"I am only one, but I am one. I cannot do everything, but I can do something. And I will not let what I cannot do interfere with what I can do."
நான் ஒருவனே, ஆனால் ஒருவன். என்னால் எல்லாவற்றையும் செய்ய இயலாது, ஆனால் சிலவற்றைச் செய்ய முடியும். ஆனால் என்னால் செய்ய முடிந்தவற்றில் செய்ய இயலாததைக் குறுக்கிட அனுமதிக்க மாட்டேன்."-- Edward Everett Hale.
எட்வர்ட் எவரெட் ஹேல் ஒரு அமெரிக்க எழுத்தாளர், வரலாற்றாசிரியர் மற்றும் யூனிட்டேரியன் மந்திரி ஆவார், உள்நாட்டுப் போரின்போது யூனியனுக்கு ஆதரவாக அட்லாண்டிக் மாத இதழில் வெளியிடப்பட்ட "தி மேன் வித்தவுட் எ கன்ட்ரி" போன்ற அவரது எழுத்துக்களுக்கு மிகவும் பிரபலமானவர். வெற்றியாளரான இவரின் கூற்று நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிக்கு ஆட்களை எடுக்கும் தேர்வு நடைபெற்றது. மற்ற பணிகளுக்கு ஏற்ற ஆட்களை தேர்வு செய்து இறுதியில் கேஷியர் பணிக்கு இருவர் போட்டியிட்டனர். இருவரும் சமமான திறமை கொண்டவர்கள் என்பதால் தேர்வு பணியில் இருந்தவர்களுக்கு யாரைத் தேர்வு செய்வது என்று தெரியவில்லை.
அப்போது அங்கு முதலாளி வந்தார் விஷயம் என்ன என்று கேட்டார். இருவரையும் அழைத்து ஒவ்வொருவராக உள்ளே கூப்பிட்டார். பின் வெளியே வந்தவர் குறிப்பிட்ட ஒருவரை காண்பித்து இவருக்கே அந்த வேலையைத் தாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார்.
குழுவில் இருந்த ஒருவர் அவரிடம் சென்று "எப்படி இவரை தேர்வு செய்தீர்கள்?"என்று கேட்டார்.
அவர் சொன்னார் "நீங்கள் பணத்தை கையாளும் பணியில் பொறுப்புடன் இருக்க வேண்டும். பணியின்போது குறுக்கிட்டு நான் வந்து உங்களிடம் ஒரு வேலை தந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?’’
இதைக் கேட்டதும் ஒருவர் சொன்னார் "நீங்கள் இந்த கடைக்கு முதலாளி நீங்கள் சொல்வதை கேட்டுத்தான் ஆகவேண்டும். அதனால் முதலில் நீங்கள் சொல்வதை கேட்டுவிட்டு பின் எனது பணிக்கு செல்வேன்" என்றார்.
மற்றவர் சொன்னது "நீங்கள் இந்த கடைக்கு வேண்டுமானால் முதலாளியாக இருக்கலாம். ஆனால் என்னுடைய பணிக்கு அல்ல. கவனமாக செய்ய வேண்டியது என்னுடைய கடமை. ஆகவே கவனம் சிதறும் எதையும் செய்யமாட்டேன். பணி நேரம் முடிந்ததும் நீங்கள் சொல்வதை செய்வேன். அதிக சுமைகளால் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது."
"இவர்தான் காசாளர் பணிக்குத் தகுந்தவர். சரிதானே?"
இதே போல் இன்னொரு சம்பவம். ஒரு கல்யாண நிகழ்வில் அனைத்துப் பொறுப்புகளையும் தானே ஏற்றுக்கொண்டார் ஒருவர். அவர் சமைப்பதற்காக ஏற்பாடு செய்தவர் வராமல் வேறு ஒருவர் வந்து கல்யாண சமையலையே சொதப்பி விட்டிருந்தார். இவர் பல வேலைகளில் இருந்ததால் இந்த விஷயம் அவரின் கவனத்துக்கு வராமல் பந்தி பரிமாறும் போதுதான் தெரிந்தது.
வந்தவர்கள் வெகு ஜோராக இருந்த ஸ்டேஜ், வரவேற்பு போன்றவைகளை பாராட்டாமல் கல்யாண சாப்பாடு சுமாராக இருந்ததை மட்டும் குறிப்பிட்டு சொல்லிச் சென்றனர்.
இவரை நம்பி பணியை தந்தவர் இவரை அழைத்து "ஏம்பா எல்லாத்தையும் நானே செய்யறேன்னு நீ சொன்னப்பவே நான் உஷாராக இருந்திருக்க வேண்டும். உன்னால் முடிந்ததை மட்டும் செய்திருந்தால் இருவருக்கும் சந்தோஷம் கிடைத்திருக்கும். இப்படி சொதப்பி இருக்காது. சரி இனிமேலாவது அதிக சுமையை ஏத்துக்காத" என்று கடிந்து புத்திமதி கூறினார்.
வெற்றி என்பது அவசியம்தான். ஆனால் அதிக சுமையின் காரணமாக வரும் அரைகுறை வெற்றி நமக்கு பின்னடைவையேத் தரும். இதை உணர்ந்து நம்மால் செய்ய முடியும் என நம்பும் செயல்களில் மட்டும் கவனம் வைத்தால் வெற்றிகிட்டும்.