குழந்தைகள் எப்போதுமே புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே இருப்பார்கள். எனவே எல்லா குழந்தைகளும் பெற்றோர்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என அவசியமில்லை. இருப்பினும் சில நல்ல கருத்துக்களை பெற்றோர்கள் சொல்லும்போது குழந்தைகள் கேட்கவில்லை என்றால், அது தவறு.
பல காரணங்களுக்காக தன் பெற்றோரைக் குழந்தைகள் எதிர்க்கிறார்கள். சில நேரங்களில் எல்லா விஷயங்களையும் பெற்றோர்களே சொல்லித் தருவதால், அவற்றை குழந்தைகள் அவமானமாகக் கருதுகின்றனர். எனவே இப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளை உங்கள் வழிக்குக் கொண்டு வர, சில டிப்ஸ் இந்தப் பதிவில் காணலாம்.
உங்கள் குழந்தைகளிடம் முறையாகப் பேசுங்கள். நீங்கள் அவர்களைப் பெற்றுவிட்டீர்கள் என்பதற்காக அவர்கள் உங்களுக்கு கீழ்படிய வேண்டும் என அவசியமில்லை. குழந்தைகளிடம் எப்படி பேசினால் புரிந்து கொள்வார்கள் என்பதை சிந்தித்து பேசுங்கள். நீங்கள் என்ன காரணத்திற்காக சில விஷயங்களை எதிர்க்கிறீர்கள் என்பதை அவர்களுக்குப் புரியும் படி கூறிவிட்டால், குழந்தைகள் ஏற்றுக் கொண்டு முறையாக நடந்து கொள்வார்கள். எனவே உங்களது உரையாடல் தெளிவாக இருக்க வேண்டும்.
அதே போல உங்கள் குழந்தைகளை அதிகம் மிரட்டி கட்டளையிடாதீர்கள். இப்படி எல்லா விஷயங்களுக்கும் அவர்களை மிரட்டி பயமுறுத்தினால், நீங்கள் சொல்வது எதையுமே அவர்கள் கேட்க மாட்டார்கள். உங்களைப் பார்த்தால் பயம்தான் வருமே தவிர பாசம் வராது. நீங்கள் சொல்வதை உங்கள் குழந்தை கேட்க வேண்டுமெனில், அவர்களிடம் அன்பாகப் பேசி, அவர்களது நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளுங்கள்.
முதலில் நீங்கள் அனைத்திலும் ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களைப் பார்த்து வளரும் குழந்தை அனைத்தையும் முறையாகக் கடைப்பிடிக்கும். நீங்கள் பல தவறுகளை செய்து கொண்டு அவர்களை ஒழுங்கு படுத்த நினைத்தால், ஒருபோதும் நீங்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள்.
உங்கள் குழந்தைகளை நம்புங்கள். அவர்களின் எல்லா விஷயங்களுக்கும் நீங்களே முடிவு எடுத்தால், அவர்களுக்கென்று சுய சிந்தனை இல்லாமல் போய்விடும். இது, பல தருணங்களில் குழந்தைகள் பெற்றோர்களை மதிக்காமல் செய்துவிடுகிறது.
குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவர்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் விஷயங்களை செய்து கொடுங்கள். பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டாலோ அல்லது குழந்தைகளுடன் பெற்றோர்கள் முறையாக நேரத்தை செலவிடவில்லை என்றாலோ, குழந்தைகள் பெற்றோர் கூறுவதைக் கேட்க மாட்டார்கள். எனவே குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது மிக முக்கியம்.
உங்கள் குழந்தை நீங்கள் சொல்வதைக் கேட்பதற்கு முதலில் நீங்கள் சரியான பெற்றோராக நடந்து கொள்கிறீர்களா? என்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் அவர்களுக்கான எதையுமே செய்யாமல், அவர்களிடம் இருந்து மட்டும் அதிகம் எதிர்பார்த்தால் எதுவுமே நடக்காது. முதலில் உங்கள் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து, சிறந்த பெற்றோராக நடந்து கொண்டாலே, குழந்தைகள் உங்களுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்கள். அவர்களையும் கொஞ்சம் கண்ணியமாக நடத்துங்கள்.