Attitude என்பது ஒருவரின் நடத்தையைக் குறிக்கும். ஆனால் இப்போது அதனை ஈகோவுடன் சேர்த்து விட்டார்கள். ஒருவர் உங்களை ரொம்ப ஆட்டிட்யூட் என்று சொன்னால், ‘நான் ஒன்றும் அப்படியில்லை’ என்று உங்களை யாரிடமும் நிரூபிக்கத் தேவையில்லை. ஏனெனில் ஆட்டிட்யூட் ஒன்றும் தவறான நடத்தையோ வார்த்தையோ இல்லை. அதனை அப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு ஆட்டிட்யூட் இல்லையென்றால் அவர் ஒரு சுயமரியாதையை விரும்பாத மனிதர் என்பதே உண்மை. உண்மையில் ஆட்டிட்யூட் என்பது உங்களுடைய ‘சூப்பர் பவர்’. எந்த வகையில் என்பதைப் பார்ப்போம்.
ஒரு குழுவில் அனைவரும் சேர்ந்து பணியாற்றும்போது அனைவரின் யோசனை பகிரப்படும். அப்போது ஒருவர் அவரது யோசனையே சரி என்று கூறுவார். அதுவும் ஒருவகையான ஆட்டிட்யூட் தான். அதாவது தனது யோசனையின் மேல் உள்ள அளவுக் கடந்த நம்பிக்கை. அதன் காரணமாக அவர் ஒருமுறையாவது அந்த யோசனையை நடைமுறையாக்குவதற்குப் போராடுவார்.
அதன்படி நாமும் அவருக்கு ஒத்துழைப்பதில் எந்த தவறும் இல்லை. வெற்றியில் முடிந்தால் நன்மை அனைவருக்குமே. அதேபோல் தோல்வியில் முடிந்தாலும் எப்படி வெற்றிபெறலாம் என்ற அடுத்த முயற்சியில் இறங்குவதில் தவறும் இல்லை. ஒருமுறை முயற்சி செய்துப் பார்ப்பதில் என்ன தவறு. உங்களுடைய யோசனை தவறு என்று கூறிக்கொண்டே இருப்பதுதான் அடம் பிடிப்பது அதாவது ஈகோ. அதேபோல் ஒரு முயற்சி தோல்வியில் முடியும். அதனால் செய்ய வேண்டாம் என்று அடம்பிடிப்பதும் ஈகோ. ஒரு முயற்சியை செய்து பார்த்தே ஆக வேண்டும் என்பது ஆட்டிட்யூட். நாம் எதற்காக அடம்பிடிக்கிறோம் என்பதே ஈகோவையும் ஆட்டிட்யூடையும் முடிவு செய்யும்.
அதேபோல் ஒருவர் நமக்கு அதிகம் தொந்தரவு கொடுக்கும்போது அதனை நாம் தைரியமாக கடப்பதோடு அவர்களை எதிர்த்து பேசினால் நமது நடத்தையின் மேல் குற்றம் சாற்றி திமிரு என்று கூறுவார்கள். இனி அதனை காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். இந்த இடத்திலும் உங்கள் ஆட்டிட்யூட் உங்களைத் தொந்தரவிலிருந்து காப்பாற்றுகிறது. அப்படியிருக்க, ஆட்டியூட் எப்படி ஒரு கெட்ட விஷயம் ஆகும்.
ஒரு விஷயத்தை யாருமே செய்யமுடியாது என்று கூறினாலும் அது ஒரு எட்டாத உயரத்தில் இருக்கும் இலக்கு என்று யார் கூறினாலும் நீங்கள் முடியும் என்று முயற்சி செய்வீர்கள். அப்போது அவர்களிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் ஒரு பெயர் ‘ஆட்டிட்யூட்’. முடியாது என்று பலர் கூறிய விஷயத்தை முடித்து காண்பிப்பவனே சாதனையாளன் ஆகிறான். அப்போது அந்த ஆட்டியூடாக இருப்பவன் தானே சாதிக்கிறான். அப்படியிருக்கையில் அது எப்படி கெட்ட நடத்தையாகும்.
ஆனால் இந்த பிடிவாதம் நீங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினால் மட்டுமே தோன்றும். இந்த ஆட்டிட்யூட் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நீங்களே தைரியமாக எதிர்க்கொள்ள உதவுகிறது. ஆகையால் புது புது வேலைகளை செய்யுங்கள். பல இடத்திற்கு வேலைக்கு செய்யுங்கள். இது உங்கள் தைரியத்தைக் அதிகரித்து ஆட்டிட்யூடை வளர்க்கும்.
இனி உங்களை யாராவது ‘ரொம்ப ஆட்டிட்யூட்’ என்று கூறினால், ‘ஆம்! நான் ஆட்டிட்யூட்தான், ஏனெனில் நான் ஒன்றும் கோழை இல்லை ‘ என்று தைரியமாக கூறுங்கள். முக்கியமாக ஈகோ, தைரியம், ஆட்டிட்யூட் ஆகிவற்றைத் தெளிவுப்படுத்திக்கொள்ளுங்கள்.