நமது பலவீனம் என்ன தெரியுமா? நம்மளுடைய இயல்பை மாற்றுவது. அது பலரின் தோல்விக்கு காரணமாகவும் அமைகிறது. ஆனால் அதை பெரும்பாலானோர் உணர்வதில்லை.
நீங்கள் இயல்பிலேயே மகிழ்ச்சியானவர். உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறீர்கள்
அப்படியானால், சோதனை வந்தால் ஏன் பதற்றம் அடைய வேண்டும்?. ஏன் உங்கள் இயல்பை மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும்?.
இதைப் பொறுத்தவரையில், தத்துவ ரீதியாக சிந்தனையாளர் கூறும் போது, “எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்; மற்றவர்களாக மாற விரும்பாதீர்கள். உங்கள் தனித்தன்மை தான் உங்களை என்றென்றும் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும்.
அதை மறந்தால் மனித சமுதாயத்தில் நீங்கள் சரியான ஓர் உறுப்பினராக இருக்கவே முடியாது” என்கிறார்!
பல பேர் பிறரைப் பார்த்து காப்பி அடித்து’ அதுபோல் தாங்கள் இருந்தால் சிறப்புக் கூடும் என்கிறார்கள். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் இது சரியான கருத்தல்ல என்று புரியும்!
ஒரு மீன் தொட்டிக்கு அருகே ஒரு புத்த பிக்குவும் அவரது சீடரும் நின்று கொண்டிருந்தனர்.. அந்தத் தொட்டியின் விளிம்பிலிருந்த ஒரு தேள் தவறி தொட்டிக்குள் விழுந்தது.
உடனே அந்த புத்த பிக்கு தண்ணீருக்குள் கையை விட்டுத் தேளை எடுத்து வெளியே விட்டார். அப்போது அவரது கையில் தேள் கொட்டியது. மீண்டும் அந்தத் தேள் திரும்பித் தொட்டிக்குள் விழுந்தது.
உடனே சற்றும் தாமதிக்காமல் கையைத் தொட்டிக்குள் விட்டு தேளை எடுத்து வெளியே விட்டார். இந்த முறையும் தேள் கொட்டாமல் இல்லை மறுபடியும் தேள் தொட்டிக்குள் விழ ,புத்தபிக்கு காப்பாற்றுகிறார்.
அப்போதும் தேள் கொட்டுகிறது.பொறுக்க முடியாமல் புத்த பிக்குவின் சீடர் கேட்கிறார்,அது தான் உங்களைக் கொட்டுகிறதே அதை ஏன் காப்பாற்றுகிறீர்கள்?
அதற்கு புத்த பிக்கு,
''கொட்டுவது என்பது தேளின் இயல்பு அதைக் காப்பாற்றுவது என்னுடைய இயல்பு. ஏன் என்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.
எந்த சோதனையும், துன்பங்கள் வந்தாலும் உங்களின் இயல்பையும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்பது தான் இந்தக் கதையில் சொல்லப்படும் நீதி.
மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ளாவிட்டாலும். நீங்கள் நீங்களாகவே இருங்கள். மனிதர்களைத் திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு.இந்த மனிதர்களிடம் , எட்ட முடியாததை விட்டு விடுங்கள்.. நீங்கள் அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்.
யாருக்காகவும் எப்பொழுதும் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளாதீர்கள் அப்படி இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு வாழ்க்கையில் அதுதான் மிகப் பெரிய பலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.