
ஒருவரின் நேர்மறையான சிந்தனைகளும், செயல் பாடுகளும் அவரை எப்போதும் வெற்றிகரமான நபராக வைத்திருக்கும். நேர்மறையான குணங்களைக் கொண்டவர் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார். எதிர்மறையான சிந்தனைகளைக் கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாமல், வெற்றி பெற்றவர்களை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் எப்போதும் புலம்பியே தோற்றுப்போவார்கள்.
ஒருவரின் வெற்றியும் தோல்வியும் அவரே முடிவு செய்கிறார். மனிதர்களின் பலமும் பலவீனமும் அவர்களின் மனதில்தான் உள்ளது. ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையிலும் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துன்பம் ஆகியவற்றை தீர்மானிப்பது அவர்களின் மனதில் உள்ள பலம் மற்றும் பலவீனமான குணங்களினால்தான்.
மனரீதியில் பலமான மனிதர்கள் எல்லா சங்கடங்களையும் கடுமையான சூழ்நிலைகளையும் கடந்து வந்து வெற்றி பெற்று விடுவார்கள். மனிதர்களின் குணநலன்களில் உள்ள குறைபாடுகளே அவர்களின் பலவீனமாக இருக்கிறது. மனிதர்களின் பலவீனங்களை சிறிய குறைபாடுகள், பெரிய குறைபாடுகள், அபாயகரமான குறைபாடுகள் என்று மூன்று பிரிவுகளாக நாம் பிரிக்கலாம்.
1. சிறிய குறைபாடுகள்:
ஒரு சில பலவீனங்கள் அவருக்கு பெரிய அளவில் துன்பத்தினை தராது, அதுபோல மற்றவர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட மாட்டார்கள். தன்னிடம் குறை காண்பவர்கள் மனநிலையை சிறிய வகை பலவீனமாக கொள்ளலாம். இவர்கள் எப்போதும் தன்னம்பிக்கை இன்றி காணப்படுவார்கள். எந்த செயல் செய்தாலும் ,அதை அவ நம்பிக்கையோடு செய்வார்கள்.
தங்களைப் பற்றி முன்னேற்றமான சிந்தனைகளை யோசிக்க மாட்டார்கள். அதேநேரம் பிறரிடம் தன்னை எப்போதும் மட்டம் தட்டியே பேசுவார்கள். இவர்களுக்கு மற்றவர்களின் அதிர்ஷ்டத்தின் மீது அதிக நம்பிக்கை இருக்கும். இவர்கள் மற்றவர்களிடம் பேசும் போது அவருக்கும் எதிர்மறையான சிந்தனையை ஏற்படுத்தி விடுவார்கள். இன்றைய காலத்தில் இந்த புலம்பல் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இவர்கள் எப்போதும் புலம்பியே தங்கள் காலத்தை ஓட்டிவிடுவார்கள்.
2. பெரிய குறைபாடு:
எப்போதுமே பெரிய குணநலன் குறைபாடு கோபம்தான். கோபம் தான் அனைவரின் மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது. கோபத்தில் எடுக்கும் எந்த ஒரு முடிவும் சரியாக இருக்காது. கோபம் மற்றவர்களை பாதிப்பதை விட, சம்பந்தப்பட்ட நபரையும் அதிகமாக பாதிக்கிறது. தனிநபரின் கோபத்தின் காரணமாக, அவர் இழந்தது ஏராளமாக இருக்கும். இப்போதைய காலகட்டத்தில் அலுவலகத்தில் சிறிய விஷயத்திற்கு கோவப்பட்டு, அந்த வேலையை உதறிவிட்டு வேறு வேலையை தேடுகின்றனர்.
அவர்கள் சில காலங்கள் வேலையும் கிடைக்காமல் திண்டாடுகின்றனர், ஒரு வழியாக புதிய வேலை கிடைத்து, அந்த இடத்தில் முன்பு இருந்ததைவிட, மோசமான சூழல் இருந்தால் அவர்களின் நிலை பரிதாபம்தான். சிறுசிறு விஷயங்களுக்கு கோவப்படும்போது அந்த நிமிடங்களில் சட்டென்று எந்த ஒரு முடிவும் எடுக்காமல் பொறுமை காப்பது அவசியம். கோவத்தினால் மற்றவர்களை துன்புறுத்துவது, சண்டையிடுவது, மனதை நோகச் செய்வது போன்றவை ஒருவரின் மோசமான பலவீனமாக கருதப்படுகிறது.
3. அபாயகரமான குறைபாடுகள்:
அதிவேக வளர்ச்சி கொண்ட இந்த காலத்தில் பேராசை என்பது அனைவரின் ஆழ்மனதில் ஒரு விதையாக உள்ளது. இது விருட்சமாக வளரும்போது, தனக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பலவித துன்பங்களை கொண்டு வந்து விடுகிறது. ஆசைக்கும் பேராசைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஆசை என்பது பிறரை துன்பப்படுத்தாமல், தன்னுடைய தகுதிக்கு ஏற்ப ஒரு பொருளை அடைவது.
பேராசை என்பது தன் தகுதிக்கு மீறிய ஒன்றை பெறுவதற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லக்கூடிய மனப்பான்மையை தருவது. பேராசையானது பொறாமை, வன்மம், மற்றவர்களை அழித்தல் என்று பலவித வடிவங்களை எடுத்து ஒருவர் மனநிலையை சீர்குலைக்கும் பலவீனமாக இருக்கிறது. ஆகவே மேற்கூறிய இந்த மூன்று பலவீனங்களையும் மாற்றி மனதில் அன்பு, நேர்மை, பணிவு போன்ற பலமான சிறந்த குணங்களை வெளிப்படுத்துங்கள்.