

அனுபவங்கள் என்னும் சர்வ கலாசாலையில் ஊறித்திளைத்துக் கற்று தேறிய ஞானி கவியரசர் கண்ணதாசன். ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் அனுபவ அறிவு அல்லது முன்னோரது அனுபவங்களே காரணங்களாக அமைந்திருக்கிறது. கவிஞர் (Kavignar Kannadasan quotes) இதற்கு 'செப்பு மொழி' என்று பெயர் வைத்ததற்கு காரணம் என்னவெனில் அவரே சொன்ன பதில்,
“தங்க மொழி என்றோ, வெள்ளி மொழி என்றோ பெயர் வைக்காததற்கு காரணம் பயம் தான். எந்த நேரத்தில் எது நடக்கும் என்று சொல்ல முடியாது. எனவே தான் ‘செப்பு மொழி' என்று பெயர் வைத்தேன். மேலும் செப்புப் பாத்திரங்கள் தான் வீட்டில் புழங்குவதற்கு ஏதுவானது!" என்றார்.
1. வாழ்ந்தவன் வீழ்ந்துவிட்டால், அவன் குடும்பம் கூடச் சந்திக்கு வந்து விடுகிறது. வைரம் மண்ணில் வீழ்ந்து விட்டால் நாய் கூட மிதிக்கிறது. இருக்குமிடமும், இருக்கும் நிலையும் குறைந்த அளவே உள்ளவரை, யானைச் சவாரி தான் கிடைக்காதே தவிரக் கழுதைச் சவாரி செய்ய வேண்டிய கட்டாயம் வராது.
2. அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
3. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ, என்னிடம் சொல்லி விடுங்கள். “நான் உங்களிடம் சொல்வதற்கு எதுவுமில்லை! என்று சொல்லி விடுபவன் நிம்மதியாகத் தூங்குகிறான்.
4. எதிர்காலத்தைச் சரியாகக் கணக்கிட்டு விட்டதாக நினைப்பவன், நிகழ் காலத்தைக் கோட்டை விடுகிறான். எதிர்காலம் ஒரு நாள் நிகழ்காலம் தானே!
5. பணத்தை சம்பாதிப்பதற்கொரு புத்தி வேண்டும். அதை ஒழுங்காக சேர்த்து வைப்பதற்கொரு புத்தி வேண்டும். சேர்த்ததை நியாயமாகத் செலவழிப்பதற்கொரு புத்தி வேண்டும். மூன்று புத்தியும் ஒரே இடத்தில் இருக்க வேண்டுமென்றால் தலையெழுத்து நன்றாயிருக்க வேண்டும்.
6. ஒருபடி அரிசியை வேக வைத்தால், எல்லா அரிசியும் ஒரே மாதிரி வேகிறது. ஜனங்களனைவரும் ஒரே மாதிரிச் செயல்படுகிற நாடு தான் சுபிட்சமாக இருக்கிறது.
7. ஆழமான கிணற்றில் நீர் எடுக்க நீளமான கயிறு வேண்டும். அழுத்தமான ஜனங்களைத் திருத்தியமைக்க அறிவுள்ள தலைவன் வேண்டும்.
8. கடவுள் மனிதனை பூமிக்கனுப்பும் போது ஒன்றே ஒன்றுதான் சொல்லியனுப்பினார். "நீ திரும்பவும் மனிதனாக வராதே, தெய்வமாக வா!" என்பதே அது.
9. எந்த நினைவு உன்னை அதிகமாக துன்புறுத்துகிறதோ, அதற்குப் பெயர்தான் பசுமையான நினைவு.
10. பூமியை ஆழமாகத் தோண்டினால் தான் தண்ணீர் கிடைக்கிறது. உண்மையான அன்பு வைப்பவனுக்குதான் நன்றி நிரம்ப வருகிறது.
11. உருவத்தை அடையாளம் கண்டு கொள்ள உதவுவது கண்கள் மட்டுமே. உள்ளத்தை அடையாளம் கண்டு கொள்ள உதவுவது வார்த்தைகளே. ஒருவரோடு நீ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தால், அவன் ஜாதகமே உன் கைக்கு வந்து விடுகிறது.
12. அமைதியைத் தேடி எங்கெங்கோ அலைந்தேன். கால்கள் வலித்தன. ஓரிடத்தில் அமர்ந்தேன். அமைதி அங்கேயே இருப்பது அப்போதுதான் தெரிந்தது.
13. தினமும் கரையேற முயலும் கடலலைகள், கரை ஏறுவதில் வெற்றி பெற்று விட்டால் உலகத்தின் கவலைகள் ஒருவாறு முடிவு பெற்று விடும்.
14. சோர்வு வரும் நேரத்திலே தான் தத்துவங்கள் பிறக்கின்றன. அர்ஜுனனுக்கு வந்த சோர்வு தானே பகவத்கீதை பிறக்கப் காரணமாயிருந்தது!
15. தொழிலில் கூட்டுச் சேரும்போது, கடனிலே கஷ்டப்படுகிறவனோடு சேராதீர்கள். பணமில்லா விட்டாலும் கடனில்லாத யோக்கியனாகப் பார்த்துச் சேருங்கள்.
இனிமேல் நமது மனங்களிலும் இம்மொழிகள் புழங்கி முன் அனுபவம் உரைக்கும்.