வெற்றியாளர்கள் ஆகவேண்டும் என்கிற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கிறது. வாழ்வில் வெற்றி அடைந்து மிகப் பிரபலமாக இருக்கும் வெற்றியாளர்கள் கடைப்பிடிக்கும் இந்த ஆறு விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
1. வேலையை தள்ளிப் போடாமல் அன்றைய வேலைகளை அன்றே முடித்தல்:
வெற்றியாளர்கள் ஒருபோதும் தங்களுடைய வேலைகளை தள்ளிப் போடுவதே இல்லை. ஒரு நாளின் ஆரம்பத்தில் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு பட்டியல் இட்டுக் கொள்கிறார்கள். அன்றைய நாள் முடிவதற்குள்ளாக வேலைகளை முடித்து விடுவார்கள். நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப் போடுவதோ அப்புறம் பார்க்கலாம் என்ற நினைப்பதோ கிடையாது. அதனாலேயே அவர்கள் வெற்றியாளராக திகழ்கிறார்கள்.
2. வேலைகளைப் பிரித்துக் கொடுத்தல்;
அவர்கள் இழுத்துப் போட்டுக் கொண்டு எல்லா வேலையையும் தானே செய்வதில்லை. தனக்குரிய லட்சியத்தை நினைத்து அதற்கான செயல்பாடுகளில் தான் ஈடுபடுவார்கள். தங்களுடைய பெரிய குறிக்கோளை நோக்கியே செயல்படுகிறார்கள். சின்ன சின்ன வேலைகளை அவர்கள் செய்வதில்லை. உதாரணமாக தங்கள் காரை தானே ஓட்டுவது இல்லை. அதற்காக ஒரு பணியாளரை நியமித்து விட்டு பின் சீட்டில் அமர்ந்து கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்கான சிந்தனையில் இருப்பார்கள்.
3. எளிதில் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது;
பொதுவாக ஒரு சாதாரண மனிதன் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களில் சட்டென உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொள்வது, உடனே ரியாக்ட் செய்வது என்று இருப்பார். ஆனால் வெற்றியாளர்களும் பெரும் பணக்காரர்களும் அப்படி செய்வதில்லை. தன்னைச் சுற்றிலும் என்ன நடந்தாலும் அதை ஒரு பக்குவப்பட்ட மனநிலையிலேயே பார்க்கிறார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுவதே இல்லை. அவர்களுக்கு தெரியும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எதையுமே சரியாக சிந்திக்கவும் முடியாது செய்யவும் முடியாது என்று. எனவே அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை மிகவும் பக்குவமாக கையாளுகிறார்கள்.
4. தன் பணியாளர்களை நம்புதல்:
அவர்கள் தமக்கு கீழே பணிபுரியும் பணியாளர்களை மனதார நம்புகிறார்கள். அவர்களுக்கென்று தேவையான பொறுப்புகளை கொடுத்து விட்டால் அவர்களை சுயமாக சுதந்திரமாக செயல்பட அனுமதியும் தருகிறார்கள். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதில்லை. அதனால் அவர்களை சுற்றி ஒரு நல்ல நம்பிக்கையான கூட்டம் இருக்கிறது, அவர்களுடைய வார்த்தைகளை நிறைவேற்றுவதற்கு.
5. வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்
அவர்களின் சிந்தனை எப்போதும் பிறரிடம் இருந்து வித்தியாசமாகவே இருக்கும். ஒரே கோணத்தில் அவர்கள் ஒரு பிரச்னையைப் பற்றி அலசுவதில்லை. பலதரப்பட்ட கோணங்களையும் பலதரப்பட்ட மாற்று வழிகளையும் சிக்கல்களுக்கான தீர்வுகளையும் புத்திசாலித்தனமாக யோசிக்கிறார்கள். அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங் என்கிற முறையை கையாளுகிறார்கள். பிறர் செய்வதில் இருந்து மிகவும் வித்தியாசப்பட்டு இவர்கள் செயல்கள் செய்வதனால்தான் வெற்றியாளர்களாகவும், பணக்காரர்களாகவும் திகழ்கிறார்கள்.
6. வாய்ப்புகளை தாங்களே உருவாக்குகிறார்கள்;
சாதாரண மனிதனைப் போல இவர்கள் வாய்ப்பு களுக்காக காத்திருப்பதில்லை. தனக்கான வாய்ப்பு வரும். அதுவரை பொறுமையாக இருப்போம், வாய்ப்பு வந்த பின் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணம் இவர்களுக்கு இருப்பதில்லை. தானாக வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். அதற்கான திட்டமும் செயல் பாடுகளும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதை செயல்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள்.