

பல்லிகள் மனிதர்களுக்கு எந்தத்தீங்கும் செய்வதில்லை என்றாலும், வீட்டின் சுவர்களில் அவை உலாவுவது பலருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும். தோழிமார்களில் பலர் என்னிடம் உங்கள் வீட்டில் பல்லி இல்லையே என்று கேட்டுவிட்டு இருந்தால் வரமாட்டேன் என்று கூறிவிடுவதும் உண்டு. அவர்கள் வீட்டில் ஒரு பல்லியைக்கூட பார்க்க முடியாது. எங்காவது பார்த்து விட்டால் அவர் கண்ணில் இருந்து கடகடவென்று கண்ணீர் உதிரும். இதுபோல் இருப்பவர்களும் உண்டு. காரணம் ஒவ்வாமை மற்றும் அருவெறுப்பு.
இதுபோல் வீட்டில் பல்லிகள் அதிகமாக இருந்தால் அப்படி இருப்பதற்கான காரணங்கள் என்னென்ன ? அவை ஏன் வீட்டிற்குள் வருகிறது. அவற்றை எப்படி இயற்கையான 6 வழிகளில் தடுத்து நிறுத்தலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
பல்லி வீட்டிற்குள் வரு அதற்கான காரணங்கள் :
வீட்டிற்குள் பல்லிகள் வருவதற்கு முதன்மையான 3 காரணங்கள்:
1.உணவு (இரை): வீட்டின் விளக்கு வெளிச்சத்திற்கு வரும் கொசுக்கள், ஈக்கள், கரப்பான்பூச்சி, அந்துப்பூச்சிகள் மற்றும் நுண்பூச்சிகள்தான் பல்லியின் முக்கிய உணவு. பூச்சிகள் இருக்கும் இடத்தைத்தேடி பல்லி தானாகவே வருகிறது.
2.பாதுகாப்பான உறைவிடம்: வீட்டின் அலமாரிகளின் பின்புறம், காலண்டர்களுக்குப் பின், ஃபிரெட்ஜ்/டிவி பின்புறம் மற்றும் படச்சட்டங்களுக்குப் பின் இருக்கும் இருட்டான இடங்கள் பல்லிகளுக்குப் பாதுகாப்பான தங்குமிடமாக அமைகின்றன.
3.தண்ணீர் மற்றும் கதகதப்பு: சமையலறை சிங்க், ஈரமான மூலைகள் மற்றும் மின் சாதனங்களின் பின்புறம் இருக்கும் கதகதப்பான சூழல் பல்லிகளை ஈர்க்கிறது.
பல்லியைத் தடுக்கும் 6 ஆர்வமூட்டும், இயற்கையான வழிமுறைகள்:
இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல், எளிமையான இயற்கை வழிகளில் பல்லிகளை வீட்டிலிருந்து வெளியேற்றலாம். பல்லி விரட்ட அதற்கு நாம் செய்ய வேண்டியது:
1. முட்டை ஓடுகள்:
• முட்டையைப் பயன்படுத்திய பிறகு, அதன் ஓடுகளைக் கழுவி, பல்லி அதிகம் உலாவும் ஜன்னல்கள், கதவு மூலைகள் மற்றும் அலமாரிகளில் வைக்கவும்.
• முட்டை ஓடுகளில் இருந்து வரும் ஒருவித வாசனையை வைத்து, அங்கு ஏதோ பெரிய பறவை (பல்லியின் எதிரி) இருப்பதாகப் பல்லி நினைத்து பயந்து அந்த இடத்தை விட்டு ஓடிவிடும் என்பதுதான் அறிவியல் பூர்வமான காரணமாகும். அப்படி வைக்கும் போது ஓடுகளை 2 வாரத்திற்கு ஒருமுறை மாற்றி புதிய ஓடுகளை வைக்க வேண்டும்.
2. வெங்காயம் மற்றும் பூண்டு:
• வெங்காயம் மற்றும் பூண்டுப் பற்களை நறுக்கி, நூல் கண்டில் கட்டி பல்லி வரும் வழிகளில் தொங்கவிடலாம். அல்லது பூண்டு-வெங்காயச் சாற்றைத் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இதற்கான
• அறிவியல் காரணம் என்னவென்றால் வெங்காயம் மற்றும் பூண்டில் உள்ள சல்பர் (Sulfur) கலவையின் காரமான நெடி பல்லியின் நரம்பு மண்டலத்திற்குப் பிடிக்காது. அதனால் வராது.
