கேம் ஆஃப் த்ரோன் என்றொரு பிரபலமான ஆங்கில தொடர். இக்கதையின் சாராம்சமே யார் அடுத்து அரியணையை ஏறப்போவது என்பதேயாகும். இக்கதையில் பெரிய பெரிய கேரக்டர்கள் அடித்து கொண்டும், காலை வாரி விட்டுக்கொண்டும். பழி, ஏமாற்றம், துரோகம், ரத்தம் என்று அரியணை சண்டைக்கு தேவையான எல்லாமே இக்கதையில் உண்டு.
ஆனால் இக்கதையின் முடிவு ரசிகர்கள் பலரை ஏமாற்றமடைய செய்தது. இக்கதைக்கு இப்படியொரு முடிவு இருந்திருக்க கூடாது என்று வருத்தப்பட்டனர். அப்படி என்னதான் ஆனது.
கடைசியில் அரியணை ஏறியது யார் என்று பார்த்தால், சண்டை போடத் தெரியாத, எந்த ரத்தமும் பார்க்காத, ராஜதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கதாபாத்திரம்தான். அங்கே பயங்கரமான போர்கள் நடந்துக்கொண்டிருந்தபோது இங்கே உட்கார்ந்து மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு கதாபாத்திரம்தான் பிரான்டன் ஸ்டார்க்.
பிரான்டன் ஸ்டார்க்கிற்கு பதவி சுலபமாக கிடைப் பதற்கான காரணம், அவனுக்கு முன்னே இருக்கும் அரியணை ஏறத் தகுதியானவர்கள் அனைவருமே அடித்து கொண்டு இறந்ததாலேயே ஆகும். எனவே அவனுக்கு எந்த கஷ்டமும் இன்றி பதவி கிடைத்துவிட்டது. இதில் அவனை எப்படி தவறு சொல்ல முடியும்.
ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி புரிவதற்காக 'டிவைட் அன்ட் ரூல்' என்றொரு பாலிசியை கடைப்பிடித்தார்கள். அதாவது பெரிய பெரிய ராஜாக்களுக்கு நடுவே சண்டை ஏற்படுத்தி அவர்கள் அடித்துக் கொண்டு தோற்ற பிறகு இவர்கள் நடுவிலே புகுந்து பொறுப்பை எடுத்துக்கொள்வது.
இதிலிருந்து நாம் கற்க வேண்டியது என்னன்னா, இது போன்ற விஷயங்கள் நமக்கு எங்க நடக்கும். ஆபிஸ் போன்ற வேலை பார்க்கும் இடங்களில் இது போன்று பதவிக்காக அடித்துக்கொள்வார்கள். அப்படி ஒரு சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டால், அமைதியாக இருங்கள். எந்த பிரச்னையிலும், சண்டையிலும் தலையிடாதீர்கள்.
அவர்கள் எதற்காக போட்டி போடுறாங்களோ அதற்காக அவர்களுக்குள் அடித்துக்கொண்டு விலகிய பிறகு நீங்கள் போய் அந்த பதவியை பெற்றுக் கொள்ளலாம்.
இது கேட்பதற்கு என்ன நேர்மையில்லாதது போல இருக்கிறதே என்று தோன்றினாலும், இங்கே நீங்கள் யாரையும் ஏமாற்றவில்லை, யாருடைய காலையும் வாரி விடவில்லை. தக்க சமயத்திற்காக காத்திருப்பது என்பது தவறாகாது. இதற்கு பெயர் தான் ராஜ தந்திரம். நம் இதிகாசங்களில் ராஜதந்திரத்திற்கு பஞ்சமே இருந்ததில்லை. ராஜதந்திரத்தால் ஆட்சியை பிடித்த கதையையெல்லாம் நாம் அறிவோம்.
சிலர் வாழ்க்கையில் எந்த பிரச்னை வந்தாலும் அமைதியாகவே இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்கள் பிரச்னையை கண்டு ஒதுங்கி ஓடுவதாக அர்த்தமில்லை. சரியான தருணத்திற்காக காத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். நாம் வாழும் வாழ்க்கையை போர்க்களத்துடன் ஒப்பிடுவீர்களானால், அதற்கு ராஜதந்திரம் என்பதும் மிகவும் அவசியமாகும்.