இந்தக் குடும்பக் கட்டுப்பாடு வாசகத்தை நம்மில் பலரும் கேட்டிருக்கிறோம். அந்தக் காலத்தில் வீட்டில் குறைந்தது ஐந்து குழந்தைகள் இருப்பார்கள். கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்ததால் வளர்ப்பதில் சிரமம் இல்லை. கல்விக்கான செலவு அதிகம் இல்லை. எல்லாக் குழந்தைகளுக்கும் முடிந்த வரை நல்ல கல்வி தர முடிந்தது. பள்ளியில் பீஸ் குறைவாகத்தான் இருக்கும். இக்காலம் போல டியூஷன் செலவும் இருந்ததில்லை. வீட்டில் திருமண வயதில் இருக்கும் அத்தை அல்லது சித்தப்பா பாடம் சொல்லிக் கொடுப்பார்கள்… இப்படி குழந்தைகள் வளர்ப்பதில் பெற்றோருக்கு அதிக சிரமம் இருந்ததில்லை.
ஆனால், கூட்டுக்குடும்ப முறை மாறி, தற்போது தனிக்குடும்பம் உருவாக ஆரம்பித்ததும் குழந்தைகள் வளர்ப்பதில் பிரச்னை. இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தை வளர்ப்பு முதல் படிப்பு சொல்லித் தருவதற்கு நேரம் செலவிட பெற்றோருக்கு அவகாசம் இல்லை. அதனால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஒருவரை அமர்த்துவதும், பாடம் சொல்லித்தர ட்யூஷன் அனுப்புவதும் அத்தியாவசியமாகி விட்டது.
தற்போதைய நவீனக் காலத்தில் ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர்கள் அதிகம். அதற்கான காரணம் தற்போதைய விலைவாசியில் ஒரு குழந்தைக்கு நல்ல தரமான கல்வி தந்து வளர்த்து ஆளாக்க இருவரும் உழைக்க வேண்டி இருக்கிறது. அதனால், ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்பதே பலரது வாழ்க்கை முறையாக உள்ளது.
ஒற்றைக் குழந்தையை வளர்ப்பதில் அதிக கவனம் தேவை. கடினமானதே. ஏனெனில் அக்கா - தங்கை, அண்ணன் - தம்பி என்று வளரும் குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும் தன்மை தானே வந்து விடும். இங்கே அது இருப்பதில்லை. ஒரு குழந்தை போதும் என்று நினைக்கும் பெற்றோர்கள் அந்தக் குழந்தை வளரும்போதே விட்டுக் கொடுத்தல், எதையும் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தைக் கற்றுத் தர வேண்டும்.
குழந்தை தனிமையை உணராதபடி பெற்றோர்கள் அதனுடன் நேரம் செலவிட வேண்டும். மற்ற குழந்தைகளுடன் தோழமையுடன் பழகக் கற்றுத்தர வேண்டும். ஒற்றைக் குழந்தைகள் செல்லமாக வளர்க்கப்பட்டு எல்லாம் எனக்கு மட்டுமே என்ற மனநிலை வந்து விடுவதாக கேள்விப்படுகிறோம். அப்படி அல்லாமல் அவர்களுடன் பெற்றோர் தாங்கள் மட்டுமல்லாது, நெருங்கிய உறவினர்களுடன் அன்புடன் பழகும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
ஒரு குழந்தையோ, இரண்டு குழந்தைகளோ இந்தக் காலத்தில் பெற்றோர் முன்பை விட அதிக கவனம் எடுத்து அவர்கள் வளர்ச்சியில் பங்கு அளிக்க வேண்டும். அன்பும் அரவணைப்பும் பாசமும் நேசமும் பிணைந்து பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும். நல்லவனாக, பண்பானவனாக வளர்க்க வேண்டும். ஒற்றுமையான, வளமான சமுதாயம் உருவாவது நாம் வளர்க்கும் குழந்தைகளின் கைகளில்தான் உள்ளது.