நம்மை யாராவது உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ, நம் திறமைகளை சாடியோ அவமானப் படுத்தினால், சிலர் அவர்கள் மீது கோபம்கொண்டு சென்று விடுவார்கள். ஆனால், சிலர் அவர்கள் சொல்வதை எண்ணி எண்ணிக் கணக்குப்போட்டு ‘அவன் சொன்னதுதான் சரி, நான் எதற்கும் லாயக்கு இல்லை ‘ அல்லது ‘ நான் பார்ப்பதற்கு அவன் சொன்ன மாதிரிதான் உள்ளேன் ‘ என்று கவலைப்பட்டுக் கொள்வார்கள்.
இப்படி நினைப்பதால் நம்முடைய தன்னம்பிக்கை துளியும் இல்லாமல் போய்விடும். ஒரு வேலை செய்ய ஆயிரம் தடவை யோசித்து, நம்மை நாமே மட்டப்படுத்தி, அதனைக் கோட்டை விட்டு உண்மையிலேயே எதற்கும் லாயக்கில்லாதாவர்களாக மாறிவிடுவோம்.
நம்மை மட்டம் தட்ட ஆயிரம் காரணங்கள் அவர்களுக்கு இருக்கும். ஏன், நாம் செய்யும் சில சிறப்பான விஷயங்கள், நமது ஆற்றல், இதெல்லாம் அவர்களுக்கு இல்லை என்ற பொறாமையில் கூட அப்படி செய்யலாமல்லவா? அல்லது தான் சிறந்தவர் என்று நினைப்பதற்காக நம்மை மட்டம் தட்டி அப்படி செய்யலாமல்லவா? இதுபோன்ற எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். நாம் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாமல் நம்மை நாமே பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
முதலில் அவர் சொல்வதையெல்லாம் நாம் யோசித்துப் பார்க்க எந்த அவசியமும் இல்லை. உங்கள் வேலையை நீங்கள் சரியாக செய்கிறீர்கள் என்ற திருப்தி உங்களுக்கு இருந்தால்போதும். இந்த உடையில் நாம் அழகாக இருக்கிறோம் என்று நீங்கள் உணர்ந்தாலே போதும்.
சில சமயங்களில் நீங்கள் இதைஉணர்ந்திருப்பீர்கள்:
உங்களுக்கு இருக்கும் முகம் அப்படியேதான் இருக்கும். நீங்கள் எப்போதும் போலத்தான் இருப்பீர்கள். ஆனால், ஒரு புது உடை அணிந்தாலோ அல்லது புதியதாக ஒரு மேக்அப் செய்துகொண்டாலோ, அழகாக மாறிவிட்டதாக உணர்வீர்கள். ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். அதற்கு காரணம் உங்களுக்கு ஏற்பட்ட அந்த மாறுதல் உணர்வுத்தான் .
உங்கள் தன்னம்பிக்கை உணர்வை மேம்படுத்த 5 வழிகள்:
1. சரியான நேரத்தில் சாப்பிட்டு தூங்க வேண்டும். உங்கள் வேலைகளை அந்த நேரத்தில் சரியாக செய்துமுடிக்க வேண்டும். மற்றவர்களை நாம் கவனித்துக் கொள்வதைவிட முதலில் நம்மை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் தேவைகள் என்னனென்னவென்று குறிப்பு எடுத்து வைத்துக்கொண்டு அதனை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். தியானம் செய்வதால் மன அழுத்தம் குறையும். மற்றும் உங்கள் உணர்வினைக் கட்டுப்படுத்த உதவும்.
2. உங்களுக்கென்று ஒரு லட்சியம் வைத்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை இல்லாமல் எந்த லட்சியத்தையும் அடைய முடியாது.
பல சமயங்களில் உங்கள் லட்சியத்தின் மீது உள்ள பேராசையே தன்னம்பிக்கையை ஊட்டி உங்களை அழைத்து செல்லும். இது உங்களை எந்த இடத்திற்கும் தயக்கமில்லாமல் அழைத்து செல்லும்.
3. உங்களுடன் எப்போதும் நேர்மறை வார்த்தைகளையும் செயல்களையும் செய்யும் ஆட்களை வைத்துக் கொள்ளுங்கள். ‘செய்ய முடியாது‘, ‘நடக்காது ‘ என்றும் கூறும், அல்லது உங்களை மட்டம் தட்டும் ஆட்களிடமிருந்து தள்ளியே இருங்கள்.
4. உங்களுக்கு நீங்களே புதுப்புது சவால்களை வைத்துக் கொண்டு நிறைவேற்றுங்கள். இதனால் செய்து முடிக்க முடியாது என்று நீங்கள் நினைத்த காரியத்தைக் கூட திட்டம் போட்டு முடித்துவிடுவீர்கள். மேலும் இது புது சூழலை, புது பழக்கங்களை மற்றும் புதுவிதமான அனுபவங்களைக் கொடுக்கும்.
5. உங்களுக்கு நீங்களே ‘நான் செய்து முடிப்பேன் ‘, ‘ எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். இந்த வார்த்தைகள் உங்கள் மூளைக்கு கட்டளைகளாகச் சென்று அந்த ஒரு காரியத்தை செய்து முடிக்க உதவும். மேலும் உங்களுடன் நீங்களே ஊக்கமளித்து உற்சாகத்துடன் பேசிக் கொள்ளுங்கள். ஏனெனில் தனக்குத்தானே பேசுவது மனரீதியாக உங்களை ஊக்குவிக்க உதவும் .