மனித வாழ்க்கையில் டீனேஜ் என்பது மிகவும் மகிழ்ச்சியான பருவம். ஆனால், அதேசமயம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் உண்டாகும் நேரமிது. இந்தக் காலத்தில்தான் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். சிலர் டீனேஜ் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற்றம் அடைவதுடன், சில சமயங்களில் தற்கொலை எண்ணமும் இவர்களுக்கு தலைதூக்கும். மேலும், இந்தப் பிரச்னையை உளவியல் ரீதியாக அணுக வேண்டியது மிகவும் அவசியம். 13 வயது முதல் 19 வயது வரை உடலும் மனமும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகும்.
குழந்தைப் பருவம் என்பதிலிருந்து இளமைப் பருவம் என்ற அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கும்பொழுது மனம் கட்டுப்படாமல் செயல்படத் தொடங்கும். மனம் செல்லும் வழியில் உடலும் செல்லத் தொடங்கும்.
டீன் ஏஜ் வயதில் உண்டாகும் மாற்றங்கள்:
பெற்றோரிடம் அதிக இடைவெளி ஏற்படும். பெற்றோர்களை எதிரிகளாகப் பார்க்க வைக்கும் பருவம் இது.பெற்றோரின் அறிவுரைகள் காதில் விழாது. எரிச்சலை ஏற்படுத்தும். நண்பர்களே உலகம் என எண்ணத் தோன்றும். மனம் அலைபாயத் தொடங்கும். தனி அங்கீகாரம் எதிர்பார்க்கும் பருவம் இது. தானே எல்லாவற்றையும் முடிவு செய்ய நினைக்கும். ஆண், பெண் இரு பாலரிடத்தும் உடல் ரீதியான மாற்றங்கள் உண்டாகும். கட்டுப்பாடுகளிலிருந்து வெளியே வரத் தோன்றும் காலம் இது. தனிமையை விரும்புவதும் எதிர்பாலரிடத்தில் ஈர்ப்பு ஏற்படுவதும் சகஜம்.
இந்தக் காலக்கட்டத்தில்தான் பெற்றோர்களுக்கு அதிக பொறுப்பு உண்டு. தனது மகனோ, மகளோ சிறு குழந்தைகள் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளிடம் அதிகாரியைப் போல் நடந்துகொள்ளாமல், அதிக கட்டுப்பாடுகளை விதிக்காமல் சிறந்த நண்பராக இருப்பது அவசியம். அப்பொழுதுதான் குழந்தைகள் அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவார்கள். பிள்ளைகளிடம் நம்பிக்கை வைப்பதும் அவர்களுக்கான பொறுப்புகளை மென்மையாக உணர்த்துவதும் அவசியம்.
விடலைப் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளை விசேஷங்களுக்கு வெளியில் அழைத்துச் செல்வதும், மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தி அவர்களைப் பற்றி உயர்வாகப் பேசி பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அவசியம். இதனால் பிள்ளைகள் பெற்றோர் மீது நம்பிக்கை வைத்து எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வார்கள். முக்கியமாக பிள்ளைகள் சிக்கலின்றி டீன் ஏஜ் பருவத்தை கடக்க இது உதவும்.
நண்பர்களை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுக்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். இந்தப் பருவத்தில் அவர்களை சுதந்திரமாக உணரச் செய்வதும் அவர்களுக்கு எமோஷனல் சப்போர்ட் வழங்குவதும் அவர்கள் தடம் மாறாமல் இருக்க உதவும்.