உலகில் உள்ள எல்லா பெற்றோருக்குமே தங்களுடைய குழந்தை மிகச்சிறந்த இடத்தை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான விஷயங்களை செய்து கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படுவது வழக்கம். ஆனால் அதில் குழந்தைகளுக்குத் தேவையானது என நினைத்து பல தேவையில்லாத விஷயங்களையும் பெற்றோர்கள் செய்து கொடுக்கின்றனர். எனவே இந்த பதிவில் உங்கள் குழந்தை வெற்றியாளராக மாற பெற்றோர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி பார்க்கலாம்.
1. குழந்தைகளுடன் வெளிப்படையாக பேசுங்கள்: தினசரி உங்கள் குழந்தைகளுடன் வெளிப்படையாக பேசி, அதன் வழியாகவே பொறுப்புணர்வு, சுதந்திரம் போன்ற விஷயங்களை கற்றுக் கொடுங்கள். என்ன செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற போதனைகளை சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போது, எதிர்காலத்தில் அவர்கள் சிறப்பானவர்களாக மாற உதவும். மேலும் சொல்லிக் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர்களை வற்புறுத்தாமல், நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விஷயங்களை அவர்கள் பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் அவர்களுக்கு உணர்த்துங்கள்.
2. வீட்டின் சூழ்நிலையை சிறப்பாக வைத்துக் கொள்ளுங்கள்: ஒரு குழந்தையின் வெற்றி என்பது அவர்களது வீட்டு சூழலில்தான் உள்ளது. எந்த அளவுக்கு ஒரு குழந்தைக்கு தன் பெற்றோர்கள் ஆதரவாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு பிள்ளைகள் தன் வாழ்வில் தைரியமாக செயல்படும் வாய்ப்புள்ளது. வீட்டில் தினசரி நல்ல பழக்கங்களை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். உங்கள் குழந்தை வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான அனைத்தையும் செய்து கொடுங்கள். ஹோம் ஒர்க் செய்யும் நேரம், விளையாடும் நேரம், உறங்கும் நேரம் என அனைத்தையும் சிறப்பாகக் கற்றுக் கொடுத்தால் பள்ளியிலும் அவர்கள் நல்ல முறையில் நடந்து கொள்ள வாய்ப்புள்ளது.
3. உங்கள் பிள்ளைகளின் பள்ளியுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்: பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளியில் ஒரு முறை தன் பிள்ளையை கொண்டு போய் சேர்த்து விட்டு வந்தால், பின்னர் அந்த பக்கமே போக மாட்டார்கள். தினசரி வீட்டு வாசலுக்கு ஸ்கூல் வேன் வரும், அதில் ஏற்றிவிட்டு இவர்கள் வேலையை பார்க்க சென்று விடுவார்கள். ஆனால் உங்கள் குழந்தை பள்ளியில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் கவனிக்க வேண்டும். அவ்வப்போது பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களுடன் உங்கள் பிள்ளைகள் சார்ந்து பேசுங்கள். இத்தகைய விசாரிப்புகள் மூலமாக, நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு மேலும் என்ன செய்து கொடுக்கலாம் என்ற தெளிவை அடைய முடியும்.
4. குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள்: குழந்தைகளுக்கு பள்ளியில் கற்றுத் தரும் விஷயங்கள் மட்டுமே போதாது. பெற்றோர்களும் முடிந்தவரை குழந்தைகளின் கல்வியில் பங்களிக்க வேண்டும். அவர்களுக்கு ஏதாவது பாடம் கடினமாக இருந்தால், அதை மேம்படுத்துவதற்கு நீங்கள் உதவ வேண்டும். அவர்களுக்கு தேவையான கற்றல் திறன்களை ஏற்படுத்தி, தேர்வுக்கு சிறப்பாக தயாராக உதவுங்கள். குழந்தைகள் வீட்டில் படிக்கும் போதும் அவர்களுடன் இருங்கள். இச்சமயங்களில் நீங்கள் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம், முடிந்தவரை மென்மையாக குழந்தைகளை கையாள கற்றுக் கொள்ளுங்கள்.
இது தவிர தினசரி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை கொடுப்பது பெற்றோர்களின் கடமையாகும். அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கற்றுக் கொடுத்து, ஒவ்வொரு நாளும் அவர்கள் புத்துணர்ச்சியாக இருப்பதை உறுதி செய்யுங்கள். இவை அனைத்தையும் நீங்கள் சரியாக செய்யும்போது, வாழ்வில் பல சவால்களை எதிர்த்து போராடும் மனப்பான்மை உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படும்.