
நவீன சமையலறைகளில் விதவிதமான உபகரணங்கள் வந்துவிட்டாலும், காய் நறுக்கும் பலகை இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. முன்பெல்லாம் மரப்பலகைகள் சாதாரணமாக புழக்கத்தில் இருந்தன. ஆனால் இன்று பிளாஸ்டிக், வார்னிஷ் செய்யப்பட்ட மரப்பலகைகள் என பல வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. வசதிக்காக நாம் பயன்படுத்தும் இந்த பலகைகள், சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்தினால் நோய்க்கிருமிகளின் கூடாரமாக மாறிவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா?
குறிப்பாக மரப்பலகைகளை எடுத்துக்கொண்டால், அவை இயற்கையாகவே ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. தக்காளி, இறைச்சி போன்றவற்றை நறுக்கும்போது அவற்றின் சாறு பலகையில் படிந்துவிடும். நமது வெப்ப மண்டல சூழ்நிலையில், இந்த ஈரப்பதம் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற கிருமிகள் வளர ஏதுவாக அமைந்துவிடும்.
நாளடைவில் பலகையில் ஏற்படும் சிறு கீறல்கள், இந்த கிருமிகள் தங்கி பெருக சிறந்த இடமாக மாறிவிடும். இதனால் சால்மோனெல்லா, ஈகோலி போன்ற ஆபத்தான நோய்களை உண்டாக்கும் கிருமிகள் உணவில் கலந்து உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், மரப்பலகைகளில் இருந்து உடையும் சிறு துகள்கள் உணவில் கலந்து ஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். வார்னிஷ் செய்யப்பட்ட பலகைகள் நச்சுத்தன்மையை உணவில் கலக்க வாய்ப்புள்ளது.
பிளாஸ்டிக் பலகைகள் மரப்பலகைகளை விட ஆபத்தானவை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பிளாஸ்டிக் பலகைகளில் கத்தி படும்போது, பிளாஸ்டிக் துகள்கள் உணவில் கலக்கின்றன. மேலும், பலகையில் கீறல்கள் விழுந்து அதில் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கும். இது ஹார்மோன் பிரச்சனைகள், உடல் பருமன், ஏன் புற்றுநோய் வரை கொண்டு செல்லும் அபாயம் உள்ளது.
எனவே, சமையலறை பலகைகளை தேர்ந்தெடுப்பதிலும், பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருக்கும் வீடுகளில், பலகைகளின் சுத்தம் மிக முக்கியமானது. சரியான பலகையை தேர்ந்தெடுத்து, அவற்றை முறையாக சுத்தம் செய்து பயன்படுத்துவதன் மூலம், உணவு மூலம் பரவும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.