ஒரு செயலை துணிந்து செய்ய வேண்டும் என்றால் சிலர் குறைபட்டுக்கொள்வார்கள், என்னை உற்சாகப்படுத்தி தைரியமூட்ட யாரும் இல்லை. வீட்டு வேலைக்கே நேரம் சரியாக போய்விடுகிறது. அதனால்தான் நான் எதையும் செய்யாமல் அப்படியே இருக்கிறேன் என்று கூறுவதைக் கேட்கலாம்.
தொடர்ந்து நாம் விரும்பும் செயலை நாமாக செய்து கொண்டுதான், நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு நேரம், காலம் என மற்றவர்களின் உதவியை நாடுவது என்பது வாழ்க்கையில் சரிப்பட்டு வராது. மற்றவர்கள் இவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு வெற்றிக் கொடியை எப்படி நாட்டினார்கள் என்பதை இப்பதிவில் காண்போம்!
பால கங்காதர திலகருக்கு 'தேசியம் 'என்ற நூலை சிறையில் இருந்த போதுதான் எழுதி முடித்தார். ஜவஹர்லால் நேருவும் தன் சுயசரிதையை அங்கேதான் எழுதினார். அமெரிக்காவின் எதார்த்த உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பிய தாமஸ் பெயின், பிரெஞ்சு நாட்டு ஜெயிலில் இருந்த போதுதான் சுதந்திர உணர்வைத் தூண்டும் 'பொது அறிவு' என்ற நூலை எழுதினார். ஓ ஹென்றி சிறுகதை மன்னன் எனப்படுகிறார். அவர் சிறைவாசம் செய்தபோது தான் சிறுகதைகளை எழுதத் தொடங்கினார்.
இவ்வளவு ஏன் சர்வாதிகாரியான ஹிட்லர், தான் சிறையில் இருக்கும் போதுதான் தன்னுடைய 'மெயின் காம்ப்' என்ற நூலை எழுதினார். இவர்களை எல்லாம் படித்து நினைவில் வைத்துக் கொண்டு, நாம் நம் முயற்சியைத் தொடர்ந்து செய்துக் கொண்டே இருந்தோமானால், சந்தர்ப்ப சூழ்நிலை எல்லாம் நம்மைத் தேடி வரும் என்பது உண்மை. நாம் தேடிப் போக வேண்டிய அவசியம் இருக்காது.
அந்த அளவுக்கு அனுபவம் மிக்கவர்களாக ஆகிவிடுவோம். ஆதலால் எப்பொழுதும் தொடர் முயற்சியில் இருந்து கொண்டே, எந்த இடத்தில் இருந்தாலும் துணிந்து, தான் நினைத்த எந்த செயலிலும் ஈடுபடுபவர்களின் வாழ்வில் தான் வெற்றி சாமரம் வீசும். அந்த ஊக்கம் தான் அனைத்திற்கும் சிறந்த ஆக்கமாகும் என்பதை உணர்வோம்! செயலில் இறங்குவோம்!