

குழந்தைகள் கள்ளங்கபடமற்றவர்கள். கருணை, அன்பு, ஆர்வம், கற்பனைத் திறன், உற்சாகம், மன்னிக்கும் பண்பு மிக்கவர்கள். சிறிய விஷயங்களுக்குக் கூட மகிழ்பவர்கள். ஒரு நாளில் பல முறை சிரிப்பவர்கள். குழந்தைகளுக்கே உரிய இத்தகைய குணங்களைக் கொண்ட நபர்கள் எத்தனை வயதானாலும் குழந்தைத்தனம் மாறாமல் இருப்பார்கள். இதனால் இவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வத், ‘Child is the father of Man’ - குழந்தை மனிதனின் தந்தை என்கிறார். குழந்தைப் பருவத்தில் ஒரு நபரின் குணாதிசயம், பழக்க வழக்கங்கள் போன்றவை அவர்கள் பெரியவர்களாக மாறும்போதிலும் ஆழமான நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைப் பருவத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்கள், உணர்ச்சிகள் மற்றும் பண்புகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களை வழிநடத்துகின்றன. வயது வந்தவர்களுக்கு வழிகாட்டும் சக்தியாக குழந்தைப் பருவம் உள்ளது என்கிறார் கவிஞர்.
ஆர்வமும் கற்கும் வேகமும்: குழந்தைகள் இயற்கையாகவே தாங்கள் காணும் எல்லாவற்றிலும் ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் வெளிப்படுத்துவார்கள். எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் கற்கும் வேகமும் இவர்களிடம் இருக்கும். இந்த குணம் பெரியவர்களான பிறகும் தொடரும்போது எத்தனை வயதானாலும் வாழ்க்கையில் சலிப்பே தோன்றாது.
கற்பனை மற்றும் படைப்பாற்றல்: நினைத்துப் பார்க்க முடியாத கற்பனை சக்தி குழந்தைகளுக்கு இருக்கும். அவர்களின் எல்லையற்ற கற்பனை சக்தி அப்பாவித்தனத்துடன் இணைந்தது. இதனால் அவர்களுக்கு புதிய யோசனைகள் மற்றும் அணுகுமுறைகள் கிடைக்கும். இந்த குணம் பெரியவர்களுக்கு இருந்தால் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் பிரச்னைகளுக்கும் எளிதில் தீர்வுகள் கிடைக்கும்.
காணும் எல்லாவற்றிலும் மகிழ்ச்சி: மிகவும் சாதாரணமான, சிறிய, எளிமையான விஷயங்களில் கூட குழந்தைகள் மகிழ்ச்சியைக் காண்பார்கள். பெரியவர்களும் அது போல இருந்தால் அன்றாட வாழ்க்கையை ரசித்து வாழ முடியும். நிகழ்காலத்தில் குழந்தைகளைப் போல கவனம் வைத்து வாழ்வதன் மூலம் எதிர்கால பயத்தையும் கடந்த காலக் கசப்பையும், சோகத்தையும் அவர்களால் மறக்க முடியும்.
விளையாட்டுத்தனம் / வெளிப்படைத்தன்மை: விளையாட்டுத்தனம் நிரம்பிய குழந்தைகளின் செயல், மன அழுத்தம், பதற்றம் மற்றும் கவலைகளை மறக்கடிக்க செய்கிறது. இது நவீன வாழ்க்கையின் மன அழுத்தங்களை நிர்வாகிப்பதற்கான மிகப்பெரிய சக்தி வாய்ந்த கருவியாகும். குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வெளிப்படுத்துகிறார்கள். இது போலவே பெரியவர்கள் தங்கள் உணர்ச்சிகளை அடக்குவதற்கு பதிலாக சிரிக்க நினைத்தால் வாய்விட்டு சிரிப்பதும், கபடு சூது இன்றி நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க முடியும்.
இரக்க சுபாவம்: இயல்பாகவே குழந்தைகளுக்கு இரக்கம், பச்சாதாபம், கருணை நிறைந்திருக்கும். பெரியவர்கள் ஆகும்போது வாழ்க்கை சூழல், எதிர்கொள்ளும் அனுபவங்களால் குழந்தைத்தனம் மறைந்து ஒரு கடுமை சூழ்ந்து கொள்கிறது. பெரியவர்கள் குழந்தைகள் போலவே இரக்க சுபாவத்தோடு இருந்தால், அது ஒரு மிகப்பெரிய பலமாக விளங்கும்.
மன்னிக்கும் குணம்: குழந்தைகள் பெரும்பாலும் பிறரை திறந்த இயல்பான மனதுடன் அணுகுகிறார்கள். மக்கள் மீது இயல்பான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த குணம் பெரியவர்களுக்கு உறவுகள் மற்றும் நட்புகளில் உண்மையான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். பிறர் செய்த தீங்குகளைக் கூட எளிதில் மறந்து மன்னிக்கும் குணம் கொண்ட குழந்தைகளின் பண்பு பெரியவர்களுக்கு இருந்தால் வாழ்வில் வெறுப்பும் கசப்பும் இருக்காது. அவர்கள் வாழ்வு தென்றல் வீசும் நந்தவனமாக மாறிவிடும்.
மதிக்கும் குணம்: தங்களை உயர்வாக மதிக்கும் குணம் குழந்தைகளுக்கு உண்டு. மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இந்த குணம் பெரியவர்களுக்கு இருக்கும்போது அவர்கள் தன்னுடைய சொந்த இயல்புகளுடன் வாழ்வதோடு, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை அணுக முடியும்.