

நாம் இரயிலில் பயணிக்கும்போது நமது கைப்பேசி கீழே விழுந்து விடக்கூடும். அதுவும் பயணம் செய்யும் இரயில் பெட்டியின் கதவின் அருகில் நின்றுக் கொண்டோ, உட்கார்ந்துக் கொண்டோ கைப்பேசியில் பேசும்போது கைப்பேசி நம் கையியிருந்து நழுவி கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல் நாம் வைத்திருக்கும் பொருள்கள் ஏதேனும் ஒன்று கூட இரயில் பெட்டிக்கு வெளியே கீழே விழக்கூடும். அவ்வாறான சூழ்நிலைகளில் தமிழக ரயில் தகவல் எனும் எக்ஸ்வலைதள பக்கத்தில் பயணிகளுக்கு சில அறிவுரைகள் கூறப்பட்டுள்ளது.
அதில் அவ்வாறான சூழ்நிலைகளில் நாம் பதட்டப்பட்டு அவசர சங்கிலியை இழுக்கக் கூடாது என்றும் அவ்வாறு இழுப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும் இதற்கு ₹5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
நாம் உடனடியாக அருகில் கடந்து செல்லும் கம்பத்தின் எண்ணைக் குறித்துக்கொள்ள வேண்டும். நமது கைப்பேசி அல்லது பொருள் அந்த கம்பம் ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுவப்பட்டிருக்கும். இந்தக் கம்பத்தில் (Electrical Pole / Kilometer Stone) மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் எண் மற்றும் குறியீட்டையும், நமது பொருள் விழுந்த இடத்தையும் இரயில்வே அதிகாரிகளுக்கு நமது புகாரில் தெரிவிக்க வேண்டும்.
பொருள் அல்லது கைப்பேசியை தவறவிட்ட இடம் மற்றும் நாம் நமது பெயர், வயது, பாலினம், பயணம் செய்யும் இரயிலின் எண், பெயர், பெட்டி எண், இருக்கை எண், பயணச்சீட்டின் நகல் ஆகியவற்றின் ஆதாரங்களுடன் டிக்கெட் பரிசோதகர் அல்லது ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரியை அணுகி, எழுத்து மூல புகார் ஒன்றினை அளிக்கவேண்டும்.
நாம் தொலைந்த பொருளை நாம் சொல்லும் இடத்தில் இரயில்வே அதிகாரிகள் தேடிப்பார்த்து அதை நம்மிடம் திரும்பவும் கொடுப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் உடனடி ரயில்வே ஹெல்ப்லைன் 139 அல்லது RPF உதவி எண் 182 ஆகியவற்றில் அழைத்து தேவையான உதவியை நாம் பெறலாம்.
இது குறித்து புகார் பதிவு செய்வது மிகவும் முக்கியம். அடுத்த ரயில் நிலையத்தை அடைந்தவுடன், அங்குள்ள ரயில்வே காவல் படை (RPF) அல்லது அரசு ரயில்வே போலீஸ் (GRP) அலுவலகத்திற்குச் சென்று முறையான புகார் (FIR) ஒன்றினை பதிவு செய்யவேண்டும்.
புகாரை பதிவு செய்யும்போது, நமது அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டியதும் மிகவும் அவசியம். பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் மட்டுமே, ரயில்வே பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதிக்குச் சென்று தேடுவார்கள்.
செல்போன் போன்ற தொலைந்த பொருள் மீட்கப்பட்டவுடன் உரிய அடையாளச் சான்று மற்றும் உரிமையை நிரூபிக்கும் தகவல்களைச் சரிபார்த்த பிறகு, நம்மிடம் நமது பொருள் ஒப்படைக்கப்படும்என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விழிப்புணர்வு நம் அனைவருக்கும் இப்போது மிகவும் தேவை.