பேரு… பேஜாரு!

பேரு… பேஜாரு!

குழந்தை வயிற்றில் இருக்கும்போதே பெற்றோர் மண்டையை உடைத்துக்கொள்வது இந்தப் பெயர் விஷயத்தில்தான். என்ன பெயர் வைக்கலாம், எப்படி அழைக்கலாம் என்று யோசிக்கும்போது, என்ன பெயர் வைக்கக்கூடாது, எப்படி அழைக்கக் கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பெரும்பாலும் குழந்தைகளுக்கு தெய்வங்களின் பெயர்தான் சூட்டப்பட்டு வருகிறது. அன்று சுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, காமாட்சி, விசாலாட்சி என்றால், இன்று சித்தார்த், அஜய், அக்ஷய், ப்ரணவ், ஐஸ்வர்யா, வைஷ்ணவி, தேஜஸ்வினி என பெயர் வைக்கிறார்கள்.

இங்கே ஒரு சின்னக் கதை சொல்லி விட்டு விஷயத்தைத் தொடருகிறேன்.

முன்னொரு காலத்தில் ஓர் அரக்கன் இருந்தானாம். நாத்திகனான அவன் தன் வாழ்நாள் முழுவதும் இறைவன் பெயரைச் சொல்லக்கூடாது என்று பிடிவாதமாக இருந்தானாம். அவனுக்கு ‘நானா’, ‘யாணா’ என்று இரண்டு மகன்கள் இருந்தார்களாம். சாகும் தருவாயில் நாணா, யாணா என்று தன் இரண்டு மகன்களையும் அழைத்தானாம். உடனே மகாவிஷ்ணு அவன் முன் தோன்றி ‘இந்தா, பிடி மோட்சத்தை’ என்று சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தாராம்.

ஜெபமாலையை உருட்டி ஆயிரத்தெட்டு தடவை இறைவன் பெயரைச் சொல்ல வேண்டாம். தினமும் நாமாவளி பாட வேண்டாம். நம் குழந்தைகளுக்குச் சூட்டியிருக்கும் இறைவன் பெயரை ஒழுங்காக, சிதைக்காமல் அழைத்தாலே போதும்.

மேற்கு வங்காள  கிராமப்புறங்களில் இன்றும் ‘அன்னாகாளி’ என்னும் பெயர் சாதாரணமானது. அன்னாகாளி என்பது ஆர் நா காளி (இனி மேல் வேண்டாம் காளி) என்பதன் திரிபு. அதாவது ‘இனிமேல் பெண் குழந்தை வேண்டாம்’ என்று காளியிடம் பெற்றோர் வேண்டுகிறார்கள். முதல் பெண்ணுக்கே இப்பெயர் சூட்டப்படுவதுண்டு. மகாராஷ்டிராவில் ‘வேண்டாதவள்’ என்ற பொருள்படும் நாகுஷா, நாகுஷி போன்ற பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டப்படுகின்றன. இப்படிப் பெயரிட்டால் அடுத்தது  பிறக்கும் குழந்தை பையனாக இருக்கும் என்பது அம்மக்களின் மூட நம்பிக்கை.

இத்தகைய பெண்களைக் கண்டுபிடித்து அவர்களுடைய பெயரை எளிதாக மாற்றிக் கொள்வதற்கு மகாராஷ்டிர அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது என்பது வரவேற்கத்தக்க செய்தி. அரசாங்கம் ஏற்பாடு செய்த பெயர் சூட்டு விழாவில் நூற்றுக்கணக்கான நாகுஷா, நாகுஷிகள் புதுப்பெயர் பெற்றார்கள். இருந்தும் தங்கள் பெற்றோரின் குருட்டு நம்பிக்கை, ஆசை, பிரார்த்தனை முதலிய எல்லாவற்றையும் தங்கள் பெயரில் மூட்டையாக வாழ்நாள் முழுவதும் பல பெண்கள் சுமக்கிறார்கள்.

குறிப்பாக, குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்கள் மனம் வருந்துப்படியான பெயர் களைச் சூட்டக்கூடாது. அதே சமயம்  பெயர் சுருக்கப்படும்போது அதன் பொருள் அபத்தமாகிவிடக் கூடாது. எங்கள் வீட்டுக்கு மேலே இருக்கும் பையனை தினமும் மாலையில் அவனுடைய நண்பர்கள் சத்ரு, சத்ரு கீழே வா’ என்று விளையாட அழைப்பார்கள்.  சத்ருவின் முழுப்பெயர் மகாவிஷ்ணுவின் ஆயிரத்தெட்டு பெயர்களில் ஒன்றான சத்ருஜித்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com