதில்தான் அவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் நேரம் வருகிறது. நட்புகள், பொழுதுபோக்குகள் மற்றும் கல்விப் பாதைகள் என்று இங்கே காரசார பேச்சுவார்த்தை மற்றும் சமரசம் ஆகியவை அரங்கேறும். நாம் அவர்களை வழிநடத்தும் வேலையையும் செய்ய வேண்டும், அதே சமயம், அவர்களின் சுயாட்சியையும்(autonomy) திறனையும் மதிக்க வேண்டும். முக்கியமாக பெற்றோராகிய நாம் அதில் உள்ள நன்மை தீமைகளை பற்றி விவரித்து , அவர்களின் பாதையை நோக்கி போக உதவ வேண்டும்.
அதிகப்படியான அக்கறையின் அபாயங்கள்:
1. கற்றறிந்த உதவியின்மை
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக தொடர்ந்து முடிவுகளை எடுக்கும்போது, அது குழந்தைகள் இடையே உதவியற்ற தன்மையை வளர்க்கிறது. புத்திசாலித்தனத்தோடு தேர்ந்தெடுக்கும் திறன் தங்களுக்கு இல்லை என்று நம்பும் குழந்தைகள் செயலற்றவர்களாக மாறுகிறார்கள். அவர்கள் பிற்காலத்தில் சுதந்திரமாக செயல்பட்டாலும் ஒரு குழப்பத்துடன்தான் செயல்படுவார்கள்..
2. தவறவிட்ட கற்றல் வாய்ப்புகள்
நம் குழந்தைகளை தவறுகளிலிருந்து காப்பாற்றினால், அவர்கள் அதுக்குள் இருக்கும் மதிப்புமிக்க அனுபவங்களை இழக்கிறார்கள். பிற்காலத்தில் சவால்களைச் சமாளிப்பதில் இருந்து பின்னடைவைச் சந்திப்பார்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு ஒரு வழியாட்டியாகத் தொடங்கி, அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு பயணித்து, படிப்படியாக, அந்தக் கைகளை விடுவிக்கிறோம். இதுதான் இயற்கை. அந்த நேரத்தில் அவர்களின் முடிவுகள் அவர்களின் தனித்துவமான பயணத்தை வடிவமைக்கின்றன என்பதை அறிந்து, வாழ்க்கையின் தளத்தை வழிநடத்த நம் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்போம்.