பிள்ளைப் பாசத்தால் வந்ததா 20 வருட மௌனம்? ஒரு விசித்திரமான ஜப்பானிய குடும்பத்தின் கதை!

Chinese Couple
Chinese Couple
Published on

உறவுகளின் உயிர்நாடி உரையாடல் என்பார்கள். கணவன்-மனைவிக்கு இடையே எழும் சின்னச்சின்ன ஊடல்கள் கூட சில மணித்துளிகளில் பேசித் தீர்க்கப்படாவிட்டால், அதுவே பெரும் மனக்கசப்புகளுக்கு வழிவகுத்துவிடும். ஆனால், ஒரு சிறு பொறாமைக்காக, தன் மனைவியுடன் சுமார் இருபது ஆண்டுகள் பேசாமல் ஒரு கணவர் வாழ்ந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? 

ஜப்பானைச் சேர்ந்த கட்டயாமா என்பவருக்கும், அவரது மனைவி யூமிக்கும் மூன்று குழந்தைகள். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அது ஒரு மகிழ்ச்சியான குடும்பம். கட்டயாமா தன் பிள்ளைகளிடம் பாசத்துடன் பேசி, ஒரு நல்ல தந்தையாகவே நடந்துகொண்டார். 

ஆனால், அந்த வீட்டின் சுவர்களுக்குள் ஒரு விசித்திரமான அமைதி நிலவியது. தன் மனைவியின் எந்தவொரு கேள்விக்கும் கட்டயாமாவின் பதில், வெறும் தலையசைப்பாகவோ அல்லது ஒரு சிறு முனகலாகவோ மட்டுமே இருந்தது. "அம்மாவிடம் மட்டும் அப்பா ஏன் பேசுவதில்லை?" என்ற கேள்வி அந்தப் பிள்ளைகளின் மனதில் வளர்ந்துகொண்டே இருந்தது. ஆண்டுகள் உருண்டோடின, அந்த வீட்டின் மௌனமும் இருபது வருடங்களைத் தொட்டது.

தங்கள் பெற்றோரின் இந்த அசாதாரணமான உறவுமுறைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய அவர்களின் மகன், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் உதவியை நாடினார். அந்த நிகழ்ச்சி நிர்வாகிகள் இந்த சிக்கலான குடும்பப் புதிரைத் தீர்க்க முன்வந்தனர். அவர்கள் கட்டயாமாவை அழைத்து, இத்தனை வருட கால மௌனத்திற்கான காரணத்தைக் கேட்டபோது, அவர் சொன்ன பதில் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. 

குழந்தைகள் பிறந்த பிறகு, தன் மனைவி யூமியின் முழு கவனமும், அன்பும் பிள்ளைகளை நோக்கியே சென்றுவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட ஒருவித பொறாமை மற்றும் மனவருத்தத்தாலேயே அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும் கூறினார். தாய்மையின் பேரன்பில் தான் புறக்கணிக்கப்பட்டதாக அவர் உணர்ந்ததே இந்த நீண்ட மௌன விரதத்திற்குக் காரணம்.

இதையும் படியுங்கள்:
தொலைக்காட்சி எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது? தெரிந்து கொள்வோமா?
Chinese Couple

தொலைக்காட்சி நிகழ்ச்சியினர், அவர்கள் இருவரும் சந்தித்துப் பேச ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பூங்காவில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்தனர். அந்த நெகிழ்ச்சியான தருணத்தில், யூமி மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார். கணவரின் இறுக்கம் மெல்லத் தளர்ந்தது. 

இத்தனை வருடங்களாகத் தன் மனதில் பூட்டி வைத்திருந்த உணர்வுகளைக் கட்டயாமா கொட்டத் தொடங்கினார். "நாம் பேசிக்கொண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. நீ குழந்தைகளின் மீது காட்டிய அக்கறை அளப்பரியது. நாம் கடந்து வந்த பாதை கடினமானது. இனிவரும் காலத்திலாவது இணைந்து பயணிப்போம்" என்று அவர் கூறியபோது, அந்த இருபதாண்டு கால இடைவெளி நொடியில் மறைந்து போனது. 

தூரத்திலிருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவர்களின் பிள்ளைகள் ஆனந்தக் கண்ணீருடன் அந்த அற்புதத் தருணத்தைக் கொண்டாடினர்.

இந்தச் சம்பவம் ஒரு ஒவ்வொரு உறவுக்குமான ஒரு பாடம். அகங்காரமும், சின்னச்சின்னப் பொறாமைகளும், சரியான நேரத்தில் தீர்க்கப்படாத மனக்கசப்புகளும் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு கட்டயாமாவின் வாழ்க்கை ஒரு சாட்சி. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com