

ஏன் மக்கள் பொய் சொல்வது வாடிக்கையாகிறது?
பொய் சொல்லாமல் யாருமே இவ்வுலகத்தில் இருக்க முடியாது. ஏதோ ஒரு காரணத்திற்காக எல்லோருமே பொய் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த பொய்யை நான்கு வகையாக நாம் பிரிக்கலாம்.
முதல் வகை: பெருமிதத்திற்காக சொல்லப்படுவது
மற்றவர்களின் எதிரே தன்னை உயர்த்திக் கொள்வதற்காகவும் பெருமைப்படுத்திக் கொள்வதற்காகவும் சொல்லப்படும் பொய். இந்த வகையான பொய் பேசுபவர்கள் சில நேரங்களில் தங்களை உயர்த்தி காட்டும் வகையில் பொய் சொல்வார்கள்.
அதாவது show off-ற்காக பொய் சொல்வார்கள். இப்படிப்பட்டவர்களை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. எத்தனை தரவை எடுத்துக் கூறினாலும் இப்படிப் பட்டவர்கள் திருந்தமாட்டார்கள். இவர்களுக்கு மற்றவர்களுக்கு எதிராக ஒரு பொய்யான புகட்டை பெற வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கும்.
இரண்டாவது வகை: எப்போதுமே சொல்லப்படுவது
இந்த வகையை கொண்டவர்களுக்கு எப்போது பார்த்தாலும் வாயிலிருந்து பொய் தான் வரும். இவர்கள் பொய்யிலேயே பிறந்து புரண்டு வளர்ந்தவர்கள். இவர்கள் வாயிலிருந்து உண்மை என்பதே வராது. முழுக்க முழுக்க பொய்தான் வரும். இவர்களையும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஏனென்றால் இப்படிப் பட்டவர்களுக்கு இரத்தத்திலேயே அந்த பொய்யானது ஊறிப்போய் இருக்கும். எனவே இவர்களை திருத்துவது என்பது நாய் வாலை நிமிர்த்துவது போல ஆகும்.
மூன்றாவது வகை: அடுத்தவர்களின் நலனுக்காக கூறப்படுவது
ஒரு சிலர் அடுத்தவர்களின் நலன் கருதி சில சமயங்களில் பொய் கூற வேண்டி இருக்கும். சில நேரங்களில் உண்மையை கூறும் போது சில பிரச்னைகள் உண்டாகலாம், சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். ஏன் உயிருக்கே கூட ஆபத்து உண்டாகலாம். சில நேரங்களில் சில பிரச்னைகளை தடுப்பதற்காகவும் மற்றவர்களின் நலனுக்காகவும் கூறும் இந்த வகையான பொய்யை நாம் ஏற்றுக் கொள்வதில் தவறே இல்லை.
இந்த வகையான பொய்யைக் கூறுபவர்கள் எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு வேறு வழியில்லாத சூழ்நிலையில் தான் கூறுவார்கள். ஆகவே இவர்களை கட்டுபடுத்துவதால் சில துன்பங்களையும் பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்.
நான்காவது வகை: பயத்தினால் கூறப்படுவது
இந்த வகையான பொய்யை தான் நம்மால் நிச்சயமாக கட்டுபடுத்த முடியும். முக்கியமாக, குழந்தைகள் ஏதாவது தவறை செய்து விட்டாலோ அல்லது குறைவான மதிப்பெண்ணை பெற்றுவிட்டாலோ அல்லது வேறு ஏதாவது விஷயத்திற்காகவோ பெற்றோர்களிடம் உண்மையை கூற பயந்து கொண்டு பொய்யை கூறுவார்கள். உண்மையை சொன்னால் அடிப்பார்களோ என்கிற பயத்தினால் குழந்தைகள் பொய் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.
இதைப் போலவே கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் பயந்து கொண்டு சில விஷயங்களில் பொய்யை கூறுகிறார்கள். வீடுகளில் மட்டுமில்லாமல் அலுவலகத்திலும் ஊழியர்கள் எஜமானரிடமும் பொய்யை கூறுவது உண்டு.
ஆக மொத்தத்தில் நாம் அடுத்தவர்களை அதாவது குழந்தைகளையோ, கணவனையோ, மனைவியையோ அல்லது தொழிலாளிகளையோ தவறு செய்தால் மிக வன்மையாக கண்டிக்கும் படசத்தில் அவர்கள் அதற்காக பயந்து கொண்டு பொய்யை கூற ஆரம்பிக்கிறார்கள்.
இப்படிபட்ட இந்த வகையான பொய் கூறுபவர்களை நம்மால் கண்டிப்பாக கட்டுபடுத்த முடியும். கூடிய வரை அடுத்தவர்கள் செய்த தவறையோ அல்லது தீங்கையோ மிக வன்மையாக கண்டிக்காமல் அமைதியான முறையில் எடுத்துரைத்தால் அவர்கள் கண்டிப்பாக பொய்யை சொல்ல நேரிடாது.
இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம், உங்கள் அன்பிற்குரியவர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் என்பதன் பின்னணியை உணர்ந்து, வன்முறையற்ற உரையாடல் மூலம் அவர்களை மாற்றும் முதிர்ச்சியான அணுகுமுறையை நீங்கள் பெறுவீர்கள்.