நாம் பாராட்டுவதில் கலப்படம் இல்லாமல் பாராட்டவேண்டும். உதாரணமாக, "உங்கள் பையனை நேற்று பார்த்தேன். அமைதியாக இருக்கிறான். ஆனால் ஏன் எதைக் கேட்டாலும் தெரியாது தெரியாது என்கிறான். சுறு சுறுப்பையும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்." என்று அட்வைஸ் செய்வார்கள்.
இதைக் கேட்ட பெற்றோர்க்கு மகன் அமைதியானவர் என்ற பாராட்டு எண்ணம் வருமா? எதுவும் தெரியாதவனாக இருக்கிறான் என்ற எண்ணம் மேலோங்குமா.? இத்தகைய பாராட்டுக்கள் கசப்பினை ஏற்படுத்தும்.
கலப்படம் இல்லாத பாராட்டு என்பது ஒருவரின் நல்ல உணர்வுகளைத் தூண்ட வேண்டும். பாராட்டும்போது எதிர்மறையான கருத்தைக் கூறாமல் இருக்க வேண்டும். நேர்மறை வார்த்தைகளால் பாராட்டப்படும்போது மூளையின் ஒரு பகுதியான ஹைபோதலாமஸ் தூண்டப்பட்டு மகிழ்ச்சிக்கான டோபோமைன் ஹார்மோன் சுரப்பதால் மனம் மகிழ்ச்சியாகி செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது.
நீங்கள் ஒருவரைப் பாராட்டும்போது அவருக்கான முயல்வளையாக இருக்கிறீர்கள். அது என்ன முயல்வளை?. ஆபத்துக்குப் பயந்து முயல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். தன் வளைக்குள் புகுந்ததும் பாதுகாப்பாக உணரும். மனித மனம் சங்கடம் வரும்போது சாய்ந்து கொள்ள மட்டுமல்ல, சந்தோஷம் வரும்போதும் யாருடைய பாராட்டையாவது தேடும். எந்த உறவோ நட்போ உங்கள் மனதில் இடம் பிடித்து உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் தருகிறதோ அதுவே உங்களது முயல் வளை எனப்படுகிறது.
ப்ரைமரி ஸ்கூல் டீச்சர் ஒருவர் தன் வகுப்பில் உள்ள அத்தனை மாணவர்களின் பெயரையும் ஒரு பேப்பரில் எழுதி அனைவரிடமும் காபி எடுத்துத் தந்தார். ஒவ்வொரு மாணவனும் தன்னைத் தவிர மற்ற அனைவரிடமும் பிடித்த 3விஷயங்களை எழுதுமாறு சொன்னார். பிறகு ஒவ்வொருவரும் அவரைப்பற்றி மற்றவர்கள் எழுதியதை உரக்கப் படிக்கச் சொன்னார். அதை வாசிக்க வாசிக்க ஒவ்வொரு மாணவனுக்கும் தன் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் உயர்வான அபிப்ராயம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதனால் பிறர் சொன்னதை அடைய முயற்சித்து அனைவருமே நல்ல மதிப்பெண்கள் பெற்றனர்.
அந்த பாராட்டின் தாக்கம், அங்கே படித்த மாணவன் ஒருவன். ராணுவத்தில் நாட்டின் மிக உயர்ந்த விருதினை வாங்கியபோது தான் பத்திரப்படுத்திய காகிதத்தைக் காட்டினார். அது அவன் பள்ளி ஆசிரியை அன்று பள்ளி மாணவர்களை எழுதச் சொன்ன தாளின் நகல். பள்ளியில் படிக்கும்போது சக மாணவர்கள் அவன் மீது வைத்திருக்கும் நல்லெண்ணங்களே இன்று நான் பெறும் பதக்கத்திற்கு மூலதனமாக அமைந்திருக்கிறது என்று கூறி நெகிழ்ந்தாராம். நேர்மறையாக நீங்கள் பாராட்டும்போது உங்களைச் சுற்றிலும் எப்போதும் மகிழ்ச்சி மலர்ந்திருக்கும்.