பன்னிரண்டாம் வகுப்பு முடித்தாலே குழந்தைகள் பாதி வளர்ந்துவிட்டதாக அர்த்தமாம். கல்லூரியில் சேர்ந்தப் பிறகு முழுவதுமாக வளர்ந்துவிட்டார்கள் என்று அர்த்தமாம். உண்மையில் பள்ளியிலிருந்து கல்லூரிக்கு செல்லும்போது உங்கள் பிள்ளைகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வரும். மேலும் ஒரு வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறு ஒரு வாழ்க்கை முறைக்குள் நுழைவார்கள். ஆனால், அவர்களுக்கு அது புதிதாக இருப்பதால் சில தடுமாற்றங்கள் ஏற்படும். அந்த தடுமாற்றங்களில் முதன்மையானது தனக்கான துறையை தேர்ந்தெடுப்பதுதான். அதற்கு நிச்சயம் பெற்றோர்களாகிய நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்.
விருப்பங்களைக் கண்டுப்பிடியுங்கள்:
உங்கள் பிள்ளையின் விருப்பங்களைக் கண்டுப்பிடியுங்கள். பள்ளி பருவத்தில் அவர்கள் எதன் மீது ஆர்வமாக உள்ளார்கள், எந்த ஒன்றை விடாமல் தொடர்ந்து செய்துக்கொண்டு வருகிறார்கள் என்று கண்டுப்பிடியுங்கள். ஒரு பிள்ளைக்கு குழந்தைப் பருவத்தில் ஏராளமான ஆசைகள் இருக்கும், அதனால் குழப்பம் கொள்ளாதீர்கள். 11 மற்றும் 12ம் வகுப்பு வரை எதனை விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
அவர்களின் திறனைத் தெரிந்துக்கொள்ளுங்கள்:
அவர்கள் எதன்மீது ஆர்வமாக இருந்தாலும் அதற்கு துணையாக இருங்கள். பயிற்சி வகுப்புகள் போன்றவற்றிற்கு கேள்விக்கேட்காமல் அனுமதிக் கொடுங்கள். உங்கள் பிள்ளை எந்த வேலை செய்யும்போது திருப்தியாகவும் முழுமையாகவும் சந்தோசமாகவும் உணர்கிறார்கள் என்பதைக் கண்டுப்பிடியுங்கள். இது படிப்பில் மட்டும் செல்லாது, விளையாட்டுகள், வேறு திறன்கள் ஆகியவற்றிற்கும் செல்லும்.
தொடக்கத்திற்கு உதவுங்கள்:
எந்த துறை எடுக்க வேண்டுமென்ற புரிதல் வந்த பிறகு, உங்கள் குழந்தைகளிடம் அதை கூறுங்கள். உங்களின் எண்ணங்களைத் தெரிவியுங்கள். ஏற்கனவே அவர்களுக்கு ஏற்ற ஒரு துறை தேர்ந்தெடுத்ததால் அவர்கள் முடிவெடுக்க மிகவும் எளிதாகிவிடும். அந்த துறையைப் பற்றி நீங்கள் தெரிந்துக்கொண்டவற்றை அவர்களிடமும் சொல்லுங்கள். அந்த துறையில் எது முக்கியமானது, எப்படி கவனம் செலுத்தினால் அந்த துறையில் மேம்படலாம் என்பனவற்றை அவர்களிடம் கூறுங்கள்.
அந்த துறையில் மேம்பட வழிகளைக் கூறுங்கள்:
அந்த துறையில் அவர்கள் பயிற்சி பெரும் வரை உடனிருங்கள். சமூக வலைத்தளங்களைத் துறை சம்பதமாக எப்படி பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். முதலில் ஒரு புரிதலை ஏற்படுத்துங்கள். இதில் மிகவும் முக்கியமான ஒன்று, அந்த துறையில் சேர்ந்தால் எப்படிப்பட்ட வேலைகள் கிடைக்கும்? அதற்கான பெரிய நிறுவனங்கள் என்னென்ன? எப்படி அந்த நிறுவனத்தில் இடம்பெறுவது? மற்றும் சம்பளம் பற்றியும் குறிப்பிடுவது அவர்களுக்கு ஒரு ஊக்கத்தைக் கொடுக்கும்.
தனிப்பட்ட விதத்தில் அவர்களை மேம்படுத்துங்கள்:
துறை தேர்ந்தெடுத்து அதனைப் பற்றி புரிதல் கொடுப்பது வரை சரி. அதன் பின்னர் நிறுவனத்திற்கு சென்று வேலைக் கேட்பது மற்றும் நேர்காணல் செல்வது அவர்களுக்கு ஒரு பயத்தைக் கொடுக்கும். அதற்கும் நீங்கள் கல்லூரி படிக்கும்போதே பயிற்சி அளிப்பது நல்லது. உதாரணத்திற்கு Resumes, job application மற்றும் Cover letters ஆகியவற்றை எப்படி தயார் செய்வது என்பதைக் கற்றுக்கொடுங்கள். ஒருவரிடம் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக் கொடுத்தாலே அவர்களுக்கு தன்னம்பிக்கை உணர்வு வந்து பய உணர்வு முற்றிலும் சென்றுவிடும்.