

ஒவ்வொரு வீட்டிலும் நேர்மறை ஆற்றல் நுழைவதற்கான முக்கிய இடமாக பிரதான வாசல் பகுதி உள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த வாசல் பகுதியில் மங்களகரமான சின்னங்கள் இருந்தால் வாஸ்து சாஸ்திரத்தின்படி நேர்மறையான சூழலை உருவாக்க முடியும். ஏனெனில் மங்களகரமான சின்னங்கள் அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் அமைதிக்கு வழி வகுக்கின்றன. அந்த வகையில் மங்களகரமான சின்னங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
புனித 'ஓம்' சின்னம்
பிரபஞ்ச ஆற்றலையும், ஆன்மீக சக்தியையும் குறிக்கும் புனிதமான சின்னமான 'ஓம்' மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனை வீட்டின் வாசல் படியிலும் அல்லது வழிபாட்டு தலத்திலும் வைத்தால் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டின் மன அமைதியை அதிகரித்து மன அழுத்தத்தை குறைத்து சந்தோஷமான குடும்ப சூழ்நிலையை உருவாக்குகிறது. மேலும் ஓம் சின்னம் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதாகவும் பலரின் நம்பிக்கையாக உள்ளது.
பழமையான 'சுவஸ்திகா' சின்னம்
நல்ல அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செழிப்பின் சின்னமாக கருதப்படும் சுவஸ்திகா பழமையான மற்றும் மங்களகரமான சின்னமாக கருதப்படுகிறது. வீட்டின் வாசலின் இருபுறமும் சுவஸ்திகா சின்னம் வரைவதன் மூலம் எதிர்மறை ஆற்றலை தடுக்கலாம். சுவஸ்திகா சின்னத்தின் கீழே 'சுப லாபம்' என எழுதுவது வீட்டில் செல்வதை அதிகரித்து, மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது .
லட்சுமி தேவியின் 'ஸ்ரீ' சின்னம்
லட்சுமி தேவியுடன் தொடர்புடைய ஸ்ரீ என்ற சொல் செல்வ செழிப்பு, நல்ல வாழ்க்கையின் மங்களகரமான சின்னமாக கருதப்படுகிறது. பிரதான வாயிற்பகுதியிலும், பூஜை அறையிலும் ஸ்ரீ சின்னத்தை வரைவதால் குடும்ப ஒற்றுமை, குடும்ப உறுப்பினர்களிடம் அன்னியோன்யம் அதிகரித்து லட்சுமி தேவியின் ஆசிர்வாதத்தால் வீட்டில் பொருளாதார நிலை மேம்பாடடையும்.
மங்களம் உண்டாகும் 'மங்கல கலசம்'
தூய்மை மற்றும் செழிப்பின் சின்னமாக கருதப்படும் மங்கள கலசத்தை வீட்டின் நுழைவாயிலிலோ அல்லது வழிபாட்டு தளத்தில் வைக்கும் பொழுது வீட்டில் அமைதி மற்றும் மகிழ்ச்சியான சூழல் உருவாவதோடு வாஸ்து சாஸ்திரத்தின் படி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது. மேலும் வீட்டில் உள்ள தடைகளை அகற்றி செல்வ செழிப்புடன் வைக்க உதவி புரிகிறது.
மேற்கூறிய எல்லாவற்றையும்விட வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க வீட்டின் வாசல் பகுதியை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது வீட்டின் மகிழ்ச்சியை அதிகரிக்க உதவும். அதோடு மங்கல சின்னங்களையும் வரையும்போது இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது வாஸ்து நிபுணர்களின் நம்பிக்கையாக உள்ளது.