பெரும்பாலான சுய முன்னேற்றப் பதிவுகளில், ஒருவன் செயலில் இறங்கினால் மட்டுமே அவனால் சாதிக்க முடியும் என சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நாம் என்னதான் பிளான் செய்து ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என நினைத்தாலும், அதை செய்ய முடியாமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளது.
ஒரு செயலை செய்ய வேண்டும் என நினைத்து, செய்யாமல் போவதால் வரும் வலி என்னவென்பது எனக்குத் தெரியும். நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அதை எதையுமே செய்யாமல் காலத்தை தாழ்த்துவதால் அது எந்த அளவுக்கு வேதனையைக் கொடுக்கும் என்பதும் எனக்குத் தெரியும்.
எனவே நாம் மிக முக்கிய செயல்களை செய்வதிலிருந்து தடுக்கும் 5 காரணிகள் என்னவென்று இந்த பதிவு வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்ய முயற்சிப்பதால் எதிலுமே கவனம் செலுத்தாமல் அனைத்திலும் தோல்வி அடைகிறோம். இதை ஆங்கிலத்தில் அழகாக Multitasking எனக் கூறுவார்கள். ஒரே நேரத்தில் பல விஷயங்களை மூளையில் போட்டு திணிக்கும்போது, எதை சரியாக செய்ய வேண்டும் என்ற தெளிவு நமக்கு இருக்காது. எனவே ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.
சிலர் அவர்களுக்கான மிக முக்கிய வேலையை செய்வதற்கான மோட்டிவேஷன் கிடைக்கும் வரை காத்திருப்பார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், மோட்டிவேஷன் என்பது நாம் செய்யும் செயலியில் இருந்துதான் கிடைக்குமே தவிர, மோட்டிவேஷன் இருந்தால்தான் வேலையை செய்வேன் எனக் காத்துக் கொண்டிருந்தால் இறுதிவரை அந்த செயலை செய்ய முடியாது.
இன்றைய காலத்தில் நாம் செயற்கையாக மகிழ்ச்சியை உணரும் பல விஷயங்கள் வந்துவிட்டது. அதில் நாம் மூழ்கி அதீத இன்பத்தை அனுபவித்து விடுவதால், ஒரு செயலை செய்வதில் இருந்து கிடைக்கும் இன்பத்தை நாம் உணர முடியாமல் போய்விடுகிறது. குறிப்பாக வீடியோ கேம் விளையாடுவது, ஆபாசப் படங்கள் பார்ப்பது, அதிக சுவையுடைய ஜங்க் ஃபுட்ஸ் மற்றும் டிவி பார்ப்பது போன்ற விஷயங்கள் குறுகிய நேரத்தில் அதிக இன்பத்தைக் கொடுத்து நமது மூளையை மழுங்கச் செய்கிறது.
நம்மில் சிலருக்கு, நாம் செய்ய நினைக்கும் செயலை ஏற்கனவே பலர் செய்கிறார்களே என்ற சிந்தனை இருக்கும். அதை ஏன் நாம் செய்ய வேண்டும்? என நினைத்துக் கொண்டு அமைதியாக இருப்போம். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த செயலை பலர் செய்தாலும் நீங்கள் அதை முயற்சித்துப் பார்த்து அதற்கான உண்மையான அனுபவத்தை பெறவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை மற்றவர்களை விட அந்த ஒரு குறிப்பிட்ட வேலையை நீங்கள் சிறப்பாக செய்யும் திறமை உங்களுக்கு இருக்கலாம். எனவே பிறரைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் உங்களுக்கான அனுபவத்தைப் பெற முயலுங்கள்.
மேலும் பலருக்கு தவறு செய்ய பயமாக இருப்பதால், எதையுமே முயற்சிக்காமல் இருந்து விடுகிறார்கள். ஒருவேளை நாம் செய்யும் தவறு நம் வாழ்க்கையை மோசமாக மாற்றிவிடுமோ என நினைத்துக் கொண்டு, எதையுமே செய்யாமல் தங்கள் வாழ்க்கையை மோசமாக மாற்றிக் கொள்கிறார்கள்.