நேர்மறை ஆற்றலை அதிகரிக்க, எதிர்மறை ஆற்றலைத் தவிர்க்க சில வழிகள்!

நேர்மறை ஆற்றலை அதிகரிக்க, எதிர்மறை ஆற்றலைத் தவிர்க்க சில வழிகள்!

வீடு என்பது வெறும் கட்டடம் மட்டுமல்ல; அந்த வீட்டில் வசிப்போரின் வாழ்வு, தாழ்வில் அது முக்கியப் பங்கு வகிக்கின்றது. நாம் வசிக்கும் இல்லம் கிட்டத்தட்ட ஒரு கோயிலுக்கு சமமாகிறது. அதில் எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் அவை வீட்டில் வசிப்போரின் மனங்களில் பயம், பதற்றம், சோகம் போன்ற உணர்வுகளை உருவாக்கி, ஆரோக்கியம், முன்னேற்றம், செல்வ வளம் நல்வாழ்வு போன்றவற்றை பாதிக்கும்.

வீட்டின் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் விஷயங்கள்:

1. இரண்டு மூன்று நாட்களுக்கு அழுக்குத் துணிகளை துவைக்காமல் குவியலாக போட்டு வைப்பது, அதேபோல துவைத்த துணிகளை சோபாவிலோ நாற்காலியிலோ அம்பாரமாகக் குவித்து வைப்பது.

2. சமையலறை சிங்கில் வழிய வழிய எப்போதும் எச்சில் பாத்திரங்களைப் போட்டு வைத்திருப்பது.

3. வீட்டு உறுப்பினர்கள் எப்போதும் உரத்த குரலில் பேசிக்கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருப்பது.

4. வீட்டின் மூலைகளில் ஒட்டடை பிடித்து இருப்பது.

5. வீட்டின் தரையைத் துடைக்காமல் அழுக்காக வைத்திருப்பது.

6. வாசலில் செருப்புகளை தாறுமாறாகப் போட்டு வைப்பது.

7. நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாத பொருட்களை பரணிலோ, ஸ்டோர் ரூமிலோ போட்டு அடைத்து வைத்திருப்பது, பழுதடைந்த ஓடாத பழைய ஃபேன், ரேடியோ,  ஓடாத கடிகாரம், உடைந்த பொம்மைகள், பாத்திரங்கள், மண் தொட்டிகள் போன்றவற்றை வைத்திருப்பது.

8. நிரம்பி வழியும் குப்பைக் கூடை போன்றவை வீட்டின் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.

நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வழிகள்:

1. தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை துணிகளைத் துவைத்து, உலர்ந்ததும் மடித்து பீரோவில் வைக்க வேண்டும். அவ்வப்போது பாத்திரங்களை துலக்கி வைத்து விட வேண்டும். செருப்புகளை அழகாக ஒரு ஸ்டாண்டில் அடுக்கி வைக்க வேண்டும். இரண்டு தினங்களுக்கு ஒரு முறை குப்பையை வெளியேற்றி விடவேண்டும். உடைந்த பொருட்களை உடனே அகற்றவும்.

2. வீட்டு பூஜை அறையில் தினமும் ஊதுபத்தி, சாம்பிராணி பொருத்தி, பச்சைக் கற்பூரம் ஏற்றி, மணியடித்து பூஜை செய்து, சப்தமாக ஸ்லோகங்கள் சொல்லும்போது கெட்ட அதிர்வலைகள் வீட்டை விட்டு ஓடிவிடும். நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். மந்திரங்கள், ஸ்லோகங்கள் போன்றவற்றை வீடு முழுக்க ஒலிக்கச் செய்ய வேண்டும்.

3. கல் உப்பு தண்ணீர் கொண்டு வீட்டை வாரம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ துடைக்க வேண்டும். படுக்கை அறையில் ஒரு கிண்ணத்தில் கல்லுப்பை வைத்தால் கணவன் - மனைவி இடையே உள்ள பிணக்குகள் நீங்கும்.

4. பகலில் எப்போதும் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்து இயற்கையான சூரிய ஒளி வீட்டுக்குள் வர வழி செய்ய வேண்டும்.

5. வீட்டில் ஆங்கங்கே பொருட்களை போட்டு வைக்காமல், அழகாக அடுக்கி வைக்க வேண்டும்.

6. வீட்டில் துளசிச் செடி, கற்றாழை வளர்ப்பது நேர்மறை ஆற்றலை உருவாக்கும். அவை சுத்தமான காற்றை வழங்கி, எதிர்மறை ஆற்றலை விரட்டுகின்றன.

7. தண்ணீர், எலுமிச்சைச் சாறு, வெள்ளை வினிகர் மற்றும் உப்பு கலந்து ஜன்னல்கள் மற்றும் கதவு கைப்பிடிகளை சுத்தம் செய்ய வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் பெருகும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com