மன அமைதிக்காக நாம் என்னென்னவோ செய்கிறோம். மன அமைதி என்பது நம்மிடம்தான் இருக்கிறது. ஒவ்வொரு நோய்க்கும் மிக முக்கியப் புள்ளியாக இருப்பது மன நோய்தான். அப்படி என்றால் எல்லா நோய்க்கும் நம்மிடமே இருக்குதானே மருந்து.
ஒரு காபி கடையின் உரிமையாளர் அன்றைய நாள் முழுவதும் மிகவும் பிஸியாக இருந்தார். அன்று சனிக்கிழமை என்பதால், அவருடைய கடையில் கூட்டம் அதிகமாகவே இருந்தது, வாடிக்கையாளர்களும் அதிகமாகக் காணப்பட்டனர்.
காலையிலிருந்தே அவர் அதிக வேலைகளில் இயங்கிக் கொண்டிருந்தார். மாலையில் அவருக்கு தலை வலிப்பது போல் உணர்ந்தார். நேரம் போகப் போக, அவரது தலைவலி அதிகமாகியது. பொறுக்க முடியாமல், தனது ஊழியரை கடை விற்பனையை கவனிக்க வைத்து விட்டு கடையை விட்டு வெளியே வந்தார். தலைவலியைப் போக்க வலி நிவாரணி மாத்திரை வாங்குவதற்காக அவர் அந்தத் தெருவில் இருந்த மருந்தகத்திற்கு சென்றார்.
மாத்திரையை வாங்கி விழுங்கி நிம்மதி அடைந்தார். அடுத்த சில நிமிடங்களில் அவரது தலைவலி முற்றிலும் குறைந்து நலமடைந்து விடுவார் என்று அவருக்குத் தோன்றியது. மருந்துக்கடையை விட்டு வெளியே செல்லும்போது, எதார்த்தமாக விற்பனைப் பெண்ணிடம், “உங்கள் கடையின் உரிமையாளர் எங்கே? அவர் இன்று கேஷ் கவுண்டரில் இல்லையே?" என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண், "ஐயா, அவருக்குத் தலைவலி வந்து மிகவும் அவஸ்தைபட்டார். அவருடைய தலைவலியை போக்க உங்கள் காபி கடைக்குச் சென்றிருக்கிறார். உங்கள் கடையில் ஒரு கப் சூடான காபியை குடித்தால்தான் அவருக்கு தலைவலி தீரும்" என்று கூறினார். அந்த காபி கடை உரிமையாளர் வாயடைத்து நின்றார். நம்மிடம் இருக்கும் ஒன்றை நாமே வெளியில் தேடுகிறோம். இது எவ்வளவு விசித்திரமானது. ஆனால், இதுதான் உண்மை. மருந்து கடைக்காரர் காபி குடிப்பதன் மூலம் தலைவலியை நீக்குகிறார். அதேவேளையில் காபி கடைக்காரர் மாத்திரை சாப்பிட்டு தலைவலியை போக்குகிறார்.
இதேபோல்தான், நம்மில் பலரும் மன அமைதியைத் தேடி பூமியில் எங்கெங்கோ அலைகிறோம். இறுதியில், அமைதியானது நமது இதயத்திலும் மனதிலும் எல்லா நேரங்களிலும் நமக்குள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
மன அமைதி என்பது நம்மில் திருப்தியடைவதன் மூலமும், நம்மிடம் இருப்பதைக் குறித்து நன்றியுடன் இருப்பதன் மூலமும் கிடைக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.