எல்லோருக்கும் முதல் முயற்சியில் வெற்றி கிட்டுவதில்லை. பல முறை முயன்றும் சிலருக்கு தோல்வியே கிட்டும். மனதளவில் துவண்டிருக்கும் அவர்களை ஊக்கமூட்ட உதவும் சில உத்திகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. உணர்வுகளை வெளிப்படுத்தட்டும்;
ஒருவருக்கு ஊக்கமூட்டுவது என முடிவெடுத்த பின், அவர் தனது மன உணர்வுகளை உங்களிடம் தயக்கமின்றி வெளிப்படுத்த ஏதுவாக, மென்மையாக அவரை கையாளவேண்டும். தனது அனுபவங்களை அவர் சொல்லும்போது குறுக்கிடாமல் கேட்டுக் கொள்ள வேண்டும். அவர் முழுவதுமாக பேசி முடிக்க அனுமதிக்க வேண்டும்.
2. புரிதலை வெளிப்படுத்துங்கள்;
அவரைப் புரிந்து கொண்டதற்கு ஆதரவாக ‘’உங்கள் மனம் என்னும் எனக்கு புரிகிறது என்று சொல்லும் விதத்தில் அவரது தோளில் தட்டித்தர வேண்டும். ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற தைரியத்தை தர வேண்டும்.
3. தோல்வி சகஜம் என உணர்த்துதல்;
வெற்றி பெறும் முயற்சியில் தோல்வி என்பது மிகவும் சகஜமான விஷயம் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். மிகச்சிறந்த விஞ்ஞானிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் பலமுறை தோற்றுத்தான் தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
4. நேர்மறை வலுவூட்டல்;
அவர்கள் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை புகுத்த வேண்டும். அவர்களின் கடந்த கால வெற்றிகளை நினைவூட்ட வேண்டும். நேர்மறை எண்ணம் கொண்ட ஒருவருக்கு எல்லாமே சாத்தியம் என்பதை வலுவாக அவருக்கு எடுத்துரைக்க வேண்டும்.
5. விடாமுயற்சியின் முக்கியத்துவம்;
இந்த உலகில் யாராலும் அறியப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த முயற்சியும் செய்யாமல் உண்பது, உறங்குவது என்று காலத்தை கழிக்கலாம். ஆனால் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு விடாமுயற்சி மிக அவசியம் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். அது சார்ந்த கதைகள், அனுபவங்களை அவர்களுக்கு தர வேண்டும்.
6. இலக்குகளை அமைக்க உதவுதல்;
அவரது இலக்கு என்ன என்று கேட்டு அறிய வேண்டும். அதை சிறு சிறு பகுதிகளாக பிரித்து அவற்றை எப்படி அடைவது என்பதற்கான திட்டமிடுதலை தர வேண்டும். முதலில் எதார்த்தமாக அடையக்கூடிய எளிய இலக்குகளை அமைக்க வேண்டும். அப்போதுதான் எளிதில் வெற்றி கிட்டும். அவருக்கு தன் மீது நம்பிக்கையும் தைரியமும் வரும் என்பதை உணர்த்த வேண்டும். சிறிய வெற்றிகளை கொண்டாட வேண்டும். அப்போது அவர் மனதிற்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் பிறக்கும்.
7. தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளுதல்;
தோல்விகளை ஆராய்ந்து எதனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பின்னடைவுகள் மற்றும் தோல்விகளை கற்றுக் கொள்வதற்கும் வளர்வதற்கும் வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று அவர்களை ஊக்குவிக்க வேண்டும். தன் முயற்சியில் என்ன தவறு நேர்ந்தது என்று பொறுமையாக சிந்தித்துப் பார்த்தால் அந்த தவறு விளங்கும். மீண்டும் அவற்றை செய்யாமல் இருக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என அவருக்கு உணர்த்த வேண்டும்.
8. உதவ தயார் என்று அறிவித்தல்;
‘’துணிச்சலாக முயற்சிகளை ஆரம்பிக்கட்டும். அதற்கான முழு உதவியும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் நிபுணர்கள் மற்றும் நண்பர்களின் உதவியையும் நடலாம் என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம்.