

காலையில் எழுந்து சமையலறைக்கு வரும்போது ஒரு புத்துணர்ச்சியான தோற்றத்தை சமையலறை தரவேண்டும் என்றால், அதற்கு கிச்சன் சிங்க் எப்போதும் சுத்தமாகவும், துர்நாற்றம் இல்லாமலும் இருப்பது மிக அவசியம்.அதுதான் சமையல் அறையின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. அப்படி உங்கள் வீட்டு கிச்சன் சிங்க்கை பராமரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகள் இதோ.
உடனடி சுத்தம்:
பாத்திரங்களை கழுவி முடித்த கையோடு சிங்க்கில் ஒட்டி இருக்கும் உணவுத் துகள்களை அகற்றிவிட்டு சோப்பு நீரால் தேய்த்துக் கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
உணவுத் துகள்களைத் தவிர்க்க:
சிங்க் குழாயில் உணவுத் துகள்கள் சிக்கி அடைப்பு ஏற்படுவதைத் தடுக்க எப்போதும் ஒரு ஸ்ட்ரெயினர் ( Strainer/ jali) பயன்படுத்துங்கள். இது கழிவுகள் உள்ளே செல்வதைத் தடுக்கும்.
பிசுபிசுப்பு நீங்க:
சிங்க்கில் எண்ணெய் பிசுபிசுப்பு அதிகமாக இருந்தால் சிறிது சுடு தண்ணீரை ஊற்றவும். இது குழாய்களில் படிந்துள்ள கொழுப்பைக் கரைக்க உதவும்.
பேக்கிங் சோடா மற்றும் வினிகர்: வாரத்திற்கு ஒரு முறை சிங்க்கின் துவாரத்தில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு, அதன் மேல் சிறிது வினிகர் ஊற்றி 15 நிமிடங்கள் கழித்து வெந்நீர் ஊற்றி கழுவினால், அடைப்புகள் நீங்கி சிங்க் சுத்தமாகும்.
பளபளப்பிற்கு எலுமிச்சை: எவர்சில்வர் சிங் மங்கலாக இருந்தால் எலுமிச்சை தோலை கொண்டு தேய்க்கவும். இது துருப்பிடிப்பதை தடுத்து சிங்க்கிற்குப் புதிய பொலிவைத் தரும்.
எவர்சில்வர் சிங்க்கை கழுவி உலர்த்தியதும், ஒரு துணியில் சில துளிகள் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் தொட்டு தேய்த்தால் சிங்க் கண்ணாடிபோல பளபளக்கும்.
எவர்சில்வர் சிங்கை கம்பி நார் (Steel wool) கொண்டு துடைக்கக் கூடாது. அப்படி துடைத்தால் கீறல் விழும். அதற்குப் பதிலாக சிங்க்கை ஸ்பாஞ்ஜ் அல்லது நைலான் பிரஷ்களை பயன்படுத்தி துடையுங்கள்.
அதேபோல் நீண்ட நேரம் ஈரமான இரும்புப் பாத்திரங்களை சிங்க்கிற்குள் போட்டு வைத்தால் அது சிங்க்கின் மீது துரு போன்ற கறைகளை ஏற்படுத்தும். ஆதலால் அதை தவிர்ப்பது நலம்.
துர்நாற்றத்தை தவிர்க்க:
சிறிது எலுமிச்சைச் சாறு அல்லது ஆரஞ்சு தோல்களை போட்டு சிறிது நேரம் கழித்து நீர் ஊற்றி கழுவுங்கள்.
கடினமான கறைகளுக்கு:
டீ கரை அல்லது விடாப்பிடியான கறைகள் இருந்தால் உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து தேய்த்தால் கறைகள் எளிதில் மறையும்.
ஈரம் இல்லாமல் வைத்திருத்தல்: இரவு சமையல் முடிந்ததும் சிங் க்கை கழுவி விட்டு ஒரு காய்ந்த துணியால் துடைத்து வைக்கவும். இது நீர் சொட்டுக்கள் (Water marks) படிவதைத் தடுக்கும்.
பழைய பிரஷ் பயன்பாடு:
கிச்சன் ஓரங்கள் மற்றும் குழாய் இணைப்புகளில் உள்ள அழுக்குகளை நீக்க பழைய பல் துலக்கும் பிரஷ்ஷைப் பயன்படுத்திதினால் அது மூலைகளில் உள்ள அழுக்குகளை எடுக்க உதவும்.
ப்ளீச்சிங் பவுடர்:
சிங்க் மிக அழுக்குடன் இருந்தால் மாதத்திற்கு ஒரு முறை மிகக் குறைந்த அளவு ப்ளீச்சிங் பவுடர் கலந்து கழுவலாம் .இது கிருமிகளை அழித்து சுத்தமாக்கும்.
இதுபோல் தினசரி செய்து வந்தால், காலையில் சமையல் அறைக்கு வரும்போது ஒரு சந்தோசமான மனநிலையில் சமைக்கலாம்.