3. மயிலிறகு :
• வீட்டின் சுவர்களில் அல்லது பூச்சாடிகளில் அழகாக மயிலிறகைச் செருகி வைக்கலாம். அப்படி வைப்பதற்கானஅறிவியல் காரணம் மயில்கள் பல்லிகளை வேட்டையாடி உண்ணும் இயல்புடையவை. மயிலிறகைப் பார்த்தவுடன், அதை மயில் எனத் தவறாகக் கருதி பல்லி அந்தப் பக்கமே வராது. இது வீட்டிற்கு அழகையும் தரும்!
4. காபி தூள் மற்றும் புகையிலை உருண்டைகள் :
• காபி தூளுடன் சிறிதளவு புகையிலைத் தூள் கலந்து, சிறிது தண்ணீர் தெளித்துச் சிறிய உருண்டைகளாக உருட்டி, தீப்பெட்டி அல்லது டூத் பிக் குச்சியில் குத்தி பல்லி நடமாடும் மூலைகளில் வைக்கவும்.இப்படி வைக்கும் போது காபியின் வாசனை பல்லியை ஈர்க்கும், ஆனால் புகையிலையில் உள்ள 'நிகோடின்' பல்லிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி வீட்டை விட்டு விரட்டும்.
5. மிளகுப் பொடி ஸ்ப்ரே :
• ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் ஊற்றி, அதில் 1 ஸ்பூன் மிளகுத் தூள் அல்லது மிளகாய்த் தூள் கலந்து நன்கு குலுக்கிக் கொள்ளவும். இதை பல்லி இருக்கும் சுவர்களிலோ அல்லது அது நுழையும் ஜன்னல்களிலோ இதைத் தெளிக்கலாம். அப்படி தெளிக்கும் போது மிளகின் காரத்தன்மை பல்லியின் தோல் மற்றும் கண்களில் எரிச்சலை ஏற்படுத்துவதால், அவை உடனடியாக அந்த இடத்தை விட்டு அகலும்.
6. குளிர்ந்த நீர் தெளித்தல் :
• சுவரில் பல்லியைப் பார்த்தவுடன், ஃபிரெட்ஜில் இருக்கும் ஜில்லென்ற குளிர்ந்த நீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பல்லியின் மீது தெளிக்கவும். இதற்கானஅறிவியல் காரணம் பல்லிகள் குளிர்ந்த இரத்த உயிரினங்கள் (Cold-blooded animals). அவற்றின் மீது திடீரெனக் குளிர்ந்த நீர் படும்போது, அவற்றின் உடல் வெப்பநிலை குறைந்து, தற்காலிகமாக நகர முடியாமல் உறைந்துவிடும். அந்த நேரத்தில் அதை ஒரு கவரில் பிடித்து வீட்டிற்கு வெளியே விட்டுவிடலாம்.
•இந்த ஆறு இயற்கையான குறிப்புகளையும் கவனமாகக் கையாண்டு பல்லிகள் வீட்டிற்குள் வராமல் தடுக்கலாம்.
நினைவில் கொள்ளவேண்டிய எளிய குறிப்பு:
வீட்டில் உள்ள விளக்கு வெளிச்சத்திற்கு வரும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தினாலே (உதாரணமாக, ஜன்னல்களுக்கு வலை அடிப்பது அல்லது இரவு நேரத்தில் தேவையில்லாத விளக்குகளை அணைப்பது), உணவில்லாமல் பல்லிகள் தானாகவே உங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிடும்.
அதேபோல் தோட்டத்திற்குள் வீடு வைத்திருப்பவர்கள் மரம், செடி கொடிகளின் கிளைகள் பால்கனி மற்றும் ஜன்னல்களை ஒட்டி வராதபடி அவ்வப்பொழுது கழித்து விட வேண்டியது அவசியம்.
இப்படி எல்லாவற்றிலும் தூய்மை மற்றும் சுகாதாரத்தை கடைபிடித்தால் பல்லிகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கலாம்.
இந்த எளிய மற்றும் இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் பக்கவிளைவுகள் எதுவுமின்றி உங்கள் வீட்டைப் பல்லிகளற்ற தூய்மையான, பாதுகாப்பான மண்டலமாக மாற்ற முடியும்.