உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய குழப்பம் என்னவென்றால், ‘நாம் டோஃபு எடுத்துக் கொள்ளலாமா? அல்லது பன்னீர் எடுத்துக் கொள்ளலாமா?’ என்பதுதான். உடலை நல்ல முறையில் வைத்திருக்க விரும்புபவர்கள் இந்த இரண்டு உணவுப் பொருட்களையும் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.
பன்னீர் என்பது முழுமையாக பாலிலிருந்து தயாரிக்கப்படுவதாகும். இதில் புரதம், கால்சியம், கொழுப்பு என எல்லா சத்துக்களும் உள்ளன. ஆனால், டோஃபு என்பது சோயா பாலில் தயாரிக்கப்படுவதாகும். இதிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால்,இவை இரண்டுக்குமே வேறுபாடுகள் உள்ளன.
பன்னீர் என்பது எருமை பால், பசும்பால், ஆட்டுப்பால் போன்றவற்றிலிருந்து சீஸ் வடிவமாகப் பிரித்தெடுப்பதாகும். பாலில் எலுமிச்சை சாறு கலந்து இதைத் தயாரிக்கிறார்கள். பன்னீரிலும் டோஃபு போலவே புரதம், கால்சியம், கொழுப்பு போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள பொட்டாசியம் நம்முடைய மன நலனுக்கு உகந்தது.
உண்பதற்கு டோஃபுவை விட சுவை மிகுந்த பன்னீர் உடல் எடையைக் குறைக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆஸ்துமா போன்ற மூச்சுப் பிரச்னைகளுக்கு தீர்வைக் கொடுக்கக்கூடும். இதை உண்பதால் செரிமானம் மேம்படும் என்கின்றனர் சிலர்.
சோயா பாலை தயிராக மாற்றுவதற்குப் பெயர்தான் டோஃபு. இது சாஃப்ட் சில்கேன், ஃபார்ம், ஃபெர்மன்டட் டோஃபு என பல வகைகளில் கிடைக்கிறது. இவை ஒவ்வொன்றின் சுவையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்று பார்த்தால், அதிகப்படியான புரதம் நிறைந்துள்ளது. இது தவிர, அமினோ அமிலங்கள், பல வகையான விட்டமின்கள், மினரல்கள், மாங்கனிஸ், காப்பர், கால்சியம் போன்றவை இதில் உள்ளது.
டோஃபு எடுத்துக்கொள்வதால் பலவிதமான பலன்கள் கிடைக்கின்றன. குறிப்பாக, இது ரத்தத்தில் கலந்து இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. இதனால் இதய நோய்கள் தடுக்கப்படும். எடை குறைப்புக்கு இது சிறந்த உணவாக இருக்கும். டோஃபு சாப்பிடுவதால் எலும்புத் தேய்மானம் தடுக்கப்பட்டு, அவற்றின் அடர்த்தி அதிகரிக்கும்.
இந்த இரண்டு உணவு வகைகளிலுமே புரதம், கால்சியம் நிறைந்துள்ளதால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நீங்கள் விலங்குகளை வதைக்க விரும்பாத சைவப் பிரியராக இருந்தால் உங்களுக்கு டோஃபு சூப்பரான சாய்ஸ்.