ஆதிகாலம் முதலே மனிதர்கள் இயற்கையாகவே பழக்கவழக்கங்களின் அடிப்படையில் வாழும் தன்மை கொண்டவர்கள். ஒரு செயலை நாம் தொடர்ச்சியாக செய்யும்போது ஒரு கட்டத்திற்குப் பிறகு அதை எளிதான ஒன்றாக நமது மூளை உணர வைக்கிறது. அப்படிதான் எந்த ஒரு புதிய பழக்கமாக இருந்தாலும் அதை குறைந்தது 21 நாட்கள் நாம் செய்யும் போது, தொடக்கத்தில் கஷ்டமாக இருந்த அந்த விஷயம் காலம் செல்லச் செல்ல எளிதான ஒன்றாக மாறிவிடும்.
மனித மூளையின் தனிச்சிறப்பான மெக்கானிசமே இதுதான். மனித மூளையின் ஆற்றலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற செயல்களை தொடர்ச்சியாக நாம் கொடுக்கும் போது, சிறப்பானவர்களாக மாறுகிறோம். இந்த பதிவு வாயிலாக உங்களுக்கு இருக்கும் கவனச்சிதரல்களை தவிர்த்து எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பதற்கான 5 வழிமுறைகளைப் பார்க்கலாம்.
வாழ்க்கையில் அனைத்தையும் சரியாக செய்வதற்கு முதலில் நாம் தினசரி என்ன செய்யப் போகிறோம் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். எனவே ஒரு நாளை தொடங்குவதற்கு முன்பாகவே அந்த நாளில் என்னென்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். எதையுமே திட்டமிடாமல் ஒருநாளை கடத்துவதற்கு பதிலாக, இதை இதை நான் செய்யப் போகிறேன் என்ற தெளிவுடன் அந்த நாளை கொண்டு செல்ல முயற்சிப்பது, நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வரும்.
Atomic Habits என்ற புத்தகத்தில் மிகச் சிறப்பாக ஒரு விஷயத்தை சொல்லி இருப்பார்கள். அதாவது ஒவ்வொரு நாள் முடிந்து நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்பாக, அன்றைய நாள் என்னென்ன செய்தீர்கள் என்பதை சிந்தித்துப் பார்த்து, அதன் உண்மையை புரிந்து கொள்வது. உதாரணத்திற்கு காலையில் எழுந்ததும் பிரஷ் செய்வது முதல், என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன செய்கிறீர்கள், இன்ஸ்டாகிராமில் என்ன செய்கிறீர்கள், எந்தெந்த தருணங்களில் எப்படியெல்லாம் உணர்ந்தீர்கள் என்பதை அந்த நாளின் முடிவில் நினைவுகூர்ந்து, உங்கள் வாழ்க்கை உண்மையிலேயே எப்படி செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தினசரி உங்களுக்கு கிடைக்கும் விஷயங்களை நினைத்து மகிழ்ச்சியாக இருங்கள். குறிப்பாக உங்களை நீங்கள் சிறப்பாக கவனித்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்கள் சிறப்பாக மாற்றும் உடற்பயிற்சி, நல்ல உணவுகளை உண்பது, மெடிடேஷன், ஒரு வேலையை சிறப்பாக செய்வது போன்ற விஷயங்களை நினைத்து மகிழ்ச்சியாக உணருங்கள். ஒவ்வொரு நாளிலும் உங்களுக்கு கிடைக்கும் சிறிய வெற்றிகளை நினைத்து சந்தோஷப்படுங்கள்.
உங்களுடைய இலக்குகள் சார்ந்த விஷயங்களை மனதில் நினைத்து ஒவ்வொரு நாளும் உங்களுக்கான உத்வேகத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதாவது கவனசிதரல்களுக்கு உட்பட்டு திசைமாறிப் போவது போல் உணர்ந்தால், இத்தகைய சிந்தனை உங்களை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வர உதவும்
ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையோடு ஒன்றி அன்றைய தினம் எது தேவையோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாமல் இறந்த காலத்தை நினைத்து வருந்துவது, எதிர்காலத்தை நினைத்து பயப்படுவது போன்ற விஷயங்கள் உங்களுக்கு எதையும் பெற்றுத் தராது. எனவே நிகழ்காலத்தில் வாழும் மனநிலை மிக மிக முக்கியம்.