நம்மில் பலரும் நமக்கு வரும் பிரச்னைகளையும், மற்றவர்களின் விமர்சனங்களையும் கண்டு உடைந்துபோகின்றோம். சமாளிக்கும் வல்லமை அற்றவராக இருக்கின்றோம்.
எது செய்தாலும் அதை விமர்சிக்கவும், தடை சொல்லவும் ஒரு கூட்டம் நம்மைச்சுற்றி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதைப் பார்த்து பயந்துகொண்டு இருந்தால் நம்முடைய ஆத்மார்த்தமான விருப்பங்களை நிறைவு செய்துகொள்ள முடியாது. துணிந்து செயல்பட்டால் வெற்றியை எட்டிப் பிடித்து விடலாம். பின் விமர்சனங்கள் எல்லாம் பாராட்டுகளாக மாறிவிடும். தயக்கத்தை விடுங்கள், உங்களுக்கான உலகம் திறந்துகொள்ளும்.
நமக்கு படிப்பினை தரும் சில பிரபலங்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள்:
1972 ம் ஆண்டு புருஸ் லீயின் ‘ஃபிஸ்ட் ஆப் ஃப்யூரி’ படத்தின் ஷூட்டிங். அதுவரை எந்தப் படத்திலும் இடம்பெறாத அளவுக்கு மிக உயரமான இடத்திலிருந்து கீழே குதிக்கிறார்போல் ஒரு காட்சி. இத்தனை உயரமா? என்று புரூஸ் லீயே தயங்கினார். அப்போது, ‘நான் குதிக்கிறேன்’ என்று முன் வந்தார் ஒரு துறு துறுப்பான ஸ்டண்ட் நடிகர். குதித்தார். ஒரே டேக்கில் ஷாட் ஓகே ஆனது.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஸ்டண்ட் நடிகரே ஆக்சன் ஹீரோவாக ‘ஸ்நேக் இன் தி ஈகிள் ஷேடோ’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் ஏறுமுகம்தான். 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். அவர்தான் ஜாக்கிசான். வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என அவர் அன்று துணிச்சலாக குதித்ததால்தான் இன்று அவர் சூப்பர் ஹீரோ!
முதலாம் உலகப்போர் நடந்த சமயம் . பிரெஞ்சு நாட்டில் பவான்கரே என்ற கணிதப் பேராசிரியர் இருந்தார். அவர் அப்போது பிரெஞ்சு தலைநகரான பாரீஸில் வசித்து வந்தார். அப்பொழுது அவர் குடியிருந்த வீட்டைச் சுற்றி இரவும் பகலும் ஜெர்மன் விமானங்கள் குண்டு மழை பொழிந்துகொண்டிருந்தன. பவான்கரேயின் நண்பர்கள் எல்லாம் இதனால் திகிலடைந்து போனார்கள். ஆனால், பவான்கரே மட்டும் கவலை இல்லாமல் எப்போதும்போல முகமலர்ச்சியோடு உற்சாகமாக காணப்பட்டார்.
குண்டுச் சத்தத்தால் மக்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். உயிர் பிழைக்க வீட்டை விட்டு ஓடி அங்குமிங்கும் அலைகிறார்கள். அதனால் உடல் இளைத்துப் பரிதாபமாகக் காட்சியளிக்கிறார்கள். ஆனால், நீங்கள் மட்டும் எப்போதும்போல மகிழ்ச்சியுடன் காட்சியளிக்கிறீர்களே, அதன் ரகசியம் என்ன?" என்று ஒரு பத்திரிகை நிருபர் பவான்கரேயைக் கேட்டார்.
அதற்கு பவான்கரே சொன்னார், "அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நான் ஒரு கணித அறிஞன். எப்போது எது நடக்கும் வாய்ப்பு அதிகம் என்று கணிக்கக்கூடிய ப்ராபபிளிட்டீஸ் (சம்பவிகிதக்கணக்கு) எனக்குத் தெரியும். அதன்படி என் தலைமீது குண்டு விழக்கூடிய சம்பவ விகிதம் மிகவும் குறைவு. இந்த உண்மை எனக்குத் தெரியுமாதலால் நான் கவலைப்பட்டு அங்குமிங்கும் ஓடவும் இல்லை, பயப்படவும் இல்லை" என்றார்.
ஒரு நாள் விவேகானந்தர் லண்டனில் உள்ள அவரது நண்பரின் இல்லத்துக்கு சென்று இருந்தார். அது இயற்கை வளம் கொண்ட பண்ணை வீடு. அப்போது விவேகானந்தரும் அவரது நண்பரும் மற்றும் நண்பரின் மனைவியும் காலாற நடக்க ஆரம்பித்தனர். அப்போது அந்த பண்ணையில் இருந்த மாடு தன் கட்டை அவிழ்த்துகொண்டு வேகமாக விவேகானந்தரை நோக்கி வந்தது இதை பார்த்த நண்பனின் மனைவி அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். நண்பர் மாடு கிட்டவரவே வேலி ஒன்றை நோக்கி ஓட்டம் பிடித்தார். மாடும் ஓடும் அவரின் பின்னால் துரத்த ஆரம்பித்தது. ஆனால், விவேகானந்தர் மாத்திரம் எந்தச் சலனமும் இன்றி நின்ற இடத்திலேயே நின்றார்.
அதன்பின் அங்கு வேலை செய்பவர் மாட்டைக் கட்டினார். நண்பரின் மனைவியும் மயக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டார். நண்பர், விவேகானந்தரைப் பார்த்து கேட்டார் “எவ்வாறு பயமின்றி அதே இடத்தில் நின்றீர்கள்?” அதற்கு விவேகானந்தர் “நம்மை நோக்கி ஒரு பிரச்னை வருகின்றபோது, அது மரணமே ஆனாலும், சமாளித்து விடலாம் என்ற மன உறுதியுடன் இருந்தால் ஒழிய, துன்பங்கள் நம்மை துரத்த ஆரம்பித்துவிடும்” என்றார்.
இக்கட்டான சூழ்நிலையில் நமது நம்பிக்கை மட்டுமே நம்மை முன்னேறிச் செல்ல உதவும். தீர்வுகள் இல்லாமல் எந்த பிரச்னையும் வருவதில்லை. அனைத்திற்கும் தீர்வும் உண்டு. மாற்றம் வரும் என்பதை நம்ப வேண்டும். நம்மை சுற்றி எழும் எதிர்மறை பேச்சுகளை காது கேளாதது போல் இருந்து கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். மனக் குழப்பம், மனச்சோர்வு நேரத்தில் நமது மூளையில் சுரக்கும் இரசாயனம் நம்மை நிலைகுலையச் செய்து, வாழ்க்கையில் ஒரு பயத்தை ஏற்படுத்தும். அந்த நேரத்தில்தான் நாம் நிலைகுலையாமல் சிந்தித்து மேலே எழ வேண்டும்.
எந்தவொரு நிகழ்வுக்கும் விளைவுகள் இரண்டே இரண்டுதான். ஒன்று வெற்றி, மற்றொன்று தோல்வி. வெற்றி அடைந்தால் வெற்றிக்கு நன்றி சொல்லுங்கள். வெற்றிக்கு காரணமானவர்களுக்கும் நன்றி சொல்லுங்கள். தோல்வி ஏற்பட்டால் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.