“Life isn't about finding yourself. Life is about creating yourself." -George Bernard Shaw.
"வாழ்க்கை என்பது உங்களைக் கண்டறிவதல்ல. வாழ்க்கை என்பது உங்களை உருவாக்கிக் கொள்வது.” உலகப்புகழ் பெற்ற தத்துவஞானி பெர்னாட் ஷா சொன்னது இது.
கண்டறிவதற்கும் உருவாக்கிக் கொள்வதற்கும் இடையில் என்ன வேறுபாடு? நண்பர்கள் இருவர் ஒன்றாகப் படித்து முடித்து வேலை தேடத்துவங்கினர். இதில் ஒருவர் படிப்பில் புலி என பெயர் வாங்கியவர். மற்றொருவர் சராசரியாக படித்தவர்.
இருவரின் குடும்பங்களும் இவர்களின் வேலையை நம்பியே இருந்தன. எவ்வளவு அலைந்தும் தகுந்த வேலை அமையாமல் சிரமப்பட்ட இருவரும் ஒரு உறுதிமொழியை எடுத்தனர். சரியாக நான்கு மாதங்கள் பிரிந்து வெவ்வேறு திசைகளில் சென்று வேலை தேடுவது என்றும் பின் சந்திப்பது என்று முடிவு செய்து பிரிந்தனர்.
நான்கு மாதங்கள் ஆயிற்று. அந்த ஊருக்குள் கோட்டு அணிந்து வந்த இளைஞனைப் பற்றித்தான் பேச்சு. தாடி வைத்து விரக்தி நிலையில் காணப்பட்ட இளைஞர் நண்பனை சந்திக்க காத்திருந்தார். அதோ அங்கு கோட்டு போட்டு வேகமாக வருவது தன் நண்பனா? ஆச்சரியமாக பார்த்த தாடி இளைஞனை ஓடி வந்து கட்டிக் கொள்கிறார் அவர்.
"என்ன நண்பா ஏன் இப்படி இளைத்திருக்கிறாய்?"
"அடப் போப்பா… என்னதான் படித்திருந்தாலும் வேலை கிடைக்க மாட்டேங்குது. கிடைக்கிறத வேலை எல்லாம் என் தகுதிக்கு குறைவா இருக்கு. நான் விரும்பற வேலைக்கு என்னை விட திறமைசாலியெல்லாம் காத்துக்கிடக்காங்க. வேலை கிடைக்கும் வரை தேட வேண்டியதுதான்.
அது சரி நீ எப்படி இப்படி ஆளே மாறிட்டே? என்ன பண்றே?"
"படிப்பில் கெட்டிக்காரனான உனக்கே வேலை இல்லை... எனக்கெல்லாம் எங்க கிடைக்கும்? நான் ஒரு கம்பெனிக்கு நேர்முகத்தேர்வுக்கு போனேன். அங்க இருக்கிற பணியாளர்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து இங்கே தங்கி வேலை பார்க்கறாங்க. அவங்களுக்கு அவங்களோட துணிகளைத் துவைக்கிறது பெரிய கஷ்டமா இருக்குதுன்னு சொன்னாங்க. அப்பத்தான் எனக்கு அந்த ஐடியா வந்தது. உடனே பிளான் செய்து அவங்களுக்கு துணிகளை துவைத்து நீட்டா அயர்ன் செய்து தர பாங்க்ல கடன் வாங்கி ஓரு வாஷிங் யூனிட்டை போட்டேன். நல்ல வரவேற்பு. இப்ப நாலு யூனிட்ல நாற்பது பேர் வேலை செய்யறாங்க".
அதற்குள் போன் வர "நண்பா உனக்கும் வேலை வேணும்னா என்னை வந்து பாரு. ஒண்ணும் கவலைப்படாதே. நிறைய வேலை இருக்கு. உன்னைப் பாக்கணுமேன்னு வந்தேன். பை" சொல்லிவிட்டுப் பறந்தார் படிப்பில் சராசரியான அந்த இளைஞர்.
படிப்பில் புலி இளைஞர் வியப்பில் ஆழ்ந்து மீண்டும் தனக்கான வேலையைக் கண்டறியப் போனார்.
இதுதான் கண்டறிவதற்கும் உருவாக்கிக் கொள்வதற்கும் இடையிலான வேறுபாடு. இதில் கண்டறிவது என்பது ரிஸ்க் இல்லாமல் தேடிய பணியில் வாழும் பாதுகாப்பான பட்ஜெட் வாழ்க்கை, உருவாக்கிக் கொள்வதில் ரிஸ்க் அதிகம் இருந்தாலும் சவால்களை சந்தித்து அதிலிருந்து சாதித்து வெற்றிகரமான மனிதராக மாறுவதுதான் சிறந்த வாழ்க்கை.
வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது, வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் மகத்தான பணியை செய்யும் ஏணியாகிறது. தேடும்போது கண்களில் படும் வாய்ப்புகளை தனக்கென உருவாக்கிக் கொள்பவரே சிறந்த வாழ்க்கை வாழும் வெற்றியாளராகிறார். அப்ப நீங்க??