விடுமுறை நாட்கள் வந்தாலே நம் நினைவுக்கு வருவது பாட்டி வீடுதான். அந்த வீட்டில் நுழையும்போதே ஒருவிதமான பழமையான வாசனை நம்மை வரவேற்கும். நவீன காலத்து வீடுகளில் இல்லாத ஒரு அமைதியும், நிம்மதியும் அங்கே நிச்சயம் கிடைக்கும். காலப்போக்கில் பாட்டி வீட்டைச் சுத்தம் செய்யும்போதோ அல்லது காலி செய்யும்போதோ, அங்கிருக்கும் பழைய பொருட்களைப் பார்த்து 'இதெல்லாம் எதற்கு' என்று நாம் அலட்சியமாக நினைப்பதுண்டு.
துருப்பிடித்த இரும்புச் சாமான்களும், பழைய புத்தகங்களும் நமக்குக் குப்பையாகத் தோன்றலாம். ஆனால், அந்த ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் ஒரு வரலாறும், ஆரோக்கியமும், விலைமதிப்பற்ற கைவினைத்திறனும் ஒளிந்துள்ளது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய சில பொருட்களைத் தூக்கி எறிவது, நம் பாரம்பரியத்தை நாமே அழிப்பதற்குச் சமம். அப்படி நாம் அவசியம் பாதுகாக்க வேண்டிய பொருட்களைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
சமையலறைப் பொக்கிஷங்கள்!
இன்றைய காலத்தில் நாம் பயன்படுத்தும் 'நான்-ஸ்டிக்' பாத்திரங்கள் சில ஆண்டுகளிலேயே பாழாகிவிடும். ஆனால் பாட்டி வீட்டில் இருக்கும் இரும்பு வாணலிகளும், தோசைக்கற்களும் தலைமுறை தாண்டியும் உழைக்கக் கூடியவை. துருப்பிடித்திருந்தாலும், அதைச் சிறிது வினிகர் மற்றும் உப்பு போட்டுத் தேய்த்தால் புத்தம் புதியதுபோல மாறிவிடும்.
இதில் சமைக்கும் உணவின் சுவைக்கு ஈடே இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அதேபோல, பழைய பீங்கான் பாத்திரங்கள் மற்றும் கண்ணாடிப் பாத்திரங்கள் இன்று கடைகளில் கிடைப்பதில்லை. அவற்றின் டிசைன்கள் மற்றும் உறுதித்தன்மை மிகவும் அபாரமானது. குடும்ப விருந்துகளின் போது பழைய நினைவுகளைப் பகிர இந்தப் பாத்திரங்கள் உதவும்.
வெள்ளி மற்றும் ஆபரணங்கள்!
வெள்ளிப் பாத்திரங்கள், தட்டுகள் வெறும் உலோகங்கள் மட்டுமல்ல. அவை நம் கலாச்சாரத்தின் அடையாளம். பழைய வெள்ளிப் பொருட்களில் இருக்கும் வேலைப் பாடுகள் இன்று கிடைப்பது அரிது. இவற்றைச் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துவது வீட்டுக்கு ஒரு ராஜ்கிய தோற்றத்தைக் கொடுக்கும். அதேபோல, பரம்பரை பரம்பரையாக வரும் நகைகள், விலைமதிப்பற்றவை. அவற்றின் டிசைன்கள் அந்தந்தக் காலக்கட்டத்தின் கலைத்திறனைப் பறைசாற்றும்.
புத்தகங்கள்!
பாட்டி வீட்டில் இருக்கும் புத்தகங்கள் சாதாரணமானவை அல்ல. அவற்றில் முதல் பதிப்புகளோ அல்லது அரிய வகை நூல்களோ இருக்க வாய்ப்புள்ளது. அந்தப் புத்தகங்களின் அட்டைப்படங்களும், தாள்களின் மணமும் ஒரு தனித்துவமான உணர்வைத்தரும். இவற்றை உங்கள் வீட்டு வரவேற்பறையில் அடுக்கி வைப்பது அழகுக்கு அழகு சேர்க்கும். மேலும், பிரம்பு நாற்காலிகள் மற்றும் ஊஞ்சல்கள் உடலுக்குக் குளிர்ச்சியையும், வீட்டுக்கு இயற்கையான அழகையும் தரக்கூடியவை. சிறிது வார்னிஷ் அடித்தால் போதும், அவை ஜொலிக்கத் தொடங்கிவிடும்.
பல பாட்டிகளிடம் பல வண்ணப் பொத்தான்கள் நிரப்பப்பட்ட ஒரு டப்பா இருப்பதைப் பார்த்திருப்போம். அது பார்ப்பதற்குச் சாதாரண டப்பாவாகத் தெரிந்தாலும், அவசரத் தேவைக்கு அதில் உள்ள பொத்தான்கள் கைகொடுக்கும். குழந்தகளுக்குக் கைவினைப் பொருட்கள் செய்யவும், ஆடைத் திருத்தங்களுக்கும் இது மிகச் சிறந்த சேமிப்பாகும்.
எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அது உங்களுக்கு உங்கள் பாட்டியை நினைவுபடுத்துவதாக இருந்தால், அதைத் தூக்கி எறியவே கூடாது. அது ஒரு பழைய தையல் இயந்திரமாகவோ, கடிகாரமாகவோ அல்லது ஒரு புகைப்படமாகவோ இருக்கலாம். அந்தப் பொருட்கள் உங்கள் அன்பிற்குரியவர்கள் உங்களுடனேயே வாழ்வது போன்ற உணர்வைத்தரும்.