1. விடாமுயற்சி
ஒருவர் வாழ்வில் வெற்றி பெறுகிறார் என்றால் அதற்கு அதிர்ஷ்டமோ பணமோ அல்லது செல்வாக்கு மட்டும் காரணம் அல்ல. அவரது முயற்சி அதிலும் விடாமுயற்சி தான் மிகவும் முக்கியமானது. சிலர் ஒரு செயலைத் தொடங்கி செய்யும்போது அதில் தயக்கமும் பயமும் தோன்றி பாதியிலேயே கைவிட்டு விடுவார்கள். ஆனால் தோல்வியுற்றாலும் மீண்டும் மீண்டும் விடாமுயற்சியுடன் அந்த செயலை செய்யும் போது மட்டுமே அவருக்கு வெற்றி கிடைக்கிறது. அவர் தடைகளை தாண்டி இலக்கை அடைய முடியும்.
2. என்ன தேவை?
ஒருவர் தன்னுடைய சொந்த வெற்றியை தானே வரையறுத்துக் கொள்ள வேண்டும். சமூக விதிமுறைகள் அல்லது பிறரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தக்கூடாது. பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பு தரலாம். ஆனால் அவருடைய ஆசைகளை நாம் நிறைவேற்ற முடியாது. தனக்கு என்ன தேவை என்பதில் அவர் கவனமாக இருக்க வேண்டும். தன்னுடைய வெற்றி எதில் என்று அவர் சரியாக நிர்ணயித்துக் கொண்டால் மட்டுமே அவருக்கு வெற்றி வந்து சேரும்.
3. வளர்ச்சி மனநிலை;
வளர்ச்சி மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட மற்றும் தொழில் முறை முன்னேற்றத்திற்கு வளர்ச்சி மனப்பான்மை மிகவும் அவசியம். தன்னுடைய திறனில் நம்பிக்கை வைக்கும் அதே நேரம் சவால்களை எதிர்கொண்டு தோல்விகளை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக நோக்க வேண்டும். அது நிச்சயம் அவருக்கு வளர்ச்சியை பெற்றுத் தரும்.
4. சரியான முடிவெடுக்கும் திறன்;
முடிவெடுப்பதற்கு முன்பு நன்கு யோசிக்க வேண்டும். பிறருடைய கருத்துக்களை கேட்டாலும் தகுந்த ஆலோசனைகள் பெற்றாலும் முடிவு எடுப்பது நீங்கள் ஆகத்தான் இருக்க வேண்டும். அதில் உள்ள அபாயங்களை நன்றாக அலசி ஆராய்ந்து பின்பு சரியான முடிவு எடுக்க வேண்டும். அதன் பின்பு என்ன சிக்கல் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் தைரியமும் ஆற்றலும் வேண்டும்.
5. தோல்வியிலிருந்து மீண்டு வருதல்;
முயற்சியில் தோல்விகள் வருவது சகஜம். அதற்காக மனம் சோர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் அதே நேரம் தோல்வியிலிருந்து விரைவில் மீண்டு எழுவதும் மிகவும் முக்கியம். மீண்டும் அதே உற்சாகத்துடன் தன் பணியை செய்யும் போது வெற்றி தேடி வரும்.