வறியவர் வாழ்வு சிறக்க…

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர், 17
வறியவர் வாழ்வு சிறக்க…

ன்று அக்டோபர், 17 - சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதன் கருப்பொருள் கண்ணியமான வேலை மற்றும் சமூகப் பாதுகாப்பு, அனைவருக்கும் கண்ணியத்தை நடைமுறைப்படுத்துதல் என்பது ஆகும். அரசு வறுமை ஒழிப்புக்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வரும் வேளையில், தனி மனிதர்களாகவும், குழுக்களாக இணைந்தும் நம்மால் ஆன பங்களிப்பை வறுமை ஒழிப்பில் செலுத்த வேண்டியது அவசியம். அதற்கான சில வழிமுறைகளை இந்த பதிவில் காண்போம்.

1. எப்போதும் கிழிந்த துணிகளை வறியோருக்கு தானமாகத் தராமல், ஓரளவு நல்ல நிலையில் உபயோகப்படுத்தக்கூடிய நமது பழைய ஆடைகளை தானமாகத் தரலாம். இல்லாதவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கலாம். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு பணமாகவும் தந்து உதவலாம்.

2. கைவிடப்பட்ட சாலையோர முதியவர்களை அடையாளம் கண்டு, தொண்டு நிறுவனங்களுக்குத் தகவல் தந்தால் அவர்கள் வந்து அழைத்துப் போவார்கள்.

3. வேலை செய்ய விருப்பம் இருந்தும், எந்த வேலையும் கிடைக்காமல் வறுமையில் வாடுபவர்களை அடையாளம் கண்டு, நமக்குத் தெரிந்த வீடுகளில் வீட்டு வேலைகளில் அவர்களை அமர்த்தலாம். செக்யூரிட்டி, கார் துடைக்கும் பணி போன்ற வேலைகளைக் கொடுத்து அவர்களின் வருமானத்துக்கு வழி செய்யலாம்.

4. அரசின் நலத்திட்டங்கள் உண்மையிலேயே வறுமையில் வாடுபவர்களை சில சமயங்களில் சென்றடைவதில்லை. நாம் தன்னார்வலராக செயல்பட்டு அத்தகைய வறியவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் கிடைக்க வழி செய்யலாம்.

5. வழக்கறிஞர்களைச் சந்தித்து வறுமையில் வாடும் மக்களுக்கான சட்ட திட்டங்கள், அவர்களுக்காக செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் மூலம் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய உதவிகளை கிடைக்கச் செய்யலாம். சிறு தொழில் செய்ய விரும்பும் வறியவர்களுக்கு வங்கியில் கடன் பெற உதவி செய்யலாம்.

6.  நமது நேரத்தையும் திறமையையும் ஒதுக்கி உள்ளூர் தன்னார்வல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வறுமையில் வாடும் மாணவர்களுக்காக டியூஷன் எடுக்கலாம். படிக்க ஆர்வம் இருந்தும் வறுமைக்கோட்டில் வாழும் இளைய சமுதாயத்துக்கு பணமாக தந்து உதவலாம்.

7. ஏழை மாணவர்களுக்கு பழைய புத்தகங்களைக் கொடுத்து உதவலாம். நம் வீட்டுப் பிள்ளைகள் எழுதி முடித்து வெற்றுத்தாள்கள் கொண்ட பழைய நோட்டுகள், பென்சில்கள், பேனாக்கள், ரப்பர்கள், பரிட்சை அட்டைகள் (exam pad), புத்தகப் பைகள் போன்றவற்றை அவர்களுக்குக் கொடுக்கலாம்.

8.  திறமை வாய்ந்த கற்றோரை அழைத்து, ஏழை மாணவர்களுக்கான பயிலரங்குகள் நடத்தி, அவர்களுக்கு மேலே படிப்பதற்கான யோசனைகளையும், படித்து முடித்த பின் எந்த மாதிரியான வேலைக்குப் போகலாம் என்பதற்கான யோசனைகளையும், பயிற்சிகளையும் தரலாம்.

9. படிப்பறிவில்லாத மகளிர் மற்றும் முதியோருக்கு, சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களின் மூலம் இலவசமாக கைத்தொழில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யலாம்.

10. பல லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் நடத்துவதை விட, ஏழை எளியவர்களுக்கு உணவளித்து நல்ல உடைகள் வாங்கிக் கொடுக்கலாம். பிறந்த நாள் விருந்து, விசேஷ நாட்களில் இல்லாதவர்களுக்கு விருந்து தரலாம்.

11. கார், ரயில் பயணத்தின்போது, ​​கையோடு தின்பண்டங்கள், உணவுப் பொட்டலங்கள் கொண்டு சென்று, யாசிக்கும் வறியவர்களுக்கு அளிக்கலாம்.

12.  கறிவேப்பிலை, கொத்தமல்லி வாங்குவதற்குக் கூட பெரிய மால்கள், பழமுதிர் நிலையங்களை நாடாமல் தெருவோர சிறு வியாபாரிகளிடம் காய்கறிகளை வாங்கலாம். அதேபோல, மளிகை பொருட்களையும் வீட்டருகில் இருக்கும் மிகச் சிறிய பெட்டி கடையில் கூட வாங்கலாம். இதனால உள்ளூர் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து, வேலை வாய்ப்பும் உருவாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com