ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கென்று ஓர் இடம் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் உண்டு. மண்ணில் போட்ட காசு மங்காது என்பார்கள். ஆனால், அரை கிரவுண்ட் நிலம் வாங்குவதில் ஆரம்பித்து அதில் அழகான வீடு கட்டி முடிப்பது வரையிலும் பல்வேறு விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.
என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்?
1. முதலில் நீங்கள் மனை வாங்குவது ரியல் எஸ்டேட் கம்பெனி என்றால், அதனைப் பற்றி முழுமையாக விசாரித்து கொள்ள வேண்டும். குறைந்தது 10 ஆண்டுகளாவது இந்தத் துறையில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2.மனையை வாங்கும் முன்பு அதனுடைய தாய் பத்திரத்தின் ஒரிஜினல் சரியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
3.குறைந்தது முப்பது வருடங்களுக்கான வில்லங்க சான்றிதழ்(ஈ.சி) அவசியம் பார்க்க வேண்டும். இந்த முப்பது வருடங்களில் சொத்து யாரிடமிருந்து யாருக்கு மாறியது என்பதை முழுதாகத் தெரிந்து கொள்ள வேண்டும் .
4.மனை(ப்ளாட்) எனில், சி.எம்.டி ஏ அல்லது டி.டி.சி.பி அங்கீகாரம் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இந்த அங்கீகாரம் இருந்தால் மட்டுமே அதை அப்ரூவ்டு மனை என சொல்ல முடியும். அப்போது தான் அந்த மனை வாங்க வங்கிகள் கடன் தரும்.
5.பட்டா மனைகளை வாங்குவதே எப்போதும் நல்லது. பட்டா மனையாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அதில் வீடு கட்டிக் கொள்ளலாம்.
6. வாங்கும் இடத்துக்கான நிலவரி கடந்த வருடங்களில் கட்டப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். இதனை பார்ப்பதற்கு இரு காரணங்கள். ஒன்று யார் பெயரில் வரி கட்டப்பட்டுள்ளதோ அவர்தான் மனையின் ஒனர் என்பது அதன் மூலம் தெரிய வரும். அடுத்தது கடந்த சில வருடங்களில் அவர் வரி கட்டாவிடில், சொத்து உங்கள் கைக்கு வந்த பின் அந்த வரிகளை நீங்கள் கட்ட நேரிடலாம். சொத்தின் ஒனர்ஷிப்பை உறுதி செய்ய இந்த வரி ரசீதுகள் அவசியம்.
7. குடியிருப்புகள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான கட்டுமான விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு மனை உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்வதும் அவசியம்.
8 எனவே, சொத்து விஷயங்களை டீல் செய்யும் வழக்கறிஞராகப் பார்த்து அவரிடம் இந்த விஷயங்களை சரி பார்த்த பிறகே நிலம் வாங்க முடிவெடுப்பது நல்லது. பல லட் சங்கள் செலவு செய்து ஒரு சொத்து வாங்கும் போது சில ஆயிரம் வழக்கறிஞருக்குச் செலவு செய்து அதில் வில்லங்கம் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது தானே?