காலம் செய்த கோலத்தில் மறைந்து போன கோலி சோடா

காலம் செய்த கோலத்தில் மறைந்து போன கோலி சோடா

ரு காலத்தில் பெட்டிக்கடைகளிலும், திரையரங்க கேன்டீன்களிலும், பொதுக்கூட்ட மேடைகளிலும் அரசாட்சி செய்து வந்த நமது பாரம்பரிய குளிர்பானம் கோலி சோடா ஆகும்.

உலகமயமாக்கல் என்ற பெயரில் அந்நிய குளிர் பானங்கள் உள்ளே நுழைய தனது அடையாளத்தை கோலி சோடா இழந்து கண்ணில் காண்பதற்கே அரிதான ஒன்றாகி விட்டது...! மேலும் கோலி சோடாவிற்கான பாட்டிலை உற்பத்தி செய்த தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதால் கோலி சோடா உற்பத்தியாளர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

அஜீரணத்திற்கு உபயோகப்படும் ஆங்கில மருந்துகளைவிட வயிற்றுக்குள் இறங்கிய அடுத்த நொடியே அஜீரணத்தை போக்கும் தன்னிகர் இல்லா பானம் கோலி சோடா ஆகும், வயிறு புடைக்க உண்ட பின், ஒரு கோலி சோடா அருந்தியவுடன் ஏவ்வ் என ஒரு ஏப்பம் வரும் பாருங்கள்.! அதன் சுகமே தனி...!

கோலி சோடவை அதற்குரிய கட்டையை கொண்டு உடைப்பதை விட, தன் கட்டை விரலால் உடைப்பவர்கள் தான் அதிகம்...! அவர்கள் நண்பர்கள் மத்தியில் ஹீரோ போல இருப்பார்கள்...!

கோலி சோடாவில் எலுமிச்சை பழம் பிழிந்து உப்பு போட்டு அருந்தினால் வாயு வெளியேறி வயிற்று உபாதைகள் குணமாகும்...! 

பன்னீர், ஜிஞ்சர் கோலி சோடாக்களும் அன்று பிரபலம்...!

முறுக்கு, இஞ்சிமுரப்பா, கோலி சோடா இல்லாத பெட்டிக்கடையே அன்று கிடையாது...! அன்று ஏதாவது தெருவில் தகராறு என்றால் பெட்டிக்கடையை தான் முதலில் மூடுவார்கள்..! ஏனென்றால் சோடாவை தூக்கி போட்டு அடித்து தான் முதலில் பீதியை கிளப்புவார்கள்...!

பொதுக்கூட்டங்களில் பேசும் தலைவர்கள் இடையில் கோலிசோடாவை மடக் மடக் என குடித்து விட்டு பேச்சை தொடர்வார்கள்...! அதை காண்பதே தனி அழகு...! 

இன்றும் ஒரு கோலி சோடா குடிச்சாதான் சுறுசுறுப்பே வரும் என்று சொல்லும் நபர்களை காணலாம்...!

காலம் செய்த கோலத்தில் கோலி சோடாவும் மறைந்து போகும்... நிலையில் உள்ளது.

ஆனாலும் சில ஊர்களில் மீண்டும் கோலி சோடாவை மீட்டெடுத்து விற்பனைக்கு மெல்ல மெல்ல கொண்டு வந்துள்ளது ஒரு ஆறுதலான விஷயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com